போர் என்பது பூமியின் உயிரினங்களுக்கு மரணத்தின் முன்னறிவிப்பு – நோம் சாம்ஸ்கி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மனிதகுலத்தின் பெரும்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. யாராலும் தூண்டிவிடப்படாத, நியாயமற்ற தாக்குதலாகும் இது. 21 ஆம் நூற்றாண்டின் முக்கியப் போர்க்குற்றங்களில் ஒன்றாக இது வரலாற்றில் இடம்பிடிக்கும் என தொடர்ந்து வரும் Truthout க்கான பிரத்யேக பேட்டியில் நோம் சாம்ஸ்கி வாதிடுகிறார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கோள் காட்டியது போன்ற அரசியல் காரணங்களை, இறையாண்மை கொண்ட தேசத்திற்கு எதிரான படையெடுப்பை நியாயப்படுத்தும் வாதங்களாகப் பயன்படுத்த முடியாது. இருப்பினும், இந்த பயங்கரமான படையெடுப்பை எதிர்கொள்ளும் வகையில், போர்ப்பரவலுக்கு பதிலாக, துரிதமான ராஜதந்திர நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளவேண்டும். தவறும் பட்சத்தில் “வெற்றியாளர்களே இல்லாத பூமியின் உயிரினங்களுக்கு இது மரணத்தின் முன்னறிவிப்பாக அமையக்கூடும்.” என சாம்ஸ்கி கூறுகிறார். அரசியல் பொருளாதாரப் பேராசிரியரும், பத்திரிகையாளருமான சி. ஜே. பாலிக்ரோனியோ, நோம் சாம்ஸ்கியுடன் இம்முழு உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார்.
நோம் சாம்ஸ்கி, தற்போது உயிருடன் இருக்கும் மிக முக்கியமான அறிவுஜீவிகளில் ஒருவராக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டவர். மொழியியல், தர்க்கம் மற்றும் கணிதம், கணினி அறிவியல், உளவியல், ஊடக ஆய்வுகள், தத்துவம், அரசியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவார்ந்த மற்றும் அறிவியல் விசாரணைகளில் அவரது பணி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், அவருடைய அறிவாளுமை கலிலியோ, நியூட்டன் மற்றும் டெஸ்கார்ட்டுடன் ஒப்பிடப்படுகிறது. அவர் 150 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். சிட்னி அமைதிப் பரிசு, கியோட்டோ பரிசு (ஜப்பானின் நோபல் பரிசுக்கு சமம்) உள்ளிட்ட மிகவும் மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றவர். உலகின் புகழ்மிக்க பல்கலைக்கழகங்களில் இருந்து டஜன் கணக்கான கவுரவ டாக்டர் பட்டங்கள் பெற்றவர். நோம் சாம்ஸ்கி தற்போது எம்.ஐ.டி யில் தகைசால் பேராசிரியராக உள்ளார்.
கேள்வி : உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பெரும்பாலான மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது. இருப்பினும் நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் மற்றும் உக்ரைன் தொடர்பான அவரது “சிவப்பு எல்லை” க்கான பாதுகாப்பு கோரிக்கைகளை வாஷிங்டன் தீவிரமாக எடுத்துக் கொள்ள மறுத்ததன் மூலம் புடின் மிகவும் கிளர்ச்சியடைந்தார் என்பதற்கான ஏராளமான அறிகுறிகள் உள்ளன. இந்த நேரத்தில் அவர் ஏன் படையெடுப்பைத் தொடங்க முடிவு செய்தார்? இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நோம் சாம்ஸ்கி : இந்தக் கேள்விக்கு திரும்புவதற்கு முன், மறுக்க முடியாத சில உண்மைகள் குறித்து நாம் உடன்படவேண்டும். மிக முக்கியமான ஒன்று, உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஒரு பெரிய போர்க்குற்றம். இது ஈராக்கின் மீதான அமெரிக்காவின் படையெடுப்புக்கும், 1939 செப்டம்பரில் நிகழ்ந்த போலந்துக்கு எதிரான இட்லர்-ஸ்டாலின் படையெடுப்புக்கும் நிகரானது. போருக்கான காரணங்களைத் தேடுவது அர்த்தமுள்ளதாக இருக்கலாம். ஆனால் இதில் எந்த நியாயமும் இல்லை.
இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம். புடினின் சிந்தனை ஓட்டங்கள் குறித்த ஏராளமான குறிப்புகள் இப்போது வெளியாகின்றன. சித்தபிரமை கற்பனைகள் அவரைப் பீடித்திருக்கின்றன என்னும் வழக்கமான கதைகளோடு, அவர் தனித்து செயல்படுவதாகவும், தன்னுடைய அரண்மனை அதிகார வர்க்கத்தினரால் சூழப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவை அனைத்தும் துல்லியமாக இருக்கலாம். ஆனால் வேறு சில சாத்தியக்கூறுகளையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். புடினும், அவருடைய நண்பர்களும் கடந்த பல்லாண்டுகளாகவே உரக்கவும், தெளிவாகவும் கூறிவருவதையே இப்போது புடினின் செயல்பாடுகள் அர்த்தப்படுத்தியிருக்கிறது எனவும் கொள்ளலாம். அமெரிக்காவில் இருக்கும் ரஷ்ய விவகாரங்களுக்கான நிபுணர்களுல் முக்கியமானவரும், ரஷ்யாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதருமான ஜேல் மேட்லாகின் கூற்றுப்படி, “நேட்டோவில் மேலும் உறுப்பினர்கள் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது. முக்கியமாக, உக்ரைன் மற்றும் ஜார்ஜியா நாடுகளை நேட்டோவில் சேர்ப்பதில்லை என்னும் உறுதி மொழியை புடின் கோரியிருந்தார். பனிப்போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நேட்டோ கூட்டணியின் விரிவாக்கம் இல்லாமல் இருந்திருந்தாலோ அல்லது ரஷ்யாவை உள்ளடக்கிய ஐரோப்பாவில் ஒரு பாதுகாப்பு கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்கு இணக்கமாக விரிவாக்கம் ஏற்பட்டிருந்தாலோ தற்போதைய நெருக்கடிக்கு எந்த அடிப்படையும் இருந்திருக்காது”. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு முன்பு மேட்லாக் எழுதியதுதான் இது. “பொதுப்புத்தியை பயன்படுத்துவதன் மூலம் இப்பிரச்னையை தீரக்கமுடியும். பொதுப்புத்தியின் எந்த அளவுகோலின்படி பார்த்தாலும், போரை விடுத்து அமைதியை உருவாக்குவதே அமெரிக்காவின் நலனுக்கு உகந்தது. ரஷ்யாவின் செல்வாக்கிலிருந்து உக்ரைனைப் பிரித்தெடுக்கும் நேட்டோவின் முயற்சி முட்டாள்தனமானது, தவறானது மற்றும் ஆபத்தானது. கியூப ஏவுகணை நெருக்கடியின் பாடத்தை இவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டோமா?
மேட்லாக் மட்டுமல்ல, ரஷ்ய நிபுணரும், முன்னாள் CIA தலைவருமான வில்லியம் பர்ன்ஸ்-ன் (இது குறித்த) முடிவுகளும் கூட இதே மாதிரியாகத்தான் இருக்கின்றன. (தூதர்) ஜார்ஜ் கென்னனின் வலுவான நிலைப்பாடும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் வில்லியம் பெர்ரி மற்றும் சர்வதேச உறவுகள் அறிஞர் ஜான் மியர்ஷெய்மர் மற்றும் இன்னும் பலரின் நிலைப்பாடும் இதுவே.
இவை எதுவும் தெளிவற்றது என்று சொல்வதற்கில்லை. முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஜூனியர் உக்ரைனை நேட்டோவில் சேர்க்க முயற்சித்த பொறுப்பற்ற செயலையும், விரிவடைந்து வரும் ராணுவ அச்சுறுத்தலை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என ரஷ்யா விடுத்த கடுமையான எச்சரிக்கையையும் விக்கிலீக்ஸின் அமெரிக்க ராணுவ ஆவணங்கள் வெளிப்படுத்தியதை அறிவோம்.
உண்மையைச் சொல்வதென்றால் இந்த முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியாது. இது புடின் மட்டும் எடுத்ததா அல்லது அவர் முக்கிய பங்கு வகிக்கும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலால் எடுக்கப்பட்டதா என்றுத் தெரியவில்லை. நியாயமான நம்பிக்கையுடன், எங்களுக்குத் தெரிந்த சில விவரங்களின்படி, திட்டமிடல் அமைப்பின் உட்புறத்தில் உயர்ந்த இடங்களில் இருப்பவர்களால் சில விவரங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. ஜார்ஜியா, முக்கியமாக உக்ரைனைப் பொறுத்த ரஷ்யாவின் சிவப்பெல்லைகள் குறித்த பாதுகாப்பு கவலைகளை அமெரிக்கா அவமதிப்புடன் நிராகரித்ததால்தான் கடந்த 25 ஆண்டுகளாக இந்நெருக்கடி உருவாகி வந்திருக்கிறது.
கடைசி நிமிடம் வரை இந்த நெருக்கடி (சோகம்) தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு காரணம் இருக்கிறது. நாங்கள் இது குறித்து மீண்டும் மீண்டும் விவாதித்தோம். புடின் ஏன் இப்போது குற்றவியல் ஆக்கிரமிப்பைத் தொடங்கினார் என்பது குறித்து நாம் விரும்பியபடி ஊகிக்கலாம். ஆனால் உடனடி பின்னணி தெளிவற்றதாக இல்லை எனச் சொல்லமுடியாது. இக்காரணங்கள் குறித்து விலகல் போக்கு மட்டுமே இருக்கிறதே தவிர அது குறித்த விவாதம் இல்லை.
ஒரு குற்றத்தால் பாதிக்கப்படுபவர்கள், அது ஏன் நடந்தது, அதைத் தவிர்த்திருக்க முடியுமா என விசாரிப்பதை, அதை ஏற்றுக்கொள்ள முடியாத துக்கமாகக் கருதுவதைப் புரிந்து கொள்வது எளிது. புரிகிறது. ஆனால் இது தவறானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதத்திலும், அவர்களின் சோகத்திற்கு பதிலளிக்கவும், இன்னும் மோசமான பேரழிவுகளைத் தடுத்திடவும் விரும்பினால், என்ன தவறு நடந்தது என்று நாம் முடிந்தவரை கற்றுக்கொள்வது புத்திசாலித்தனமானது மற்றும் அவசியமானது. வீரபிரதாப நடவடிக்கைகள் திருப்தி தரலாம். ஆனால் அவை எதற்கும் உதவப்போவதில்லை.
நீண்ட காலத்திற்கு முன்பு நான் கற்றுக்கொண்ட பாடம் நினைவுக்கு வருகிறது. 1960 களின் பிற்பகுதியில், தெற்கு வியட்நாமின் தேசிய விடுதலை முன்னணியின் (அமெரிக்க மொழியில் “வியட் காங்”) சில பிரதிநிதிகளுடன் ஐரோப்பாவில் ஒரு கூட்டத்தில் பங்கேற்றேன். இந்தோ சீனாவில் அமெரிக்கா இழைத்த கொடூரக் குற்றங்களுக்கு எதிரானப் போராட்டங்கள் நடந்த குறுகிய போராட்டக் காலம் அது. வன்முறையான எதிர்வினை மட்டுமே அமெரிக்கா இழைத்த கொடூரங்களுக்கு சரியான பதிலடியாக இருக்கும் என சில இளைஞர்கள் கோபம் பொங்கச் சொன்னார்கள். பிரதான தெருக்களில் ஜன்னல்களை உடைத்தல், ராணுவப் பயிற்சி மையங்களில் குண்டுகளை வீசுதல் இப்படி. இதற்குக் குறைவான எதனையும் அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. வியட்நாமியர்கள் இதை வேறுவிதமாக அணுகினார்கள். எதிர் வன்முறை நடவடிக்கைகளை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர். அவர்கள் ஒரு பயனுள்ள எதிர்ப்பின் மாதிரியை முன்வைத்தனர். வியட்நாமில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் கல்லறைகளில் வியட்நாமியப் பெண்கள் அமைதியாக பிரார்த்தனை செய்தார்கள். அமெரிக்காவுக்கு எதிராக எம்மாதிரியான நடவடிக்கைகளை அமெரிக்க எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டார்களோ அதில் வியட்நாமியர்களுக்கு விருப்பமில்லை. அவர்கள் உயிர்வாழ விரும்பினார்கள்.
ஏகாதிபத்திய வன்முறைக்கு இலக்காகும் மூன்றாம் உலக நாடுகளில் (தெற்கு நாடுகளில்) கொடூரமான துன்பத்திற்கு பலிகடாவாக்கப்படும் மக்களிடமிருந்து நான் நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டிருக்கிறேன். சூழ்நிலைக்கேற்ப ஒன்றை நாம் மனதில் கொள்ளவேண்டும். இந்தத் துயரம் இப்போது ஏன் ஏற்பட்டுள்ளது, இதைத் தவிர்க்க என்ன செய்திருக்கமுடியும்? இந்தப் பாடங்களை எதிர்காலத்திற்கு எப்படிப் பயன்படுத்தமுடியும்? என்பதே இப்போது நாம் கவனம் கொள்ளவேண்டியது.
கேள்வி மிக ஆழமானது. இந்த முக்கியமான விசயத்தை மறுபரிசீலனை செய்ய இங்கு நேரம் இல்லை. ஆனால் நெருக்கடிகளுக்கான தீர்வுகள் அது உண்மையானதோ அல்லது கற்பனையானதோ, திரும்ப திரும்ப துப்பாக்கிகளையே சென்றடைகிறது. ஆலிவ் இலைகளை அல்ல. ஆனால் வழிவழியாக பாதிக்கப்படும் மக்களுக்கு விளைவுகள் மோசமானவையாகவே இருக்கின்றன. செயல் அல்லது செயலின்மையால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து உயர்வாக சிந்திக்க முயற்சிப்பது எப்போதுமே பயனுள்ளதாகும். நியாயமான உணர்ச்சி ததும்பும் காலங்களில் உண்மைத்தன்மை மிக எளிதில் புறந்தள்ளப்படுகிறது என்பதை இங்கு வலியுறுத்திச் சொல்லலாம்.
படையெடுப்பிற்குப் பிந்தைய தேர்வுகள் கடுமையானவை. சில நாட்களுக்கு முன்பு எட்டிவிடக்கூடிய நிலையில் இருந்த சாத்தியக்கூறுகளுக்காக முயற்சிப்பது – உதாரணமாக ஆஸ்திரிய பாணியிலான நடுநிலைத் தன்மையைக் கொண்ட உக்ரைன், மின்ஸ்க் – II மாதிரியிலமைந்த கூட்டமைப்பு. மேற்கண்ட நிலைக்கு தற்போது முயற்சிப்பது மிகவும் கடினமானது. புடினுக்குத் தேவைப்படும் ஒரு தப்பித்தலுக்கான மாற்று அமையாவிட்டால் விளைவுகள் உக்ரைனுக்கு மேலும் பாதகமாக மாறலாம். ஒருவேளை கற்பனைக்கு எட்டாத அளவிற்கும் அது இருக்கலாம்.
நீதியிலிருந்து வெகு தொலைவில் உள்ளோம். சர்வதேச விவகாரங்களில் நீதி எப்போது வென்றுள்ளது? பயங்கரமான பதிவுகளை மீண்டும் நினைவுகூர்வது அவசியமா?
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போரின் முடிவுகள் இவ்விரண்டுக்குள் குறுக்கப்பட்டுவிட்டன.
- ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட புடினைத் தண்டிப்பதற்கு பதிலாக அவருக்கு வெகுமதியை அளிக்கும் ஒரு மோசமான விளைவு.
- அல்லது உறுதியான வாய்ப்பைக் கொண்டிருக்கும், எல்லாவற்றையும் முடிக்கும் இறுதிப்போர்.
இதற்கிடையில் கொடூரமான ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகத் தங்கள் தாயகத்தை துணிச்சலுடன் பாதுகாப்பவர்களுக்கும், பயங்கரங்களில் இருந்து தப்பிப்பவர்களுக்கும், தங்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தையும் பொருட்படுத்தாது, தங்கள் அரசின் குற்றத்தை பகிரங்கமாக எதிர்க்கும், நம் அனைவருக்கும் பாடமாகத் திகழும் ஆயிரக்கணக்கான தைரியமான ரஷ்யர்களுக்கும் அர்த்தமுள்ள ஆதரவை வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டும்.
பரந்துபட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகவிருக்கும் உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் உதவுவதற்கான வழிகளைக் கண்டறியவும் நாம் முயற்சிக்கவேண்டும். பூமி எதிர்கொள்ளும் மிகப்பெரும் சுற்றுச்சூழல் பேரழிவை கட்டுப்படுத்த பெரும் வல்லரசுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய தருணத்தில் இந்தப் பேரழிவு (ருஷ்ய-உக்ரைன் போர்) நிகழ்ந்துள்ளது. நாம் எவ்வாறு சுற்றுச்சூழல் பேரழிவை எதிர்நோக்குகிறோம் என்பது குறித்து பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு (IPCC) தனது மதிப்பீட்டை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இதனிடையே தேவையான நடவடிக்கைகள் முடங்கியுள்ளன அல்லது பின்னோக்கி இயக்கப்படுகின்றன. மிக அத்தியாவசியமாகத் தேவைப்படும் வளங்கள் அனைத்தும் அழிவுக்காக அர்ப்பணிக்கப்படுகின்றன. புதைவடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை விரிவுபடுத்தும் நிலைக்கு உலகம் தள்ளப்பட்டுள்ளது. மிகவும் அபாயகரமானதும், அபரிமிதமாகக் கிடைப்பதுமான நிலக்கரியும் இதில் அடக்கம்.
கேள்வி : ரஷ்யாவின் படையெடுப்பானது ஐ. நா. சபையின் விதி 2(4) ஐ மீறிய செயலாகும். ஒரு நாடு இறையாண்மையுள்ள மற்றொரு நாட்டின் மீது படையெடுத்து போர் தொடுப்பதை மேற்சொன்ன விதி தடைசெய்கிறது. ஆனாலும் புடின் தனது படையெடுப்புச் செயலுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை கோரி நிற்கிறார். கொசாவா, ஈராக், லிபியா மற்று சிரியாவில் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் தொடர்ச்சியாக நிகழ்த்திய சட்ட மீறல்களை புடின் தனது பிப்ரவரி 24 உரையில் சுட்டிக்காட்டுகிறார். உக்ரைன் மீது படையெடுப்பு செய்ததற்காக புடின் கோரும் சட்ட நியாயங்கள் குறித்தும் , பனிப்போருக்குப் பிந்தைய சர்வதேச சட்டங்களின் நிலை குறித்தும் நீங்கள் கருத்து தெரிவிக்கமுடியுமா?
நோம் சாம்ஸ்கி : புடின் தன் ஆக்கிரமிப்புக்கு சட்டப்பூர்வ நியாயத்தை வழங்க முயற்சிப்பது பற்றி எதுவும் சொல்லமுடியாது. அதன் தகுதி பூஜ்ஜியம்தான்.
நிச்சயமாக, அமெரிக்காவும் அதன் கூட்டணியும் ஒரு கண்சிமிட்டல் இல்லாமல் சர்வதேச சட்டத்தை மீறுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது புடினின் குற்றங்களுக்கு எந்த நீட்டிப்பும் அளிக்காது. எவ்வாறாயினும் கொசோவா, ஈராக் மற்றும் லிபியா ஆகியவை உக்ரைன் மீதான படையெடுப்பில் நேரடி தாக்கங்களைக் கொண்டுள்ளன.
நியூரம்பெர்க்கில் எந்தக் குற்றங்களுக்காக நாஜிக்கள் தூக்கிலிடப்பட்டார்களோ, அதையொத்த குற்றமே ஈராக்கின் படையெடுப்பு. எந்தத் தூண்டுதலும் அற்ற ஆக்கிரமிப்பு. ரஷ்யாவின் முகத்தில் அடித்தாற்போன்றது இது.
கொசோவாவைப் பொறுத்தவரை நேட்டோ ஆக்கிரமிப்பு ( அமெரிக்க ஆக்கிரமிப்பு என்று பொருள்) “சட்டவிரோதமானது ஆனால் நியாயமானது”. (உதாரணமாக, ரிச்சர்ட் கோல்ட்ஸ்டோன் தலைமையிலான கொசோவா குறித்த சர்வதேச ஆணையத்தின் கூற்றுப்படி) நடந்துவரும் அட்டூழியங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று நியாயப்படுத்தப்பட்டது. இப்போது கால வரிசையை மாற்றியமைப்போம். ஆக்கிரமிப்பின் விளைவாகத்தான் ஏராளமான அட்டூழியங்கள் நடந்தன. மேலும் வன்முறைக்கு ஆதரவாக அமைதி முயற்சிகள் வழக்கமாகப் புறக்கணிக்கப்பட்டன.
அமெரிக்க உயரதிகாரிகள் உறுதிப்படுத்தியபடி, நேட்டோவின் ஈராக்கிய ஆக்கிரமிப்பையும், லிபியாவின் மீதான குண்டுவீச்சையும் ஐக்கிய நாடுகள் பேரவையில் தன்னுடைய வீட்டோவினைப் பயன்படுத்தாமல் அனுமதித்த ரஷ்யாவுக்கு முன்கூட்டியே தெரிவிக்காமல், ரஷ்யாவின் கூட்டாளியான செர்பியாவின் மீது அமெரிக்கா நிகழ்த்திய குண்டுவீச்சு நிகழ்வுதான் பனிப்போருக்கு பிந்தைய ஐரோப்பிய பாதுகாப்பு ஒழுங்கை அமெரிக்காவுடன் இணைந்து உருவாக்குவதற்கான ரஷ்யாவின் முயற்சியில் ஒரு தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியது.
நிகழ்வுகள் விளைவுகளை தோற்றுவிப்பவை. இருப்பினும், கோட்பாட்டு அமைப்பிற்குள் உண்மைகள் மறைக்கப்படலாம்.
பனிப்போருக்குப் பிந்தைய காலத்தில் சர்வதேச சட்டத்தின் நிலை எழுத்தில் அப்படியேதான் உள்ளது, செயலில் அல்ல. சர்வதேச சட்டங்களைக் கடைப்பிடிக்கும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை என்று அதிபர் கிளிண்டன் தெளிவுபடுத்தியிருக்கிறார். “முக்கிய சந்தைகள், எரிசக்தி விநியோகங்கள் மற்றும் மூலோபாய வளங்களுக்கான தடையற்ற அணுகலை உறுதி செய்தல்” போன்ற முக்கிய நலன்களைப் பாதுகாப்பதற்கு “ஒருதலைப்பட்சமாக இராணுவ சக்தியைப் பயன்படுத்துவது” உட்பட, “தேவைப்படும்போது ஒருதலைப்பட்சமாக” செயல்படுவதற்கான உரிமையை அமெரிக்கா கொண்டுள்ளது என்று கிளின்டன் கோட்பாடு அறிவித்தது. அவரது வாரிசுகளும் கூட தண்டனையின்றி சட்டத்தை மீறக்கூடியவர்களாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள்.
சர்வதேச சட்டத்திற்கு மதிப்பு இல்லை என்று சொல்ல முடியாது. இது பொருந்தக்கூடிய வரம்பைக் கொண்டுள்ளதோடு, சில அம்சங்களில் பயனுள்ளதாகவும் அமைகிறது.
கேள்வி : ரஷ்யப் படையெடுப்பின் நோக்கம், ஜெலென்ஸ்கி அரசாங்கத்தை அகற்றி அதன் இடத்தில் ரஷ்ய சார்பு அரசாங்கத்தை நிறுவுவதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், என்ன நடந்தாலும், வாஷிங்டனின் புவிசார் மூலோபாய விளையாட்டுகளில் ஒரு சிப்பாய் ஆவதற்கான உக்ரைனின் முடிவு, அதற்கு ஒரு கடினமான எதிர்காலத்தைக் கொடுத்திருக்கிறது. இந்தச் சூழலில், ரஷ்யாவின் மீதான பொருளாதாரத் தடைகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு வழிவகுக்கவோ – அல்லது ரஷ்யாவிற்குள் புடினின் கட்டுப்பாட்டைக் குறைக்கவோ, கூடவே கியூபா, வெனிசுலா மற்றும் சீனா போன்ற நாடுகளுடனான ரஷ்யாவின் உறவுகளிலும் சீர்குலைவு ஏற்படவோ செய்யுமா?
நோம் சாம்ஸ்கி : உக்ரைன் மிகவும் நியாயமான தேர்வுகளைச் செய்திருக்கவில்லை. ஏகாதிபத்திய நாடுகளுக்கு இருக்கும் விருப்பங்களைத் தேர்வு செய்யும் வாய்ப்புபோல உக்ரைனுக்கு இல்லை. ரஷ்யாவின் மீதான பொருளாதாரத் தடைகள் சீனாவை நோக்கி அதைத் தள்ளும் என்று நான் சந்தேகிக்கிறேன். ருஷ்யாவின் நிதி அமைப்புகள் அதற்கெதிரான கூர்மையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள முடியுமா எனத் தெளிவாகத் தெரியவில்லை. .
கேள்வி : மேற்கத்திய அரசாங்கங்கள், பிரிட்டனின் தொழிற்கட்சி உள்ளிட்ட பிரதான எதிர்க் கட்சிகள் மற்றும் பெருநிறுவன ஊடகங்கள் அனைத்தும் ஒரு பேரினவாத ரஷ்ய-எதிர்ப்பு பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. அவர்களின் இலக்குகள் ரஷ்யாவின் அதிகாரவர்க்கக் குழுக்கள் மட்டுமல்ல, ருஷ்ய இசைக்கலைஞர்கள், இசை நிகழ்ச்சியை நடத்துபவர்கள், பாடகர்கள், செல்சியா எஃப்சி கால்பந்தாட்ட கிளப்பின் உரிமையாளர் ரோமன் அப்ரமோவிச் போன்ற கால்பந்து உரிமையாளர்களும் கூட இதில் அடங்குவர். யூரோவிஷன் 2022 இல் பங்கேற்பதிலிருந்தும் ருஷ்யா தடை செய்யப்பட்டிருக்கிறது. ஈராக்கின் மீதான அமெரிக்கப் படையெடுப்பின்போதும், ஈராக் அழிக்கப்பட்டபோதும் பெருநிறுவன ஊடகங்களும் சர்வதேச சமூகமும் அமெரிக்காவை நோக்கி வெளிப்படுத்திய எதிர்வினை இப்படியா இருந்தது?
நோம் சாம்ஸ்கி : உங்களின் அபத்தமான கருத்து மிகப் பொருத்தமானது. நம் அனைவருக்கும் பரிச்சயமான வழிகளில் நம்மால் பயணிக்கமுடியும்.
கேள்வி : இந்தப் படையெடுப்பு ரஷ்யாவிற்கும் (சீனாவுடன் கூட்டணியில் இணைந்தும்) மேற்கு நாடுகளுக்கும் இடையே நீடித்த போட்டியின் புதிய சகாப்தத்தைத் தொடங்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
நோம் சாம்ஸ்கி : சாம்பல் எங்கே விழும் என்று சொல்வது கடினம் – அது ஒரு உருவகமாக இருக்காது. இதுவரை சீனா தனது பங்கை மிகைப்படுத்தாமல் ஆற்றிவருகிறது. விரிவடைந்துவரும் உலகளாவிய அமைப்பிற்குள் சீனா மேற்கொண்டுவரும் பொருளாதார ஒருங்கிணைப்புத் திட்டமான பெல்ட் அன்ட் ரோடு முன்முயற்சியில் சில வாரங்களுக்கு முன்னர் அர்ஜென்டினாவையும் இணைத்திருக்கிறது. நாம் முன்பே விவாதித்தபடி, போர் என்பது பூமியின் உயிரினங்களுக்கு மரணத்தின் முன்னறிவிப்பாகும். அங்கு வெற்றியாளர்களே இல்லை. மனித வரலாற்றில் நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். அதை மறுக்கவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாது.
22.05.2022 அன்று தமிழ் இந்துவில் வெளியான நோம் சாம்ஸ்கி பேட்டி மொழிபெயர்ப்பின் முழுவடிவம்.
நன்றி : நோம் சாம்ஸ்கி, சி. ஜே. பாலிக்ரோனியோ
நோம்சாம்ஸ்கி பேட்டியின் ஆங்கில வடிவத்தை கீழ்க்கண்ட சுட்டியில் வாசிக்கலாம்.
தமிழாக்கம் : செ. சண்முகசுந்தரம்