தமிழ் சினிமாவில் நகைச்சுவையும் ஜாதியும்
நகைச்சுவை உணர்வு என்பது மனித குலத்தினுடைய பிரத்தியேகமான குணங்களில் ஒன்றாகும். இந்த நகைச்சுவை உணர்வு பன்னெடுங்காலமாகவே இலக்கியங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் என மனிதர்களின் அனைத்துப் படைப்புகளிலும் வெளிப்பட்டே வந்திருக்கிறது. பிறகு தெருக்கூத்து, மேடை நாடகங்களிலும் கூட மக்கள் நகைச்சுவைக் காட்சிகளைக் கண்டுகளித்து வருவதையும் நாம் அறிவோம்.
மன்னராட்சிக் காலங்களிலும் கூடஅரசவைகளில் விகட கவிகள், விகடக்காரன் என்போரிருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளதை நாமறிவோம். தெனாலி ராமனும், பீர்பாலும் இவ்வாறான பாத்திரங்கள் தாம்.
திரைப்படங்கள் தோன்றிய பிறகு திரையிலும் நகைச்சுவைக் கதாபாத்திரங்கள் முக்கியமான ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டது எனலாம். மேலை நாட்டிலிருந்து சினிமா இங்கு வந்ததுடன் அவர்களது சினிமா பாணிகளும் இங்கு வந்ததை அனைவரும் அறிவர். அந்த வகையில் சார்லிசாப்ளின், லாரல்ஹார்டி போன்றோரது காமெடியும் கூட இங்கு தாக்கம் செலுத்திய தையும் பலரும் குறிப்பிடுவர்.
அவ்வாறு காமெடியிலும் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்ட காமெடி (லாரல்-ஹார்டி), அங்க அசைவுகளை மையமாகக் கொண்ட காமெடி- (சார்லிசாப்ளின்), வசனத்தின் (பேச்சின்) மூலமான காமெடி என்று பலவிதமான காமெடிகளை பற்றியும் குறிப்பிடுகின்றனர். எடுத்துக்காட்டாக தமிழ்ச்சினிமாவில் என்.எஸ்.கே- டி.ஏ.மதுரம், தங்கவேலு, வி.கே.ராமசாமி போன்றவர்களது காமெடி என்பது பேச்சு(வசனம் )சார்ந்து முதன்மையாக இயங்கியதை நாம் காண்கிறோம்.
அதேசமயம் உசிலைமணி, பக்கோடா காதர் , குள்ளமணி, தவக்களை, ஓமகுச்சி, தயிர்வடை தேசிகன், அங்கமுத்து, பிந்துகோஸ் போன்றோரது காமெடி என்பது முதன்மையாக உடல் தோற்றம் சார்ந்த ஒன்றாக இருந்தமையையும் நாம் அறிவோம். சந்திரபாபு மற்றும் நாகேஷ், மனோரமா, கோவைசரளா,வடிவேலு போன்றவர்களது காமெடி என்பது உடல் அசைவுகளை முதன்மையாகக் கொண்டு சிரிப்பு மூட்டியதையும் குறிப்பிடலாம்.
இதன் தொடர்ச்சியாகவே அதன் பிறகு வந்த நகைச்சுவை நடிகர்களும் பல்வேறு பிரிவினராக இயங்கினர். ஆனால் காலப்போக்கில் உடல் தோற்றம், உடல் அசைவுகள் மூலமான நகைச்சுவை என்பது குறைந்து வசனங்கள் மூலமாக சிரிப்புமூட்டுவது என்பது அதிகமாகியதையும் குறிப்பிட வேண்டும். இதில் நடிகர்களது வர்க்க, ஜாதியப் பின்புலமும் குறிப்பிடத்தக்க அளவு பங்கு வகித்ததையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். எடுத்துக்காட்டாக நடிகர்கள் விசு, கிரேஸிமோகன், எஸ்.வி.சேகர், மௌளி, ஒய்.ஜி.மகேந்திரன், நீலு, டைப்பிஸ்டு கோபு, சச்சு, ஊர்வசி, வெண்ணீராடை மூர்த்தி போன்றோர் சந்திரபாபு, நாகேஷ், வடிவேலு, சூரி போன்றோரைப்போல் அதிகமும் உடம்பை வளைத்து நெளித்து தங்களை வருத்திக் கொள்ளாமல் இருந்த இடத்தில் இருந்த வாறே வாய்வார்த்தைகளைக் கொண்டே (ஸ்டாண்டிங் காமெடி) சிரிப்பு மூட்ட முயன்றனர் என்பதைக் குறிப்பிடலாம்.
ஆனால், அந்த நகைச்சுவைக் காட்சிகள் பார்வையாளர்கள் அனைவரிடமும் ஒரே விதமான உணர்வைத் தோற்றுவிக்க முடியாமல் தோற்றுப் போனதையும் இங்கு குறிப்பிட்டுச்சொல்ல வேண்டும். ஆம் நடிகர்களுக்கு ஓர் ஜாதிய வர்க்கப் பின்புலம் இருப்பதைப்போன்றே இங்கு சினிமாப் பார்வையாளர்களுக்கும் ஓர் ஜாதிய வர்க்க பாலினப் பின்புலம் இருப்பதால் அதற்கேற்பவே இந்நகைச்சுவைக் காட்சிகளும் வினைபுரிந்தன.
அதனால் தான் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சூரி, யோகிபாபு காமெடி அளவுக்கு நாம் மேலே குறிப்பிட்டவர்களுடைய மேட்டிமைத்தனமான காமெடி பி & சி செண்டர்களில் வரவேற்பைப் பெறமுடியவில்லை. அதனால் தான் அவர்களால் பெரும் புகழையும் செல்வாக்கையும் தமிழ் நாட்டு மக்களிடம் பெறமுடியவில்லை என்பதையும் நாம் காண்கிறோம்.
@
தோற்றமே பார்வையாளர்களுக்கு நகைச்சுவை உணர்வை தோற்றுவிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நகைச்சுவை நடிகர்கள் பலர் தங்களது உடல் அமைப்பை அதற்கு பயன்படுத்தியதையும் நாம் அறிவோம். நடிகர் குமரிமுத்து, தயிர் வடை தேசிகன், லூஸ்மோகன், அல்வா வாசு, கிரேன் மனோகர், முத்துக்காளை,,கல்லாப்பெட்டி சிங்காரம், தற்போது யோகிபாபு போன்றோரை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். சினிமாவில் நடித்து எவ்வளவு பொருளாதார வளர்ச்சி அடைந்தாலும் கூட ஹீரோக்களைப் போல் நகைச்சுவை நடிகர்கள் தங்களது உடம்பை சீரமைப்பதற்கான, அழகுபடுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதில்லை. ஏனென்றால் அவர்களது மூலதனமே மாறுபட்ட அவர்களது அந்த உடல் அமைப்புதான்.
பார்வையாளர்கள் மட்டுமல்ல உடன் நடிப்பவர்களும் அவர்களது உடல் அமைப்பைக் கேலிசெய்து நகைப்பதையும் நாம் பல திரைப்படங்களில் பார்த்துள்ளோம். சிவாஜியும் , எம்ஜிஆரும் நாகேஷின் உடல் ஒல்லியாக இருப்பதைத் திரையில் கேலி செய்வதையும் பார்த்திருப்பீர்கள். தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் டி.எஸ்.பாலையா நாகேஷை ‘டேய் நரம்புப் பயலே’ என்று அழைப்பார். நடிகர் சோ கூட அவரது ஒல்லியான உடம்பு மற்றும் முட்டைக் கண்களுக்காக பல படங்களில் கேலி செய்யப்பட்டு இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
இன்றைக்கும் இதே கண்ணோட்டம் நமது தமிழ்த் திரைப்படங்களில் தொடர்வதை நாம் பார்க்கிறோம். ஜனகராஜ், கவுண்டமணி, செந்தில், கல்லாப்பெட்டி சிங்காரம், வடிவேலு கருணாஸ், மனோபாலா, கஞ்சா கருப்பு, சூரி, யோகிபாபு போன்றோரது நிறம் உடலமைப்பு தலை முடி போன்றவை பல திரைப்படங்களில் கேலிக்குரியதாக, நகைப்பூட்டுவதற்கானவையாகக் காட்சிப்படுத்தப்பட்டதையும் நாமறிவோம். நடிகர்கள் விவேக், சந்தானம் இதற்கு மாறாக தங்களது பேச்சு, கலாய்த்தல் என்ற பாணியின் மூலமாகவே பார்வையாளர்களை சிரிப்பு மூட்டியதையும் நாம் பார்த்தோம்.
இன்றைய சிந்தனை வளர்ச்சியின் காரணமாக மனிதருடைய நிறம், உடலமைப்பு அல்லது குறைபாடுகள் கேலி செய்யப் படுவது தவறு என்ற புரிதல் வளர்ந்து வந்தாலும் கூட தமிழ்ச் சினிமா அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது இத்தகையத் தமிழ்ச் சினிமாவில் தான் இந்த நகைச்சுவைக் கதாபாத்திரங்களின் பின்புலத்தை ஒருசில குறிப்பிட்ட சாதிய அடையாளங்களுடன் முடிச்சுப்போட்டு வந்திருப்பதையும் நாம் பார்க்கிறோம்.
இது ஏன்? எவ்வாறு நடந்தது? என்று நமக்கு வியப்பாக உள்ளது. இது தமிழ்ச் சினிமாவுக்கு மட்டுமே உரிய தனித்த இயக்கப்போக்காகவும் உள்ளது. தமிழ் திரைப்படம் 1916 இல் துவங்கினாலும் அது 1931இல் (காளிதாஸ்) பேசத் துவங்கியது என்பது நமக்குத் தெரியும். 1931 க்கு முந்திய ஊமைப் படக் காலச் சினிமாக்களையும் அல்லது 1931 க்கும் 1950 க்கும் இடையே வந்த திரைப்படங்களையும் இப்போது நாம் பார்க்க வாய்ப்பு இல்லாத காரணத்தால் நமது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பார்க்க முடிந்த 1950க்குப் பிறகு வந்த திரைப்படங்களில் இவ்வாறு நகைச்சுவைக் கதாபாத்திரங்கள் ஒடுக்கப்பட்ட சாதி அடையாளங்களுடன் முடிச்சுப் போடப்பட்ட திரைப்படங்களைப் பற்றி மட்டும் இங்கு பேச முற்படலாம்.
1950க்கு முற்பட்ட திரைப்படங்களில், 1940 ஆம் ஆண்டு வெளிவந்த சதி முரளி என்ற திரைப்படத்தில் சுருட்டை எனும் சேரிப் பெண் வேடத்தில் பி.எஸ்.ஞானம் எனும் நடிகை மிகச்சிறப்பான நகைச்சுவையை வழங்கியதாக விட்டல்ராவ் தனது தமிழ்ச் சினிமாவின் பரிமாணங்கள் எனும் நூலில் குறிப்பிடுகிறார். 1950 க்கு முன் நகைச்சுவைக் கதாபாத்திரம் சாதி அடையாளத்துடன் முடிச்சுப் போடப்பட்டமைக்கான ஓர் எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது.
தமிழ்ச் சமூகம் என்பது ஜாதியச் சமூகமாகவும் இருப்பதால் எந்த ஒரு திரைப்படத்தை எடுத்துக் கொண்டாலும் அது ஏதோ ஒரு ஜாதியப் பின் புலத்தில் நடக்கும் கதையைப் பேசுவதாகவே அமையும். அந்த வகையில் அந்தக் கதையில் பங்குபெறும் கதாபாத்திரங்களும் ஏதோ ஒரு ஜாதியை அடையாளப் படுத்துபவர்களாக இருப்பதும் கூட தவிர்க்க முடியாத ஒன்று.
.ஆனால் 1950 தொடங்கி 2010 வரையிலான ஒரு 60 ஆண்டு காலத் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் சிலக் குறிப்பிட்ட சாதிய அடையாளங்கள் மட்டும் பெரும்பாலும் நகைச்சுவைக் கதா மாந்தர்களுக்கு உரியவையாக மாற்றப்பட்டிருப்பதையும் அச்சாதி அடையாளங்களை ஹீரோக்கள் , ஹீரோயின்கள் சூடிக் கொண்டது என்பது மிக மிகக் குறைவானதாகவும் தமிழ் சினிமாவில் அமைந்துள்ளமையும் பளிச்சென நம் கண்களில் படுகிறது.
எடுத்துக்காட்டாக முடிதிருத்துவோராகவும் சலவைத் தொழிலாளராகவும் முன்னணி நடிகர்கள் வேடம் ஏற்ற திரைப்படங்கள் என்பது விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய தாகவும் அதேசமயம் முடிதிருத்துவோர். சலவைத் தொழிலாளர் கதாபாத்திரங்களை நகைச்சுவை நடிகர்கள் மேற்கொண்டமை என்பது அதிகமான எண்ணிக்கையில் காணப்படுவது தற்செயலான ஒன்றல்ல என்பதையும் நாம் உறுதியாகக் கூறமுடியும்.
ஆக இக்கட்டுரையில் நாம் முடி திருத்துவோர் மற்றும் சலவைத் தொழிலாளர் என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிய அடையாளம் தமிழ்ச் சினிமாவில் 1950 முதல் 2010 வரை இடம்பெற்ற விதம் குறித்து பார்ப்போம்.
@
பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதராகத் திரையில் தோன்றிய எம்ஜிஆர் ஒரே ஒரு திரைப்படத்தில் கூட முடி திருத்துவோராகவோ அல்லது சலவைத் தொழிலாளராகவோ தோன்றாதது வியப்பான ஒன்றாகவே உள்ளது. ஏனென்றால் துப்புரவுப் பணியாளராக (நேற்று இன்று நாளை 1977) ஷூ பாலிஸ்போடுபவராக (தொழிலாளி 1960), நரிக்குறவர் (ஒரு பாடல் காட்சியில் மட்டும் வேடம் ஏற்றார்) என்று விதவிதமான எளிய மக்கள் கதாபாத்திரங்களை எல்லாம் ஏற்றவரான அவர் ஏன் இவ்விரு கதாபாத்திரங்களை மட்டும் ஏற்கவில்லை? என்ற கேள்வி எழுவது நியாயமான ஒன்றுதான்.
அதேசமயம் திரு சிவாஜிகணேசன் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் கதாபாத்திரங்களை அதிகமும் ஏற்காதவராக இருப்பினும் தமிழ்த்திரையில் துணி வெளுப்பவராகத் தோன்றிய முதல் முன்னணி நடிகர் என்ற பெயரைப் பெறுகிறார். ஆம் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் திருவருட்செல்வர் ( 1967) என்ற பக்தித் திரைப்படத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான திருக்குறிப்புத் தொண்டர் என்ற வரலாற்றுக் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்தார்.
இத்திரைப்படத்தில் பல நாயன்மார் வேடங்களையும் அவர் ஏற்றிருந்தார். அதில் ஒன்றாகவே திருக்குறிப்புத் தொண்டர் என்ற சலவைத் தொழிலாளியின் வரலாற்றைச் சொல்லும் விதமாக அப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக ஏற்று நடித்து இருந்தார். மேலும் அவருடன் நாகேஷ், ஏ.கருணாநிதி போன்றவர்களும் சக சலவைத்தொழிலாளிகள் வேடமேற்று இருந்தனர்.
இதே காலகட்டத்தில் ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் (1965) என்ற திரைப்படத்தில் அழகிரி என்ற சலூன் கடைக்காரராக நடிகவேள் எம்.ஆர்.ராதா மிகச்சிறப்பாகத் தோன்றினார்..
இத்திரைப்படம் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒரு திரைப்படமாகும். கந்தபுரம் ஜமீன்தாராக சேகர் (ஜெமினி கணேசன்) இருக்கிறார். அவர் கைக்குழந்தையாக இருந்தபோது தாய் தந்தையர் இறந்துவிட அவரை அவரது சித்தப்பா டி.எஸ்.பாலையா மற்றும் சின்னம்மா வளர்க்கின்றனர். அவருக்கு குழந்தைப் பருவத்தில் தாய்ப்பால் ஊட்டியவர் மருத்துவ குலத்தைச் சேர்ந்த பாக்கியம் அம்மாள் (அங்கமுத்து) அவரது மகன் தான் அழகிரி (எம்.ஆர்.ராதா). அவர் சலூன் கடை நடத்தி வருகிறார்.
ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அழகிரிதான் ஜமீன் வாரிசு என்றும் சேகர் பாக்கியத்தின் மகன் என்றும் தெரிய வர இருவரும் இடம் மாறுகின்றனர் ஜெமினி சவரத்தொழிலாளியாக மாறி சலூன் நடத்த வருகிறார் அழகிரி ஜமீன்தாராகப் பொறுப்பேற்கிறார். இறுதியில் அழகிரிக்கு ஜமீன் கட்டுப்பாடுகள், ஆடம்பரம், பழக்கவழக்கங்கள் பிடிக்காமல் போய்விட ஜமீனை விட்டு சலூனுக்கு மீண்டும் திரும்பி வருகிறார். சேகர் மீண்டும் ஜமீன்தாராக ஆகிறார். இதுவே கதை. இடையே டி.எஸ்.பாலையாவின் பணத்தாசையையும் அழகிரியின் நல்ல குணங்களையும் ஒப்பிட்டு காட்சிகள் வருகின்றன.
இத்திரைப்படத்தில் எம்.ஆர்.ராதா சலூனில் ஒரு பார்ப்பனருக்கு (அய்யா தெரியாதையா எஸ்.ராமாராவ்) முகச்சவரம் செய்யும் ஒரு பாடல் காட்சியும் உண்டு. ஆனால் ஜெமினி கணேசன் எவர் ஒருவருக்கும் முகச்சவரம் செய்யும், அல்லது முடி வெட்டுவது போன்ற காட்சி எதுவும் படத்தில் இடம்பெறவில்லை. வெறுமனே சலூனை நிர்வகிக்கிறார். இதே காலகட்டத்தில் நடித்த முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், விஜயகுமார், சிவகுமார், ஜெய்கணேஷ் போன்ற எந்த ஒரு முன்னணி நடிகரும் சலவை மற்றும் சவரத் தொழிலாளர்களாகத் திரையில் தோன்றியதாகத் தெரியவில்லை.
இதற்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ரஜினி கமல் இருவரில் கமலஹாசன் வறுமையின் நிறம் சிகப்பு (1980) திரைப்படத்தில் முற்பட்ட (சைவப்பிள்ளை) சாதியில் பிறந்து எம்.ஏ படித்தும் வேலை கிடைக்காமல் போய் இறுதியில் டில்லியில் சவரத் தொழிலாளியாக மாறுவதாக கே.பாலச்சந்தர் காட்சிப்படுத்தி இருந்தார். இது 1980 கால கட்ட ஆட்சியாளர்களையும் சமூக நீதியையும் (இட ஒதுக்கீடு) குறைசொல்லும் நோக்கத்தில் திட்டமிட்டு அமைக்கப்பட்ட காட்சியே அன்றி சவரத் தொழிலாளர் பற்றிய காட்சிப்படுத்துதலில் அடங்காது.
ரஜினிகாந்த் ஜானி( 1980) திரைப்படத்தில் வித்யாசாகர் என்னும் சலூன் கடைக்காரராகத் தோன்றினார். இப்படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம். ஜானி எனும் திருடன் தான் ஹீரோ!. வித்யாசாகர் எனும் சவரத் தொழிலாளி துணைக் கதாபாத்திரமே ஆகும். இவர் பாமாவைக் (தீபா) கொலை செய்து பழியை ஜானி மீது போட்டு விடுவதாகவும் கதை சொல்லப்பட்டிருந்தது. இப்படத்தின் இயக்கம் மகேந்திரன்.
ரஜினி சலவைத் தொழிலாளர் ஜாதியில் பிறந்து பண்ணையார் வீட்டில் வண்டி ஓட்டுபவராக கவிக்குயில் (1977) எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அவரது தங்கை ராதாவாக ஸ்ரீதேவி தோன்றினார். ஸ்ரீதேவி உயர் ஜாதியைச் சேர்ந்த ராமையா பிள்ளை (எஸ்.வி.சுப்பையா) மகன் கோபாலைக் (சிவகுமாரை) காதலித்து திருமணத்திற்கு முன் கர்ப்பமுறுவதாகவும் ஜாதி வேறுபாடு அவர்கள் திருமணத்திற்குத் தடையாக அமைவதாகவும் கதை சொல்லப்பட்ட திரைப்படம் அது.
இத்திரைப்படத்தில் உயர் ஜாதிப் பண்ணையார் சின்னையா பிள்ளை (செந்தாமரை) மகளான (லெச்சுமி) படாபட் ஜெயலட்சுமிக்கும் ரஜினிக்கும் காதல் இருப்பதாகவும் ஆனால் ஜாதியும், பணமும், அந்தஸ்தும் அவர்களது காதலுக்கு குறுக்கே நிற்பதாகவும் கதை சொல்லப்பட்டது. இப்படத்தின் இயக்கம் தேவராஜ் மோகன்.
இதற்கு அடுத்து ஹீரோ முடிதிருத்துவோர் ஆக தோன்றிய திரைப்படம் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் (1978). இப்படத்தில் மருதை (ஜி.சீனிவாசன்) எனும் சவரத்தொழிலாளியின் மகன் பரஞ்சோதியாக சுதாகர் நடித்திருந்தார். அவரது ஜோடியாக இடைநிலைச் சாதி பாஞ்சாலி எனும் கதாபாத்திரத்தில் ராதிகா தோன்றினார். இத்திரைப்படத்திலும் ஜாதி காதலுக்கு தடையாக அமைவது பற்றி பேசப்பட்டிருந்தது.
இதுவரையிலான தமிழ்ச்சினிமா வரலாற்றில் சவரத்தொழிலாளர் வாழ்க்கையை, பிரச்சனைப் பாடுகளைப் பற்றி ஓரளவாவது பேசிய திரைப்படம் என்றால் அது பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தைத்தான் குறிப்பிட்டுச்சொல்லவேண்டும். அந்த அளவிற்கு 1970, 1980 களின் தமிழகக் கிராமப்புற வாழ்க்கையை மிகச்சிறப்பாக படம் பிடித்துக் காட்டியது.
கிராமப்புற சவரத்தொழிலாளியின் மகன் குலத்தொழிலுக்கு வராமல் கல்விகற்றுவிட்டு வேறு வேலைக்குச்செல்ல விரும்புவதும், கவிதை, பாடல் எழுதிக்கொண்டு திரிவதும், கிராமப்புற இடைனிலை, மற்றும் உயர் ஜாதியினர் மத்தியில் அது கோபத்தை ஏற்படுத்துவதும் அதன்காரணமாக பரஞ்சோதியை ”கிறுக்குப் பய” என்று கேலிபேசுவதும் நுணுக்கமாக காட்சிப்படுத்தப் பட்டிருந்தது.
மேலும் சவரத்தொழிலாளியின் மகன் உள்ளூர் இடை நிலைச்சாதிப் பெண்ணைக் (அனேகமாக ஆதிக்கச் ஜாதிப் பெண் என்று காட்ட முயன்றுள்ளதாகத்தோன்றுகிறது. ஏனென்றால் பாஞ்சாலியின் அக்காள் காந்திமதி பெயர் கருத்தம்மா என்று வைத்துள்ளனர்). காதலிப்பதை அறியும் ஊரார் பரஞ்சோதிக்கு அவனது அப்பாவின் கையாலேயே மொட்டையடிக்க வைத்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மீதேற்றி ஊர்வலம் விட்டு இழிவு செய்கின்றனர்.
அதே நேரம் பாஞ்சாலிக்கு அவளது அக்காள் கருத்தம்மா காலில் சூடுவைத்துத் தண்டிக்கிறாள். அவமானம் தாளாத மருதை தனது மகனுக்கு மொட்டையடிக்கப் பயன்படுத்திய சவரக்கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு சாவதாகக் காட்டப்பட்ட காட்சியானது கிராமப் புற ஜாதியாதிக்கத்தை மிகத்தெளிவாகப் படம் பிடித்துக்காட்டின.
மற்றொரு காட்சியில் மருதை தன் மகனிடம் “ நமது சவரத்தொழிலை நாம் செய்ய அசிங்கப்பட்டால் வேறு யார் செய்வா?” என்று கேட்பார் அபோது பரஞ்சோதி “ அப்பன் தொழிலைத்தான் பிள்ளையும் செய்யனும்னா டாக்டர் அம்பேத்கர் யாருன்னே இந்த உலகத்திற்கு தெரிஞ்சுருக்காது” என்று சொல்வதாக காட்சி அமைக்கப்பட்டிருந்ததைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இறுதியில் பட்டாளத்தார் (விஜயன்) உதவியோடு பரஞ்சோதி பாஞ்சாலியை அழைத்துக்கொண்டு நகரத்திற்கு ரயிலேறி ஊராரிடமிருந்து தப்பிப்போவதோடு படம் முடிவுறுகிறது.
இப்படத்தின் கதை வசனம் ஆர்.செல்வராஜ், உதவி கே.பாக்யராஜ், தயாரிப்பு எஸ்.ஏ.ராஜ்கண்ணு, இயக்கம் பாரதிராஜா. இப்படிப்பட்ட திரைப்படத்தை 1978 ல் எடுத்த பாரதிராஜா தான் பின்னாளில் எப்படியெல்லாமோ திசைமாறிப்போனார் என்பது அவலம் என்றுதான் சொல்லவேண்டும்.
@
இதே காலகட்டத்தில் வெளிவந்த மற்றொரு திரைப்படம் சலவைத் தொழிலாளர் வாழ்வைக் கதைக்களமாகக்கொண்டு வந்தது. ஆம் 1979 ஆம் ஆண்டு வந்த பஞ்சகல்யாணி என்ற திரைப்படம் முழுக்க முழுக்க சலவைத்தொழில் செய்யும் பஞ்சவர்ணம் (எம்.எஸ்.வசந்தி) எனும் பெண் கதா பாத்திரத்தையும் அவர் வளர்க்கும் கல்யாணி (கழுதை) யையும் மய்யமாகக் கொண்டு கதை சொன்ன திரைப்படமாகும். இப்படத்தின் தயாரிப்பு உடந்தை மணாளன், கதை,திரைக்கதை இயக்கம் என்.சம்பந்தம். வசனம் அய்யப்ப பிள்ளை.
உயர் ஜாதி நாட்டாமையின் (எம்.ஆர்.ஆர்.வாசு) மகன் சிவச்சந்திரன் வெளியூர் சென்று உயர் கல்வி கற்று ஊர் திரும்பியவர் சலவைத் தொழிலாளியான பஞ்சவர்ணத்தைக் காதலிக்கிறார். அவரோடு சேர்ந்து தரவைத்துறையில் ஊராரின் துணிகளைத்துவைப்பதுடன் பிற சலவைத் தொழிலாளிகளுடன் சேர்ந்து ஆடிப்பாடவும் செய்கிறார். இதனைக்காணும் ஜாதிவெறி பிடித்த நாட்டாமை பஞ்சவர்ணத்தை அடியாட்களை வைத்து மிரட்டவும், அடித்து உதைக்கவும் ஏற்பாடு செய்கிறார்.
ஆனால் எல்லா நெருக்கடிகளையும் வென்று இறுதியில் சிவச்சந்திரனும் பஞ்சவர்ணமும் ஒன்று சேர்கின்றனர். நாட்டாமையும் மனம் திருந்தி பஞ்சவர்ணத்தை மருமகளாக ஏற்றுக்கொள்கிறார். இப்படத்தில் தங்கவேலுவும் காந்திமதியும் ஜாதி மீறிக்காதலிப்பவர்களாகவும், பஞ்வர்ணத்திற்கு ஆதரவாகச் செயல்படுபவர்களாகவும் தோன்றுகின்றனர். படம் முழுதும் ஜாதியத்திற்கு எதிராக வசனமும் காட்சிகளும் நிறைந்துள்ளன. இப்படம் மற்றொரு விசயத்திற்காகவும் கூட நாம் கவனம் கொள்ளவேண்டிய திரைப்படமாகும்.
ஆம் தமிழ்ச்சினிமாவில் ஆடு (ஆட்டுக்கார அலமேலு), மாடு (கோமாதா என் குல மாதா), பாம்பு (வெள்ளிக்கிழமை விரதம்), யானை ( நல்ல நேரம், ராம் லெட்சுமன்(1981), தாய் மீது சத்தியம்) போன்ற புனிதமாகக்கருதப்படும் விலங்குகளை வளர்ப்புப் பிராணிகளாக வைத்துப் பல திரைப்படங்கள் வந்திருப்பது நமக்குத்தெரியும். ஆனால் சலவையாளர் ஜாதியோடு தொடர்புடையதும் வேறு எந்த ஜாதியினரும் வளர்க்க விரும்பாத கழுதையின் நற்பண்புகளை, தியாகத்தை, வீரத்தை காட்சிப்படுத்திய வகையிலும் இத்திரைப்படம் தமிழ்ச் சினிமா வரலாற்றில் குறிப்பிட்டுச்சொல்லப்பட வேண்டிய ஒன்றாகும்.
இதேபோல கதானாயகி சலவைத்தொழிலாளியாகத் தோன்றிய மற்றொரு திரைப்படம் கல்லுக்குள் ஈரம் (1980) ஆகும். இப்படத்தில் சலவைத் தொழிலாளியான அருணா கிராமத்திற்குப் படப்பிடிப்புக்கு வரும் இயக்குனர் பாரதிராஜாவைக் காதலிப்பதான கதை. இப்படத்தின் கதைவசனம் ரங்கராஜன், திரைக்கதை பாரதிராஜா, இயக்கம் ஒளிப்பதிவாளர் நிவாஸ்.
இதற்கு அடுத்து நம் பார்வைக்குப் படுவது இது நம்ம ஆளு (1988) திரைப்படம். சவரத்தொழிலாளியான குமரிமுத்து மனோரமா தம்பதியினரின் மகன் கோபால் என்ற கதாபாத்திரத்தில் கே.பாக்கியராஜ் தோன்றி ஸ்ரீனிவாச சாஸ்திரியின் மகள் (ஷோபனா) பானுவைத் திருமணம் செய்து கொள்வதாகவும் இப்படத்தில் காட்டப்பட்டது. இதுவும் சவரத்தொழிலாளர் ஜாதி தமிழ்ச்சமூகத்தில் இழிவாக மதிக்கப்படுதல் பற்றிப்பேசியது.
அடுத்து, ரஜினி ஹீரோவாக நடித்த நான் சிகப்பு மனிதன் (1985) திரைப்படத்தில் சிஐடி சின்னசேலம் சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் பாக்யராஜ் தோன்றினார் இறுதிக்காட்சியில் சிஅய்டி வேலையை ராஜினாமா செய்துவிட்டு தனது தந்தையின் பார்பர் ஷாப்பைக் கவனிக்கப் போகிறேன் என்று சொல்வதாக காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.
நடிகர் கரண் கனகவேல் காக்க (2010) திரைப்படத்தில் முடிதிருத்தும் தொழிலாளியாகத் தோன்றினார். ஏ.எல்.விஜய் யின் மதராசப்பட்டினம் (2010) திரைப்படத்தில் ஆர்யா பரிதி என்னும் சலவைத் தொழிலாளியாகத் தோன்றினார். அது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடைபெறுவதாக கதை சொல்லப்பட்ட திரைப்படமாகும். சென்னையின் வண்ணாரப்பேட்டையில் கதை நடப்பதாக சொல்லப்பட்டது . இப்படம் சலவைத்தொழிலாளிக்கும் ஆங்கிலப் பெண்ணுக்கும் (எமிஜாக்சன்) இடையிலான ஜாதி,மதம்,மொழி,இனம்,வர்க்கம் கடந்த காதலைப்பேசிய திரைப்படமாகும். முன்னணி நடிகர்களில் ஒருவரை வீரம் நிறைந்த சலவைத்தொழிலாளியாகக் காட்டிய திரைப்படம் என்ற வகையில் இது ஓர் முக்கியமான திரைப்படமாகும்.
ராதாமோகனின் பிருந்தாவனம் (2010) திரைப்படத்தில் அருள்நிதி சவரத்தொழிலாளியாக நடித்திருந்தார். குசேலன் (2008) திரைப்படத்தில் பசுபதி சலூன்கடைக்காரராக பாலு என்ற கதாபாத்திரத்தில் தோன்றினார். இது ரஜினியின் தயாள குணத்தை ஊதிப்பெருக்கும் நோக்கத்தில் பி.வாசு இயக்கிய திரைப்படமாகும். பசுபதியின் மனைவியாக மீனாநடித்திருந்தார். இத்திரைப்படத்தில் வடிவேலு சவரத்தொழிலாளியாகத் தோன்றினார். சென்னை=600023 திரைப்படத்தில் நடிகர் இளவரசு சலூன்கடைக்காரராகத் தோன்றினார்.
நாயகன் சவரத்தொழிலாளியாக நடித்த மற்றொரு படம் மாயக்கண்ணாடி(2007). இப்படத்தில் சேரன் குமார் எனும் சவரத்தொழிலாளி யாகத்தோன்றினார். அவரது ஜோடியாக அழகு நிலையத்தில் வேலை செய்யும் பெண்ணாக நவ்யா நாயர் நடித்துள்ளார். சலூன் கடை முதலாளியாக ராதாரவி வருகிறார்.
2018 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் தயாரிப்பில், ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில், இயக்குனர் ராம் நடிப்பில் வந்த திரைப்படம் சவரக்கத்தி இதில் சவரத்தொழிலாளி பிச்சமூர்த்தியாக ராம் நடித்துள்ளார். இப்படத்தின் தலைப்பு சவரக்கத்தி என்று இருந்தாலும் கூட ஒரு சவரத்தொழிலாளியின் ஒரு நாள் வாழ்க்கைப்பொழுதில் நடைபெறும் சம்பவங்களை மய்யமாகக் கொண்டு எடுக்கப்பட்ட மசாலா+ காமெடிப்படமாகும். மற்றபடி சவரத்தொழிலாளர்களின் பிரத்யேகப் பிரச்சனைகளைப் பேசிய திரைப்படமல்ல. சரியாகச் சொல்வதாக இருந்தால் ஒரு சவரத்தொழிலாளியின் வாழ்க்கையை வெளியே, மேலிருந்து பார்க்கின்ற ஓர் மனிதரின் பார்வையில் எள்ளலுடன் சொல்லப்பட்ட கதையாகும்.
இவைதான் கதாநாயகர்கள் மற்றும் பிற குணச்சித்திர நடிகர்கள் (பிறப்பினடிப்படையில்) சலவைத் தொழிலாளிகளாக மூடி திருத்துபவர்களாக தோன்றிய திரைப்படங்கள் ஆகும்.
இவர்களுக்கு அடுத்த தலைமுறை நடிகர்களில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் இதுவரை முடிதிருத்துவோர் ,சலவைத் தொழிலாளர்களாகத் தோன்றவே இல்லை.
இவர்களுக்கும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த நடிகர்களான சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களும் இதுவரை சவரத் தொழிலாளர்களாகவும், சலவைத் தொழிலாளர்களாகவும் தமது படங்களில் தோன்றியதில்லை.
கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தின் கதாநாயகி அருணாவின் தந்தையாக கவுண்டமணி நடித்து இருந்ததுடன் அவரே காமெடியனாகவும் பயன்படுத்தப் பட்டிருந்தார் அவ்வாறே திருவருட்செல்வர் படத்தில் சிவாஜியுடன் நாகேஷ், ஏ.கருணாநிதி ஆகியோரும் சலவைத் தொழிலாளர் களாகவும் காமெடியன்களாகவும் பயன்படுத்தப்பட்டபட்டிருந்தனர். பஞ்சகல்யாணி திரைப்படத்திலும் காமெடி நடிகர் ஏ.கருணாநிதி சலவைத் தொழிலாளி வேடம் ஏற்றார்.
இவையன்றி நேரிடையாக சவரத்தொழிலாளர்களாக மற்றும் சலவைத் தொழிலாளர்களாக கதாபாத்திரங்கள் காமெடியன்களாக காட்டப்பட்டது அதிகமாகும். அதுவும் 1990க்குப் பிறகு சவரத் தொழிலாளர் மற்றும் சலவைத் தொழிலாளர் கதாபாத்திரங்கள் நாயகன் நாயகி என்ற இடத்தில் இருந்து முற்றிலும் புறந்தள்ளப்பட்டு காமெடியன்களுக்கானதாக மட்டுமே சித்தரிக்கப்பட்ட நிலமை அதிகமாகியது.
நாம் முன்பு இவ்விரு ஒடுக்கப்பட்ட உழைக்கும் சாதியினர் நாயகர் நாயகியராக பார்த்தவை எல்லாம் 1990 க்கு முன்பான திரைப்படங்களாகவே பெரும்பான்மையாக இருந்ததைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். 1990களில் தமிழ்த் திரைப்படக் காமெடியன்களாக கோலோச்சிய கவுண்டமணி செந்தில் துவங்கி வடிவேலு சந்தானம் வரை சலவைத் தொழிலாளியாக அதிகமும் இடம் பெற்றுள்ளனர்.
கவுண்டமணி சலவைத் தொழிலாளியாக சின்னக் கவுண்டர், செந்தில் சின்னக்கவுண்டர் மற்றும் அவள் வருவளா என்ற இரு திரைப்படங்களில் சலவைத்தொழிலாளியாக வருகிறார். வடிவேலு நாவிதராக பாஞ்சாலங்குறிச்சி, தலைநகரம், குசேலன் மற்றும் மாயன் ஆகிய படங்களில் தோன்றினார். சலவைத் தொழிலாளியாக வடிவேலு கார்மேகம் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தார்.
பாஸ் என்ற பாஸ்கரன் என்ற திரைப்படத்தில் சலூன் கடைக்காரராக சந்தானம் தோன்றினார். விவேக் பத்ரி என்ற திரைப்படத்தில் அழகு என்ற சவரத் தொழிலாளி வேடம் ஏற்றார். எந்திரன் படத்தில் சுவாமிநாதன் (எ) சாம்ஸ் என்ற காமெடி நடிகர் சவரத்தொழிலாளியாகக் காட்சியளித்தார். தாய் மனசு என்ற திரைப்படத்தில் கவுண்டமணி செந்தில் இருவரும் சலவைத் தொழிலாளர்களாகக் காட்சியளித்தனர். அவ்வாறே மணிரத்னத்தின் இதயக்கோயில்(1985) திரைப்படத்தில் ஒருவிரல் கிருஸ்ணாராவ் கனகசபை முடிதிருத்தகம் எனும் சலூன் கடைக்காரராகவும், அவரது மகன் லோகிதாசனாக கவுண்ட மணியும், அவரது உதவியாளராக செந்திலும் தோற்றமளித்தனர்.
கோயமுத்தூர் மாப்பிள்ளை என்ற படத்தில் செந்தில் லாண்டரிக் காரராகக் காட்சியளித்தார். ராக்காயி கோயில் எனும் திரைப்படத்தில் செந்திலும் கவுண்டமணியும் சவரத் தொழிலாளர்களாகக் காட்சியளித்து இருந்தனர். டில்லி பாபு எனும் படத்தில் சின்னி ஜெயந்த் சலவைத்தொழிலாளி. இவ்வாறு சலவை, சவரத் தொழிலாளர் கதாபாத்திரங்களை எல்லாம் நகைச்சுவைப் பாத்திரங்களாக்கியது மட்டுமல்ல அவர்களை காமெடி என்ற பெயரில் ஜாதிய ரீதியாக இழிவாகவும் காட்சிப்படுத்தினர்.
எடுத்துக்காட்டாக சீமான் இயக்கிய பாஞ்சாலம்குறிச்சி(1996) திரைப்படத்தில் சொன்னான் என்ற சவரத்தொழிலாளியாக வடிவேலுவைக் காட்டியதோடு அவர் ஒரு காட்சியில் மது அருந்திவிட்டு வந்து பாய் விரித்துப் படுக்கக்கூட தெரியாமல் முட்டாள்தனமாக நடந்து கொள்வதாகவும் இறுதியில் பாயோடு சேர்ந்து தரையில் விழுந்து மூக்குடைபடுவதாகவும் காட்டப்பட்ட மிகப் பிரபலமான காட்சி.
அதேபோல் எஸ்.பி. ராஜ்குமார் என்பவர் இயக்கிய கார்மேகம் (2002) திரைப்படத்தில் சலவைத்தொழிலாளி கஞ்சா (அது என்ன கஞ்சா?) என்ற பெயரில் வரும் வடிவேலு பிற ஜாதி இந்துக்களுக்குச் சமமாக டீ கடையில் சேரில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு கவுரவமாக பேப்பர் படிக்க முற்பட்டு மல்லாக்க விழுந்து அசிங்கப்படுவதாகவும், சாக்கடையில் விழுந்து கேவலப் படுவதாகவும், டீ கடைக்காரர் கழிவுத்தண்ணீரை வடிவேலு மீது ஊற்றுவதாகவும் காட்சியமைக்கப் பட்டிருந்தது.
இவ்வாறே கவுண்டமணி ஓர் திரைப்படத்தில் லாட்டரி டிக்கெட்டில் பல லட்சம் பரிசு விழுந்து விட்டதாக நம்பி சவரக்கத்திப் பெட்டியை ஆற்றில் தூக்கிப் போட்டுவிட்டு உள்ளதும் போய் அம்போ வென நிற்பதாகக்காட்சிப் படுத்தப்பட்டார். மணிரத்னத்தின் இதயக்கோயில் திரைப்படத்தில் சவரத்தொழியான கவுண்டமணி சங்கீத வித்வானாக வேண்டும் என்ற ஆசையில் சவரத்தொழிலை விட்டுவிட்டு சபாக்களில் பாட்டுப் பாடி அசிங்கப் படுவதாகக் காட்டப்பட்டார்.
சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் சலவைத்தொழிலாளியான செந்தில் அறிவுப்பூர்வமாக கேள்வி கேட்பதாக நினைத்து முட்டாள் தனமாக சிந்தித்துச் செயல்பட்டு ஊராரிடம் எல்லாம் தர்ம அடிபடுவதாகக் காட்டப் பட்டார். இதுபோன்ற காட்சியமைவின் வழியாக இத்திரைப்படங்களின் இயக்குனர்கள் பார்வையாளர்களுக்கும் சவர, சலவைத்தொழிலாளிகளுக்கும் ஓர் நீதியைச் சொல்ல வருவதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
”இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படாதே!” என்ற நீதி தான் அது. இந்த நீதி ஒரு ஜாதிய வர்க்க சமூகத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட விளிம்பு நிலைச் ஜாதியினரைப் பார்த்துச் சொல்லப் படும்போது அது என்ன விதமான பொருளைத்தரும்? என்று நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. அது ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித்திட்டம் போன்றதொரு அநீதியாக நம்முன் பல்லிழித்துக்கொண்டு நிற்கிறது.
மேலும் சலவை, சவரத்தொழிலாளர்கள் முட்டாள்கள், அவர்கள் பிற ஜாதி இந்துக்களுடன் சமமாக போட்டி போடக்கூடாது. அவ்வாறு போட்டியிட்டால் அவர்கள் தான் அசிங்கப்பட நேரிடும் என்று அவர்களை அடங்கி ஒடுங்கிப்போகவும் சொல்லி எச்சரிக்கிறது. இவைதான் தமிழ்ச்சினிமா சொல்லும் நீதியாக உள்ளது.
@
இதுவரை நாம் பார்த்த விபரங்களின் அடிப்படையில் பார்த்தால் ஒன்று நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது அதாவது திருடனாக, தாதாவாக, மக்களை மிரட்டி மாமூல் வாங்கும் ரவுடியாக, பொறுக்கியாக, போக்கிரியாக, தோன்றுவதில் கூச்சபடாத, தயங்காத நமது முன்னணி நடிகர்களுக்குச் சலவைத் தொழிலாளர்களாகவும், சவரத் தொழிலாளியாகவும் தோன்றுவதில் மிகுந்த தயக்கமும் மனத்தடையும் இருந்து வந்துள்ளதையே மேற்காணும் திரைப்படப் புள்ளி விவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
திரைப்பட இயக்குனர்களிலும் ஒருசிலரைத் தவிரப் பலருக்கும் சவரத் தொழிலாளர் மற்றும் சலவைத் தொழிலாளர் வாழ்க்கையைக் கதைக்களமாகத் தேர்வு செய்வதிலும் விருப்பமில்லை என்ற உண்மையையும் இவை காட்டுகின்றன. சலவை, சவரத்தொழிலாளர் மட்டுமல்ல துப்புரவுப் பணியாளர் வேடத்தையும் 100க்கு 99.9 சதவீத முன்னணி நடிகர்கள் ஏற்றதில்லை என்ற உண்மையையும் இங்கு நாம் பதிவு செய்ய வேண்டியுள்ளது.
ஆகத் தமிழ்ச்சினிமா என்பது தன்னளவிலேயே கதை, களத்தேர்வில் ஓர் தீண்டாமையைக் கடைபிடித்து வந்துள்ளதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது ஓர் ஹீரோ ஆவதற்கான தகுதிகள் இதுபோன்ற விளிம்பு நிலைக் கதா பாத்திரங்களுக்கு கிடையாது என்ற ஓர் மனப்பதிவு இங்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், முன்னணி நடிகர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்திவருவதையும் நாம் உணர முடிகிறது.
அடுத்ததாக விளிம்பு நிலை, எளிய உழைக்கும் மக்கள் வாழ்க்கை என்பது நகைப்புக்குரியதும், கேலிக்குரியதுமே அன்றி வீரமும் ஈரமும், காதலும் மோதலும், திருப்பங்களும் அதிர்வுகளும் நிரம்பியதல்ல என்ற ஓர் ஜாதிய மன நிலை சார்ந்த முன்முடிவுகளால் தீர்மாணிக்கப்பட்டுவருவதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் சினிமா என்பது வாழ்க்கையின் பிரதிபளிப்புதான் என்று நாம் கருதினால் மனித வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்தே சினிமா உள்ளிட்ட கலை இலக்கியங்கள் பிறக்கின்றன என்று நாம் கருதினால் சினிமாவில் நாம் காண்பதைப்போலவே சலவை, சவரத்தொழிலாளர்கள் நிஜ வாழ்விலும், சமூக, பொருளாதார, அரசியல், நிகழ்வுகளிலும் கூட தீர்மாணிக்கும் இடத்திலிருந்து விலக்கப்பட்டுத் தூரமாக, விளிம்புகளில், ஒரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்ற யதார்த்த உண்மையையே சினிமா படம்பிடித்துக் காட்டுகிறது என்பதோடு அதனை நியாயப் படுத்தும் வகையில் ரசனைக்குரிய ஒன்றாகத் திரும்பத்திரும்பக் காட்டி பார்வையாளர்களின் பொதுப் புத்தியில் ஆணியடித்து வருகிறது என்பதையும் கூறவேண்டும்.
இத்தகைய போக்குகளுக்கு மாறாக ஏழை எளிய விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையிலும் காதல் முதல் தியாகம் வரை அனைத்துமுண்டு. அவர்களின் வழ்க்கையும் படைப்பிலக்கியத்திற்கான மூலப்பொருளைக் கொண்டதுதான். என்பதோடு கதா நாயகர், நாயகியர் பாத்திரம் மற்றும் கதைக்களத் தேர்விற்கான தகுதிப்பாடுகளில் ஒன்றாக ஜாதியை முன்னிறுத்தும் போக்கையும் இனிவரும் சினிமா கைவிட வேண்டும்..
மேலும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களின் மீது இதுவரை சுமத்தபட்டுவரும் குறிப்பிட்ட ஜாதிய அடையாளத்தையும் கைவிட்டு நகைச்சுவை உணர்வும் கோமாளிகளும் எல்லா இடங்களிலுமுண்டு என்ற உண்மையை ஏற்று அதையும் சமூகமயப்படுத்துவதன் மூலம் தமிழ்ச்சினிமா ஜனநாயகப்படட்டும் என்று வலியுறுத்திக்கூற வேண்டியுள்ளது…