தமிழ் அறிவுச்சூழலில் 1978 முதல் 1986 வரை வெளிவந்த பரிமாணம் மார்க்சிய இதழ் முக்கியமானது. மொத்தம் பதினாறு இதழ்கள் வெளிவந்தன. தமிழக மார்க்சிய அறிஞர்களான எஸ்.வி.ஆர்., எஸ்.என்.நாகராஜன் மற்றும் கோவை ஞானி உள்ளிட்டோரின் ஈடுபாட்டோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் வந்தது இவ்விதழ். தவிர ஏராளமான மார்க்சிய அறிஞர்கள் இவ்விதழுக்கு தங்கள் பங்களிப்பை நல்கினார்கள்.
கேரள மார்க்சிய சிந்தனையாளரும், கவிஞருமான சச்சிதானந்தன், தமிழவன், குணா, கதிரவன், ந. முருகன், சிங்கராயர், கண. குறிஞ்சி, ராயன் உள்ளிட்ட பலரும் தங்களின் பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்கள். பல மேலைநாட்டு மார்க்சிய அறிஞர்களின் படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டு இதழில் வெளிவந்திருக்கிறது. பரிமாணம் இதழின் முழுத்தொகுப்பையும் காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இவ்விதழின் தொடர்ச்சியாக அல்லது நினைவாக அல்லது அதை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு “புதிய பரிமாணம்” என்னும் இந்த இணைய இதழை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறோம். உலக வரலாறுகளை, சமூக நிகழ்வுகளை, அரசியல் ஓட்டங்களை மார்க்சியப் பார்வையில் அலசும் கட்டுரைகளும், இன்னபிற மார்க்சியப் படைப்புகளும் இதில் இடம்பெறும். கூடவே பெரியாரிய, அம்பேத்கரிய கருத்துரைகளை வெளிப்படுத்தும் தளமாகவும் இது திகழும்.