அழிக்கப்பட்டுவிட்ட எங்கள் வீட்டில் இன்னும் எஞ்சியிருப்பது இந்தச் சாவி மட்டுமே…- மரியம் அபு துக்கா.
“என் கையில் வைத்திருக்கும் இந்தச் சிறிய சாவி, என் குடியிருப்பின் திறவுகோலாக இருந்தது.
இதுவே எங்கள் வீட்டில் எஞ்சியிருப்பது. இனி இல்லாத வீட்டிற்கு ஒரு திறவுகோல்.
எங்கள் வீடு நீண்ட காலமாகக் குறிவைக்கப்பட்டு, இறுதியாகத் தாக்கி தரை மட்டமாக்கப்பட்டது.
எங்கள் வீடு ஆறு அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட மூன்று மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதன் அடித்தளத்தில் எங்களுடைய ஸ்டோர் ரூம் ஒன்று இருந்தது. பிறகொரு காலத்தில் எங்களுக்குத் தேவைப்படலாம் என்ற நோக்கில் மேஜை, நாற்காலிகளை அங்கு வைத்திருந்தோம்.
இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. அனைத்தும் இலக்காகி, அழிக்கப்பட்டு, காற்றில் கலந்துவிட்டன. இப்போது எஞ்சியிருப்பது – எங்களின் குழந்தைப் பருவ நினைவுகள், குடும்பத்தின் மகிழ்ச்சியான தருணங்கள், மறக்கடிக்கப்பட்ட சிரிப்பலைகள் என அனைத்தும் நிரம்பியிருந்த வீட்டின் சாவி மட்டுமே.
எங்கள் வீடு குறிவைக்கப்பட்டது என்று தெரிந்த நாளிலிருந்து, போருக்குப் பிறகு நாம் எப்படி வாழப் போகிறோம் என்ற எண்ணங்கள் தான் தினமும் என் மனதில் தோன்றிக்கொண்டிருந்தன, ‘எங்கே வாழ்வோம், இங்கேயாவா? அல்லது நகரின் வேறு ஏதாவது ஒரு பகுதியிலா?’
எங்களுடையவை அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. அடுக்குமாடிகள் பழங்கதைகளாகிவிட்டன. இப்போது அவை அனைத்தும் இடிபாட்டுக் குப்பைகள் மட்டுமே. குடியிருக்க ஒரு வாடகை வீடு கிடைக்கும் என நாங்கள் இப்போது நினைக்கமுடியாது. இதைப்பற்றி நினைப்பதே மிகவும் துன்பத்தைத் தரக்கூடியதாகவும், என் தலையில் ஏதோ உருளுவது போலவும் இருக்கிறது.
எங்கள் வீடுகளையும் மற்ற எல்லா வீடுகளையும் யார் புனரமைக்கப் போகிறார்கள்?. எங்கள் வீட்டை மீண்டும் கட்டியெழுப்ப நான் கடினமாக உழைத்து, பொருளீட்டவேண்டும். ஆனால் மற்றவர்கள் பற்றி!. காசாவின் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறிவிட்டார்கள். அவர்களிடம் எஞ்சியிருப்பது இதுபோன்ற ஒற்றைச் சாவிதான்.
காசாவின் அழிவு மிகவும் பெரியது. புள்ளிவிபரங்கள் முழு உண்மையைச் சொல்லிவிடமுடியாது. இஸ்ரேலியர்களின் பழிவாங்கும் நடவடிக்கைக் குறித்தும், எதிர்காலத்தில் அவர்கள் திட்டமிடும் இன அழிப்பு குறித்தும் விளங்கிக்கொள்ள இப்போது அவர்கள் காஸா நிலப்பரப்பில் நிகழ்த்தியுள்ள கோரப்படுகொலைகள் மற்றும் அழிவுகளின் நிழற்படங்களை நீங்கள் பார்த்து புரிந்துகொள்ளவேண்டும்”.
(பத்திரிக்கையாளர் மரியம் அபு துக்கா, தனது குடும்ப உறுப்பினர்கள் மற்று நண்பர்களுடன் பாலஸ்தீனம் காசாவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்தார். இவை அனைத்தும், தற்போது இஸ்ரேலினால் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன. கடந்த அக்டோபர் 7 முதல் அவரது சகாக்கள் 120 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். இருந்தபோதிலும், அபு துக்கா காஸாவில் நடக்கும் கொடூரங்களைத் தொடர்ந்து செய்தி அறிக்கைகளாக நமக்குத் தருகிறார்).
நன்றி : countercurrents.org