பெண் போராளிகள் – தமிழில்: கமலாலயன்
(தில்லி விவசாயிகள் போராட்டத்தில் பெண்களின் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் 17.12.2021 தேதியிட்ட ஆங்கில இதழ் Frontline இல் டி. கே. ராஜலெக்ஷ்மி எழுதிய WOMEN WARRIORS என்னும் கட்டுரையின் தமிழாக்கமே இக்கட்டுரை. தமிழின் காத்திரமான மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவரான எழுத்தாளர் கமலாலயன் அவர்கள் இக்கட்டுரையை தமிழாக்கம் செய்துள்ளார்).
“நான் வெறும் பத்தாங்கிளாஸ்தான் பாஸ் பண்ணியிருக்கேன், உங்களுக்குத் தெரியுமா?”– மெல்லிய குரலில், வெட்கத்துடன் சொன்னார் ஹரீந்தர் பிந்து.பஞ்சாப்பின் முன்னணி விவசாயிகள் அமைப்பான பாரதிய கிஸான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்)- இன் பெண்கள் பிரிவுக்குத் தலைவி அவர். ஆனால் டெல்லியின் எல்லைப்புறப் போராட்டக் களங்களுக்குப் பஞ்சாப்பின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பெண் விவசாயிகளைத் திரட்டுவதில் பிந்துவின் செயல்திறன் வெளிப்பாட்டுக்கு, இவருடைய அந்தக் குறைந்தபட்சக் கல்வித்தகுதி ஒருவிதத்திலும் தடையாக இருக்கவில்லை! உண்மையில், அது ஓர் எதிர்மறை அம்சமே இல்லை என்று அவர் ‘ஃபிரண்ட்லைன்’ செய்தியாளரிடம் சொன்னார். ஜனநாயகப்பூர்வமான பல்வேறு எதிர்ப்புப் போராட்ட வடிவங்களில் பங்கெடுத்துக் கொள்வதில் பஞ்சாப்பின் பெண்கள், குறிப்பாக விவசாய சமூகங்களிலிருந்து வரும் பெண்கள் மிக நன்கறியப்பட்டவர்கள். அவர்கள் கடந்த காலங்களில் கையிலெடுத்துப் போராடிய பிரச்சினைகளுள் விவசாயிகளின் கடன் சுமை, நுன்நிதியாதிக்கம், பெரும்பணக்காரர்கள் – ஆதிக்க சக்திகள் பெண்களுக்கு எதிராகத் தொடுத்துவரும் கொடுமைகள் – போன்று (பெரும்) பேரளவிலான பல இடம் பெற்றிருந்தன. பெண் உழைப்பாளிகளைப் பெரும் எண்ணிக்கையில் திரட்டுவதற்கு மிக அதிகபட்சத் தேவையான ஓர் உந்துவிசை அழுத்தத்தை (தற்போது திரும்பப்பெறப்பட்டு விட்ட) மூன்று மத்திய சட்டங்கள் தந்திருக்கின்றன.
தங்களுடைய வாரிசுகளின் எதிர்கால வளம், தங்களுடைய நிலத்தைத் தாங்கள் இழக்க நேர்ந்தாலோ அல்லது தமது வேளாண் உற்பத்திப் பொருள்களின் மீது தமது கட்டுப்பாட்டை இழக்க நேர்ந்தாலோ காலகாலத்துக்குமாக இழக்கப்பட்டுவிடும் என்று அவர்கள் கருதுகின்றனர். மூன்று வேளாண் சட்டங்களும் தங்களுடைய எதிர்கால வளம், நிலம், வேளாண் உற்பத்திப் பொருள்கள் மீதான தமது கட்டுப்பாடு – ஆகியவற்றுக்குப் பெரும் சவாலாக அமைகின்றன என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். எனவே, விவசாயிகளின் எதிர்ப்பு இயக்கத்தின் வெற்றிக்கு பெண்களின் முழு அளவிலான பங்கேற்பு ஒரு முக்கியத்துவமிக்க பங்கு வகிப்பதாக அமையும்.
இந்தப் பெண்கள் பெரும்பாலும் கல்வியறிவு பெறாதவர்கள்; ஆனால், வேளாண் சட்டங்களின் உள்ளீடாகப் பொதிந்திருக்கும் ஆபத்துகள் பற்றி மிகத் தெளிவான புரிதல் பெற்றிருக்கிற இப்பெண்கள் சிங்கு, திக்ரி, காஸிபூர், ஷாஜஹான்பூர், பால்வால் உள்ளிட்ட, டெல்லியின் புறநகர்ப் பகுதிகளின் எதிர்ப்பியக்கப் பகுதிகளில் காணப்படும் மிக பிரம்மாண்டமான, பெருமதிப்பிற்குரிய பேராற்றலாகத் திரண்டுள்ளனர். கடந்த ஓராண்டு காலமாக, ஆண் விவசாயிகளுடன் தோளோடு தோளாக இணைந்து போராடி வரும் நிலையில் திக்ரிடயில் இப்பெண்கள் எதிர்கொள்ள நேர்ந்த பிரத்யேக, பாலினம் சார்ந்த அசௌகரியங்கள் ஒருபுறமிருப்பினும் அவற்றைப் புறந்தள்ளி விட்டு, தலைகளைப் பிரகாசமான மஞ்சள் துப்பட்டாக்களால் மூடிக்கொண்டு உறுதி குலையாமல் நிற்கின்றனர். இவ்வளவு நீண்ட காலத்துக்கு இந்தப் போராட்டம் தங்களை இழுத்தடிக்கும் என்று இவர்கள் யாரும் அதற்கான தயாரிப்புடன் இல்லை. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கு விவசாயிகளின் அந்த முதன்மைக் கோரிக்கை நிறைவேறுவதற்கு ஓராண்டு காலம் பிடிக்கும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஒவ்வொரு பருவகாலமும் தாண்டிப் போகப்போக, தாங்கள் ஒரு மூடப் பிடிவாதமிக்க அரசை எதிர்கொள்கின்றனர் என்பதை அவர்கள் உணர்ந்தனர். தமது நிலத்தையும், தமது குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக எந்த அளவு நீண்ட தூரத்துக்கு வேண்டுமானாலும் போவதற்குத் தயாரான தமது கடப்பாட்டுறுதிக்கு திடமான நெஞ்சுரத்துடன் நிற்பதை மேற்கண்ட அசௌகரியங்கள் மேலும் உறுதிப்படுத்தி வலிமையூட்டுவனவாகவே அமைந்தன. போராட்ட இயக்கத்தைத் தொய்வின்றிக் கொண்டு செல்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் பெண்கள், தளராமல் செய்தார்கள்: ஆண்களோடு சேர்ந்து அவர்கள் டிராக்டர்களை ஓட்டினர்; சமூக உணவுக் கூடங்களான ‘லங்கார்’களை நிர்வகித்தனர்; இவற்றுக்கெல்லாம் மேலாக,மேடைகளிலிருந்து போராட்டக்காரர்களிடம் உரைகளை நிகழ்த்தவும் செய்தனர்.
விவசாயிகளின் போராட்டக் களத்திற்கு மாபெரும் பெண்கள் திரளைத் திரட்டியனுப்பியது பாரதிய கிஸான் யூனியன் (ஏக்தா – உக்ரஹான்) ஆகும். ஹரீந்தர் பிந்துவின் கூற்றுப்படி, 2000-மாவது ஆண்டுகளின் தொடக்கத்திலிருந்தே பெண் விவசாயிகளை அணி திரட்டி வருகிறது. வேளாண்மைத் தொழிலுக்கான மானியங்களை வெட்டிக் குறைத்தாக வேண்டுமெறு பரிந்துரைகளை முன் வைத்த டங்கல் வரைவுக் கொள்கை [டிசம்பர், 1991]களை எதிர்த்த போராட்டங்களில் பங்கேற்றது முதல் பெண்களின் பங்கேற்பு தொடங்கியது. இதன் விளைவு, பஞ்சாப்பிலிருந்து நெல் கொள்முதல் செய்வதையே அரசாங்கம் நிறுத்திவிட்டதாக ஹரீந்தர் பிந்து கூறுகிறார். “சகோதரிகளே!உங்களுடைய உரிமைகளுக்கான போராட்டங்களில், உங்கள் சகோதரர்களுடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்! நாம் ஒன்றாக இணைந்து உரிமைகளை வெல்லலாம்!” என்பதுதான் அப்போது பெண்கள் எழுப்பிய முழக்கம். இந்த அமைப்பு தொடர்ந்து 72 மணி நேரங்களுக்கு ரயில் ஓடாமல் தடுத்து முற்றுகையிட்டது. பஸ் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டதையும், துப்பாக்கிச் சூட்டில் இரண்டு கூலித் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதையும் எதிர்த்து 2002-ஆம் ஆண்டில் ஹரீந்தர் பிந்துவின் கிராமத்திலிருந்து ஏராளமான பெண்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பத் திரண்டனர். ஒரு மைனர் பெண் கடத்தப்பட்டு, வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வு ஓர் உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியபோது, அதை எதிர்த்துத் தெருக்களில் சுமார் 4,500 பெண்கள் – அவர்களுள் ஆகப் பெரும்பான்மையினர் விவசாய சமூகத்தினர் – திரண்டு போராடினர். இந்த அமைப்பு இப்படி படிப்படியாக 22 பெண் தலைவர்களை வளர்த்தெடுத்து அவர்களை மேடைகளில் உரையாற்ற வல்லவர்களாக ஆக்கியதென ஹரீந்தர் பிந்து கூறுகிறார். ஆகஸ்ட் 2019-இல் காஷ்மீருக்கு சிறப்பு நிலை வழங்கும் 370-ஆவது ஷரத்து ரத்து செய்யப்பட்டபோதும், ஒன்றிய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை [CAA] நடைமுறைப்படுத்த முயன்றபோதும் பாரதிய கிஸான் யூனியன் [உக்ரஹான்] அமைப்பின் பெண் உறுப்பினர்கள் அந்த முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் களம் புகுந்தனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் புதுடெல்லியில் ஷாஹீன் பாக்கில் நடைபெற்ற மறியலில் கூட விவசாய சமூகப் பெண்கள் பங்கேற்றுள்ளனர்.
ஹரீந்தர் பிந்து சொல்கிறார்: “வேளாண் சட்டங்கள் அவசரச் சட்ட வரைவுகளாக அறிவிக்கப்பட்ட பொழுது, அவையெல்லாம் என்னதான் சொல்கின்றன என்பதை இனங்கண்டறிய நாங்கள் முயற்சி செய்தோம். சிறு-குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடைமுறையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இது ஒரு மரண தண்டனை அறிவிப்புக்கு எந்த விதத்திலும் குறைவானதல்ல என்பதை நாங்கள் உணர்ந்தோம். எனவே, இந்த முனையில் எங்கள் எதிர்ப்புகளைத் தீவிரப்படுத்துவதென்று முடிவு செய்தோம்.” விவசாயிகள் கோவிட்-19 தீநுண்மிப் பெருந்தொற்றை எதிர்கொண்டு மீண்டு வருவார்களா என்பது நிச்சயமற்ற ஒன்று. ஆனால் இந்தப் புதிய வேளாண் சட்டங்களின் கீழ் இவர்கள் அனைவரும் நசுங்கிச் சிதையப்போவது மட்டும் சர்வ நிச்சயம்.
இந்த நாசகரமான சட்டங்களை எதிர்த்துப் போராடி வெல்வதற்கு ஆகப் பரந்து விரிந்த அளவுக்கு சாத்தியமான ஒருமைப்பாட்டுணர்வு தேவை என்ற கட்டாயம் அவர்களுக்குத் தெளிவாயிற்று.
அவர் சொன்னார்: “பெண்களை அவரவர் வீடுகளிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கு வகை செய்யும் நோக்கில் கிராமம் கிராமமாக ‘மோர்ச்சா’க்களை நடத்தினோம். பெண்கள் பெரும் எண்ணிக்கைகளில் பங்கேற்றனர். அவர்கள் தங்களுடைய வீட்டு வேலைகள், விவசாய வேலைகள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு, கடைசியில் கூட்டத்திலும் வந்து பங்கேற்றனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து கொள்வார்கள்; இரவு படுக்கப் போவதற்கு 11 மணிக்கு மேலாகி விடும். தங்கள் வசம் துண்டு நிலமேனும் இருக்காமற் போனால், அவர்கள் சமைப்பதற்குப் பாரம்பரிய அடுப்பான சூன்காவுக்கு நெருப்பு மூட்ட வேண்டிய வேலையே இராது என்பதை அவர்கள் உணர்ந்தனர். எங்களுடைய அமைப்பு இருக்கும் இடங்களில், சுமார் 600 கிராமங்களைச் சேர்ந்த 26,000 பெண்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றிருந்தனர். ஒன்றிய அமைச்சரவையில் இன்னமும் ஓர் அமைச்சராக நீடித்திருக்கும் ஹர்சிம்ராத் கவுர் பாதலுக்கு எதிராகத் திரண்டிருந்த பொது மக்களின் எழுச்சி மிக்க மனநிலையை உணர்ந்தபின், அவருடைய கட்சியான சிரோன்மணி அகாலிதள், தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்திலிருந்து வெளியேறிய பிறகுதான் அவர் தன் பதவியிலிருந்து (செப்டம்பர், 2020) ராஜினாமா செய்தார்.”
போராட்டம் மூன்று சக்திகளுக்கு எதிரானதாக இருந்தது: மத்தியில் ஆளும் அரசாங்கம், பெருவணிகக் கூட்டமைப்பு, இவற்றுக்கு ஆதரவான கட்சிகள் – ஆகியவை அந்த மூன்று சக்திகள். பெட்ரோல் பம்ப்புகள், சில்லறை வணிக நிலையங்கள், தானியக் கிடங்குகள், சில குழுக்களின் பன்னாட்டு வர்த்தகச் சங்கிலித் தொடர்கள் – அனைத்தும் மறியல் மூலம் முடக்கப்பட்டன. பங்கேற்ற போராட்டக்காரர்களுள் ஆகப் பெரும்பான்மையினர் பெண்களே. ஹரியானாவிலும், பஞ்சாப்பிலும், தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் “சுங்கச் சாவடி”கள் விவசாயிகளால் “விடுவிக்க”ப்பட்டன. இந்தப் போராட்டத்தில் பெண்கள் செயலூக்கமிக்க பங்காற்றினர். டெல்லிக்கும், பஞ்சாப்புக்குமிடையே போய் வந்து கொண்டிருந்த வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
போராட்டத்தின் ஓராண்டு நிறைவு நாளான நவம்பர் 26, 2020 அன்று டெல்லியை நேக்கி நடைப்பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. போராட்டக் களங்களில் முகாம்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், படுக்கை விரிப்புகள், பிற அத்தியாவசியப் பொருள்களைச் சேகரித்துத் தந்ததன் மூலம் மேற்கண்ட பேரணியின் தயாரிப்புகளில் உதவினர். “முன்பெல்லாம், இம்மாதிரியான பணிகள் ஆண்களால் மேற்கொள்ளப்படும்.இந்தத் தடவை, அத்தியாவசியப் பொருள்களைச் சேகரிக்கும் பொறுப்பைப் பெண்கள் எடுத்துக்கொண்டனர். குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வரை தாக்குப் பிடிக்கத் தேவையான அளவு உணவுப் பொருள்களை அவர்கள் சேகரித்துத் தந்தனர். காரணம், மத்திய அரசு பின் வாங்கும் வரையில், அவ்வளவு காலம் போராட்டம் நீடித்துத் தொடரும் என்று அவர்கள் அறிந்திருந்தனர். இந்தப் போர், வெறுமனே நரேந்திர மோடி அரசாங்கத்தை எதிர்த்தது மட்டுமல்ல; மாறாக, ஏகாதிபத்தியத்துக்கு எதிரானதும் கூட!” – என்றார் ஹரீந்தர் பிந்து.இந்த ஆண்டு ஜூலையில் போராட்டக்காரர்களைக் கொச்சைப்படுத்திய இரண்டு சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, பஞ்சாப் பெண்கள் தடிகளை உயர்த்தி முற்றுகையிட்டதன் மூலம் தமது வலிமையைக் காட்டி அவர்களை வாய்மூடச் செய்தனர்.
ஹரியானா மாநிலத்தில், டாப்வாலியிலும், கன்னாயூரியிலும் போலீசாரின் தடுப்பரண்களை உடைத்துக் கொண்டு பெண்கள் பஞ்சாப்பிலிருந்து 2020, நவம்பர் 27 அன்று ஊடுருவியுள்ளனர். அந்தப் பெண் போராளிகளின் வலிமை மிக்க அணி வகுப்பைக் காண்பதில் பெண்கள் வியப்புக்குள்ளாகிவிட்டனர் என்றார் ஹரீந்தர் பிந்து. இந்தக் காட்சி ஹரியானாவின் பெண்கள் மீது அபாரமான அளவுக்குக் குறிப்பிடத்தக்கதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களும் வெகு விரைவில் சிங்குவிலும், திக்ரியிலும் போராட்டக் களங்களுக்கு வந்து இணைந்து கொண்டனர். பஞ்சாப்பிலிருந்து வந்திருந்த பெண்களின் பயன்பாட்டுக்காக, ஹரியானா பெண்களுள் ஆகப் பெரும்பான்மையோர் தங்களின் வீடுகளைத் திறந்து விட்டிருந்தனர். எதிர்ப்பாளர்களின் உடைகளைத் துவைத்து தரத் தாங்கள் தயாராயிருப்பதாகக் கூட குறிப்பிட்டனர் அவர்கள். நீண்ட காலமாக சட்லெஜ்-யமுனா நதிகளை இணைக்கும் கால்வாயின் நீரைப் பயன்படுத்துவது தொடர்பாக இரு மாநிலங்களின் மக்களுக்கிடையே நிலவிவரும் தகராறுகளைக் கடந்து, தனித்தன்மை வாய்ந்த ஓர் ஒருமைப்பாடு வார்த்தெடுக்கப்பட்டது.
ஜனவரி 26 அன்று, பெண்கள் பஞ்சாப்பில் டிராக்டர் அணி வகுப்புகளை நடத்தினர். டெல்லியில் அந்த நாளில் நடத்தப்பட்ட மாபெரும் கிஸான் பேரணியில் அப்பெண்களுள் பெரும்பாலானோர் பங்கேற்றிருந்தனர். இந்தப் பேரியக்கம், பாலின வகிபாகங்கள் தலைகீழாக மாற்றமடைந்ததைக் கண்டது. போராட்டக் களங்களில், லங்கார்களில் (சமூக உணவகங்கள்) ஆண்கள் உணவு சமைப்பதிலும், பரிமாறுவதிலும், துப்புரவு செய்வதிலும் கூட ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது. கிராமங்களில் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்துக்கொண்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பவர்களான பெண்கள், இந்தக் காலகட்டத்தில் வேளாண் சட்டங்கள் தொடர்பான விவாதங்களையும், செய்திகளையும் கவனிப்பதில் முற்றிலுமாகத் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருந்தனர். சம்யுக்த கிஸான் மோர்ச்சா தலைவர்கள் என்ன சொல்கின்றனர் என்று கவனிப்பதிலும் மிகப் பெருமளவு கவனங் குவித்தனர். பஞ்சாப்பிலும், ஹரியானாவிலும் சுங்கச் சாவடிகளை “விடுவிக்க” வேண்டுமென்று விவசாய சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்தன. “என் கிராமத்தில், எட்டிலிருந்து பத்துப் பெண்கள் ஒன்றாகத் திரளுவார்கள்; ஒரு மாட்டு வண்டியின் மீது ஏறிக்கொண்டு சுங்கச் சாவடிகளை நோக்கிப் புறப்பட்டு விடுவார்கள்.டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்குத் தங்களுடைய பங்கினை வழங்கத் தாங்கள் கடமைப்பட்டவர்கள் என்று அவர்கள் உணர்ந்திருந்தனர்.” என்கிறார் அவர்.
சுங்கச் சாவடிகளிலேயே பஞ்சுப் பொதிகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளையும் கூட மேற்கொண்டனர். போராட்டக் களங்களிலேயே சர்வதேசப் பெண்கள் தினத்தை அனுசரிப்பதென்று முடிவெடுக்கப்பட்டபோது, பெண்கள் நிதிகளைத் திரட்டியதுடன் டெல்லிக்குப் பயணம் செய்வதற்கான பேருந்துகளையும் வாடகைக்கு அமர்த்தினர். அவர்கள் டெல்லிக்குப் போயே தீர வேண்டுமென்பதில் ஆண்கள் அவ்வளவாக அக்கறை காட்டாதபோதுங்கூட, பெண்கள் சென்று வந்தனர்.
சமதையான பங்குதாரர்களாக…:
பஞ்சாப் கிஸான் யூனியனின் மாநிலக்குழு உறுப்பினரான ஜஸ்பீர் கவுர் சொல்கிறார்: “லாகூர் நகரை வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்க்கத் தவறிவிட்டால் அந்த வாழ்க்கையே வீண்தான் – என்று ஒரு பழமொழி பஞ்சாபியில் உண்டு. லாகூரின் மேன்மை பற்றியது அது. இப்போது அது வேறுவிதமாய் புதிய மொழியாக மாறிவிட்டது: ‘விவசாயிகளின் போராட்ட இயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளாமற் போனால், வாழ்க்கைக்கே பொருள் இல்லாமற் போய்விடும்’ என்று பெண்கள் கருதுகின்றனர்.” வேளாண் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்ட பொழுது, தான் சார்ந்துள்ள அமைப்பு நுண் கடன் வழங்கு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் மும்முரமாக மூழ்கியிருந்ததென்று அவர் சொன்னார். வேளாண்மை தொடர்பான அவசரச் சட்டங்களின் அதீதத் தீமை அவர்கள் மேல் கவிந்தபோது, மாநிலம் நெடுக எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கியபோது பெண்கள் அவற்றில் இணைந்து கொள்வது என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது. இரயில் போக்குவரத்து மறுபடியும் பஞ்சாப்பில் தொடங்கப்பட்டதால், பெண்கள் டெல்லிக்குப் போவது சாத்தியமானது. [விவசாயிகளின் எதிர்ப்பு இயக்கங்கள் தொடங்கப்பட்டதுமே 2020, செப்டம்பர் 24 – முதல் பஞ்சாப்பில் ரயில் போக்குவரத்து முற்றாக முடங்கிப்போனது.]
உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. போப்டே, ஜனவரி மாதம் 2021 இல், பெண் போராட்டக்காரர்கள், முதிய வயதினர், குழந்தைகள் ஆகியோர் வீடுகளுக்குத் திரும்பிப் போக வேண்டுமென்று ‘அறிவுரை’ வழங்கினார். விவசாயிகள் என்ற முறையில், இயக்கத்தில் தொடர்ச்சியாகத் தங்கியிருந்து போராடியாக வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாகவே பெண்கள் கருதினர். “எந்த ஒரு பொதுக் கூட்டத்திலும், முன் வரிசைகளை நிரப்புபவர்களாகத்தான் பெண்கள் அதன் பிறகு இருந்தோம்.போராட்டக்காரர்களைப் பலவந்தமாக அகற்றுவதற்குப் போலீசார் எப்போதாவது முயல்வார்களே எனில், பெண்களாகிய நாங்கள் முதலில் அவர்களை எதிர்கொண்டு சமாளிப்போம் என்று ஆண்களிடம் நாங்கள் கூறியிருந்தோம்…” என்று சொன்னால் ஜஸ்பீர் கவுர்.
விவசாயிகளின் கூட்டமைப்பான சம்யுக்த கிஸான் மோர்ச்சா (SKM) தங்களுடைய நிகழ்ச்சிகள் அனைத்திலும் பெண்களை மைய அரங்குகளில் இருத்தியிருந்தது. ஜனவரி 18-ஆம் நாளை ‘மஹிளா கிஸான் திவாஸ்’ என அறிவித்திருந்ததாக ஜஸ்பீர் கவுர் சொன்னார்: “வேளாண்மைத் தொழில் நடவடிக்கைகளில் பெண்கள் நேரடியாக ஈடுபடுவதில்லை; அல்லது வேளாண் சொத்துகளில் பெண்களுக்கு ஒரு பங்கும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்ற முறையிலும், வழக்கமான அன்றாடக் கடமைகள் தொடர்புடைய பல வேளாண்மைப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள் என்ற அடிப்படையிலும் போராட்ட இயக்கத்தில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டியது தமது கடமை என்று உணர்ந்திருந்தனர்.”
மோர்ச்சா நடத்திய இந்த நெடிய போராட்டத்தில், பெண்களில் பலரும் ஆண்டு முழுக்க பங்கெடுத்திருந்ததாக ஜஸ்பீர் சொன்னார். “உங்களை (பெண்களை) இங்கே சமைப்பதற்காக அழைத்து வந்திருக்கிறார்களா “ என்று கூட ஒரு செய்தியாளர் என்னிடம் கேட்டார். போராட்டக் களங்களில், சமையல் வேலைகளுள் ஆகப் பெரும்பான்மையானவற்றை ஆண்கள்தாம் செய்து கொண்டிருக்கிறார்கள்; பெண்கள் வெறுமனே உதவிகள் மட்டும் செய்கிறோம். அப்படியிருக்கையில் மேற்குறிப்பிட்ட செய்தியாளரின் கண்ணோட்டம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. முன்னதாக, பொதுக் கூட்டங்களில் உரைகள் நிகழ்த்துகையில் ஆண்கள்தான் தலைமைப் பொறுப்புகளில் இருப்பது நடைமுறை. பொதுவெளிகளில் பேசுவதற்குக் கூச்சப்பட்டுக் கொண்டிருந்த பெண்கள், இப்போது தடையரண்களை உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டனர். நாட்டார் பாடல்களில் இசைக் கோவைகளின் அடிப்படையில் எதிர்ப்பியக்கப் பாடல்களையும் கூட எழுதிப் பாடத் தொடங்கிவிட்டார்கள்…” என்கிறார் அவர்.
டெல்லி நகர எல்லைப் பகுதிகளில், போராட்டங்களின் வேகத்தை நிலையாகத் தக்க வைப்பதற்காக ஆண்கள் அங்கேயே தங்கிவிட்டிருந்த சூழலில், பல பெண்கள் பயிர்கள், கால்நடைகளைப் பராமரித்தாக வேண்டுமென்ற நிலையில் கிராமங்களில் தங்கியிருக்கவும் செய்தனர். பெண்களில் சிலர், வேளாண் உற்பத்திப் பொருள்களை விற்கவும் கூட செய்தனர். ஜனவரி 7-ஆம் நாளன்று, ஓர் எக்ஸ்ப்ரஸ் வேயின் சுற்றுப் பகுதியில் ஒரு பேரணி நடத்தப்பட்ட பொழுது, பெண்களே பெரும் எண்ணிக்கைகளில் டிராக்டர்களை ஓட்டிக்கொண்டு போய்ப் பங்கேற்றிருந்தனர். ஹரியானா மாநிலத்திலிருந்து மிகப் பெரும் திரள்களாகப் பெண்கள் வந்து பங்கேற்றதுதான் மிக ஆச்சரியம் தந்த அம்சம் என்கிறார் ஜஸ்பீர் கவுர்.
“பெண்கள் தமது முகத்திரைகளை மேலே எடுத்துவிட்டுக் கொண்டு பங்கேற்றிருந்தனர்.ஒரு குறிப்பிட்டகிராமத்தில், முழுக்க முழுக்க பெண்களே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு விட்டனர். எல்லைகளில் நடைபெற்று வந்த எதிர்ப்பியக்கத்தில் பங்கேற்பதற்கு அக்கிராமத்தின் ஒவ்வொரு குடும்பமும் குறைந்தபட்சம் ஓர் உறுப்பினரையாகிலும் அனுப்பி வைக்க வேண்டுமென்று அவர்கள் பிரகடனம் செய்திருந்தனர்” என்றார் அவர். கார்ப்பரேட் இந்தியா, உலக வங்கி அல்லது குறைந்தபட்ச ஆதரவு விலை [MSP] போன்ற சொல்லாடல்களை அதற்கு முன் ஒருபோதும் கேட்டிராத அந்தப் பெண்களில், இது ஒரு மிகப் பெரும் சாதனை. இப்போதோ, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வமான உத்தரவாதம், தங்கள் நல வாழ்வுக்கான தரமான மருத்துவம், குழந்தைகளுக்குத் தரமான கல்வி பற்றியெல்லாம் இப்போது அவர்கள் பேசுகின்றனர். அரசியல் நலன்களுக்காகவே இந்தப் போராட்டம் தூண்டிவிடப்பட்டது என்று அரசாங்கம் முத்திரை குத்துவது தவறான கருத்து என்கிறார் அவர். வரப்போகும் சட்டமன்றத் தேர்தல்களில் சில அரசியல் குழுக்களுக்கு இந்தப் போராட்டம் ஆதாயம் அளிக்கக் கூடுமென்பதை மறுக்க முடியாது என்று குறிப்பிட்ட ஜஸ்பீர், ஆனால் இத்தகைய [வேளாண் விரோத] கொள்கைகளை எந்த அரசியல் கட்சி முன் வைத்தாலும் அதை விவசாயிகளின் இயக்கம் எதிர்த்தே நிற்கும் என்று உறுதிபடச் சொல்கிறார்.
ஜஸ்பீர் கவுர், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் [AIDWA} மேனாள் பொதுச்செயலாளரான ஜக்மதி சாங்வான் போன்றோரின் நம்பிக்கை இது:
“பலப்பல தலைமுறைகளாக பொதுவெளிகளில் கண்ணுக்குப் புலப்படாமல் புதையுண்டு கிடந்த பெண்களின் உணர்வுகள் இப்போது எழுச்சியுற்று வெளிப்படையாகத் தங்களை இனங்காட்டிக் கொண்டிருப்பதைத்தான் இந்தப் போராட்ட இயக்கத்தில் பெண்களின் பங்கேற்பு காட்டுகிறது.” மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதியின் கண்ணோட்டத்தில், இந்தப் பெண்கள் அவரவர் குடும்பங்களின் ஆண் தலைவர்கள் அழைப்பின் பேரில் வந்து வெறும் பார்வையாளர்களாக இருப்பவர்கள் இந்தப் பெண்கள்; எனவே வீடுகளுக்குத் திரும்பிப் போகுமாறு அவர்களுக்கு அறிவுரை சொன்னார். அது தவறான பார்வை; அப்பெண்கள் போராட்ட இயக்கத்தின் பால் செயலூக்கமிக்க பங்கேற்பாளர்களாகவே கவரப்பட்டு வந்திருந்தனர் என்று அவர் சொன்னார். பஞ்சாபைப் பொறுத்தவரை, சமூக, மதம் சார்ந்த பொது இயக்கங்களிலும், பெருந்திரள் அரசியல் பேரணிகளிலும் பெண்களின் பங்கேற்புக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது; ஆனால் ஹரியானா பெண்களின் பங்கேற்பு ஒரு புதிய பெரு நிகழ்வானது. . சிறிய அளவு நில உடைமைகளைக் கொண்டுள்ள குடும்பங்களுக்கு வேளாண் சட்டங்கள் ஓர் அச்சுறுத்தலாகவே அமைந்திருந்தன. இந்த நில உடைமைகளில் தமக்கென ஒரு சிறு பங்கைப் பெற விரும்பிய பெண்களுக்கு, இந்தப் புதிய வேளாண் சட்டங்களாலும், ஏனைய நிலங்கள் கையகப்படுத்தும் சட்டங்களாலும் அந்த நில உடைமைகளைப் பறிகொடுத்தாக வேண்டிய அச்சுறுத்தல் எழுந்துள்ளது என்று ஜக்மதி சாங்வான் குறிப்பிடுகிறார்.
எண்ணற்ற கடும் துன்பங்கள்:
டெல்லியில் நிலவிக் கொண்டிருந்த எதிர்பாராத புதிர்த்தன்மை வாய்ந்த தட்ப வெப்ப நிலைகளும், பாலின ரீதியாகப் பிரத்யேகமான சிரமங்களும் பெண்களுக்குப் பெரும் சவால்களாக அமைந்தன. ஹரீந்தர் பிந்து சொன்னார்: “நாங்கள் டெல்லிக்கு வந்து சேர்ந்தபோது, அங்கே எல்லாமே மிகப் பெரும் திறந்தவெளியாயிருந்தது. எங்களுக்கு மிகப் பெரும் சவாலாக இருந்த அம்சம் – கழிவறை வசதிகள்தாம். பெண்களுக்கென்று அங்கே எந்தப் பொதுக் கழிவறையும் இருக்கவில்லை. முதலில் சில தினங்களுக்கு நாங்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டோம். நாங்கள் பஞ்சாப்பிலிருந்து புறப்பட்டு வந்தபோது, ஹரியானாவிலிருக்கும் மேஹம் சப்ஜி மண்டியில் வழித் தங்கினோம். அங்கே கடுங் குளிர் நிலவியது. ஆனால் நாங்கள் மனதளவில் தயார் நிலையிலிருந்தோம். திக்ரியை விட்டு மோர்ச்சா கிளம்பியபோது, எங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன. அதைவிட, உள்ளூர் மக்களிடம் இருந்து எங்களுக்குக் கிடைத்த பேராதரவு முன்னுதாரணமே அற்ற ஒன்று. படிப்படியாக முறையான கூடாரங்களும், முறையான கழிவறைகளும் அமைக்கப்பட்டுவிட்டன. இப்போது நாங்கள் அந்தக் கூடாரங்களில்தான் நிம்மதியாகத் தூங்குகிறோம்.”
போராட்டம் நடைபெற்றிருந்த ஒட்டுமொத்த ஓராண்டு காலகட்டம் முழுமையிலும், பெண்கள் தொடர்பான அசம்பாவித சம்பவம் என்று ஒன்று, மேற்கு வங்கத்திலிருந்து வந்த ஓர் இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரச் சம்பவம் மட்டுமே. அதை அனைத்து விவசாய சங்கங்களும் கடுமையாகக் கண்டித்திருந்தன. அது ஒன்றைத் தவிர வேறு எதுவும் நேரவில்லை.
போராட்டக் களங்களுக்கு அடிக்கடி வருகை தந்து பங்கேற்று உற்சாகமூட்டி வந்தவர் 79 வயதான குர்ஜித் கவுர் ஆவார். சாஹீத் பகத்சிங்கின் நெருங்கிய உறவினர் இவர். இவர் எல்லா ஜனநாயகப்பூர்வமான இயக்கங்களிலிலும் தவறாமல் பங்கேற்பவர்; ஆனால் எந்த ஓர் அரசியல் கட்சியோடும் தனக்கு இணைப்பில்லை என்பதை வலியுறுத்துபவர். குர்ஜித் கவுர் சொல்கிறார்: “கிராமத்துப் பெண்கள் எல்லாரும் கல்வியறிவற்ற, எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்று நாம் சாதாரணமாகச் சிந்திக்கிறோம். ஆனால், விவசாயிகளின் போராட்டம் மூலமாக, ஜனநாயகம் என்றால் என்ன, ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண எப்படி போராடுவது என்பதை அவர்கள் நிறுவிக் காட்டியுள்ளனர். தங்களுடைய புரட்சிகரமான மறுபக்கத்தை மாபெரும் தீரத்துடனும், முதிர்ச்சியுடனும் வெளிக்காட்டியிருக்கின்றனர். தங்களுடைய உரிமைகளை அவர்கள் புரிந்து கொண்டது மட்டுமன்றி, அவற்றுக்காகப் போராடவும் செய்தனர். ஹரியானாவிலிருந்து வந்திருந்த பெண்கள் சிலரை நான் சந்தித்தேன். பஞ்சாபி பெண்கள் பற்றி அவர்கள் அச்சம் கலந்த மாபெரும் மரியாதை கொண்டிருந்தனர். தங்களுடைய கிராமத்துக்குப் போய் அங்கே வாழும் மக்களிடம் பேச வேண்டுமென்று அவர்கள் எங்களைக் கேட்டுக் கொண்டனர். நான் கட்டாயம் போவேன் என்று அவர்களுக்கு உறுதியளித்தேன். ஆனால் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாகவே, ஹரியானாவிலிருந்து மிகப்பெரும் எண்ணிக்கையில் பெண்கள் திரள்களாக வந்து எதிர்ப்பியக்கத்தில் இணைந்து கொண்டனர். அவர்கள் தமது முகத் திரைகளை விலக்கிவிட்டு, மிக ஆர்வத்துடன் வேளாண் சட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ள முனைப்புடன் இருந்தனர்.”
ஹரியானாவிலிருந்து வந்திருந்த பெண்கள்:
விவசாயிகளின் பேரியக்கத்தில் மிகவும் தீவிரமாகப் பங்கேற்பதற்கு முன்வந்த ஹரியானா மாநிலப் பெண்கள் எண்ணிக்கையைப் பார்த்து தாங்கள் ஆனந்த அதிர்ச்சி அடைந்ததாக மேற்கண்ட நால்வருமே, ஜாக்மதி சாங்வான், குர்ஜித் கவுர், ஜஸ்பீ ர் க வுர், ஹரீந்தர் பிந்து ஆகியோர் கூறினர். இநத்ப் பெண்களின் பங்கேற்பு இரண்டு வகைகளில் அமைந்திருந்தது. தங்களுடைய வீட்டு ஆண்மக்களைப் போராட்ட களத்துக்குப் போகுமாறு வழியனுப்பி வைத்ததுடன், குடும்பத்துக்குரிய கடமைகளையும், வேளாண்மை தொடர்பான பணிகளையும் தமது தோள்களில் சுமந்தவர்கள் ஒரு வகையினர். மற்றொரு வகையினர் தமது வீடுகளின் எதிர்ப்புகளை மீறி போராட்ட களங்களுக்கு வந்து இணைந்து கொண்டவர்கள். தங்களுடைய குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போராட்டக் களங்களுக்கு வந்திருந்தவர்கள், அவர்களுடைய ஆன்லைன் வகுப்புகளின்போது அவர்களுக்கு உதவினர்; ஏனைய சந்தர்ப்பங்களில் மேடைகளில் கூட்டங்களின்போது உதவிகள் செய்வதிலும், லங்கார் – சமூக உணவுப் பந்திகளில் தன்னார்வலர்களாகப் பணி செய்வதிலும், இயக்கத்தை நீடித்து நிலைத்திருக்கத் தேவையான மற்ற பணிகளை மேற்கொள்வதிலுமாக தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.
குர்ஜித் கவுர் சொன்னார்: “நான் மோர்ச்சாவில் வந்து இணைந்தபோது, திறந்த வானத்தின் கீழே,விவசாயப் பெருங்குடி மக்கள் டிராக்டர்களின் அடிப்பகுதிகளுக்குள் உடல்களைச் சுருட்டிப் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். கழிவறைத் தேவைகளை நாங்கள் எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்று நான் ஆச்சரியப்படுவது வழக்கம். நான் 70 வயதுக்கு மேற்பட்டவள். அங்கேயிருந்த ஏனைய பல்லாயிரக்கணக்கானோரைப் போல நானும் அங்கு இருக்க வேண்டியதுதான் என்று நான் முடிவு செய்தேன். நாங்கள் எல்லாரும் பயங்கரவாதிகள், தேசவிரோதிகள் என்றெல்லாம் எங்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டிருந்த அவதூறுப் பிரச்சாரங்களின் விளைவாக, அந்தச் சுற்று வட்டாரங்களிலிருந்த எந்த ஒரு குடும்பமும் தமது வீடுகளின் கதவுகளைப் பெண் போராட்டக்காரர்களுக்குத் திறந்து விடுவதற்கு தயாராயில்லை. எப்படியோ, ஹரியானாவிலிருந்த ஒரு குடும்பம் எங்களுக்காகத் தனது வீட்டின் கதவுகளைத் திறந்துவிட்டது. ஒரு குளியலறையைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் கடைசியில் அனுமதிக்கப்பட்டோம். எங்களுடைய தன்னார்வலர்கள் கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தந்த பிறகு ஒரு வழியாக இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டது.”
அவர்களின் பார்வையடிப்படையில் எதிர்காலம்:
ஜஸ்பீர் கவுர் சொன்னார்: “எங்களுக்கு இது நர்ஸரி பயிற்சியாக அமைந்தது. எதிர்காலத்தில் இம்மாதிரி சட்டங்களைத் திணிப்பதற்கு அரசாங்கம் மறுபடி முற்படுமானால், அரசுக்கு அதுதான் உண்மையான படிப்பினைக் கல்வியாக இருக்கும்.” வரப்போகும் உலக வர்த்தக அமைப்பின் அமைச்சுப் பிரதிநிதிகள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் அரசு மானியங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது என்பதும இடம் பெற்றிருப்பதாக அவர் சொன்னார். சட்ட மன்றத் தேர்தல்கள் முடிந்த பிறகு ஒன்றிய அரசு வேளாண் திருத்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தத் துணியுமானால் இன்னும் பிரம்மாண்டமான மக்கள் திரள் போராட்டங்கள் வெடிக்கும் என்றார் அவர்.
டெல்லிக்கு மிக அருகமைந்துள்ள தொழிற்சாலைப் பகுதிகளிலும், உழைக்கும் வர்க்கத்தினர் குடியிருப்புகளிலும் நிலவுகிற படு மோசமான சுகாதாரமற்ற சூழல் தங்களுக்கு மிகப் பெரும் துயரமாக அமைந்தது என்றார் குர்ஜித் கவுர்: “இந்த அவல நிலை மாற்றப்பட்டாக வேண்டும், 75 ஆண்டுகால விடுதலைக்குப் பின்னும் கூட இந்தியாவின் தலைநகர எல்லைகளிலேயே இத்தகைய அவல நிலைமைகள் நிலவுகின்றன என்பதை நம்புவதற்குக்கூட முடியாது… இந்தப் போராட்ட இயக்கம் ஏராளமானவற்றைத் தந்திருக்கிறது. மக்கள் இதிலிருந்து ஏராளமானவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை, இது ஒரு மாபெரும் வேறுபாட்டை உருவாக்கியிருக்கிறது.” ஜாக்மதி சாங்வான் சொன்னார்: “இந்தப் புதிய விழிப்புணர்ச்சியை, பெண்கள் தமது சுதந்திரமான முன்னெடுப்புகள் மூலம் நிலைத்து நீடித்திருக்கும் வகையில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்; அதோடு பல்வேறு வேளாண் அமைப்புகளுடன் ஒருமைப்பாட்டுடன் திட்டமிட்டு இயங்குவதன் மூலம் அதைச் செய்ய வேண்டும்.”
ஓராண்டு காலமாக நீடித்து நடைபெற்றிருக்கும் இந்த விவசாயிகள் போராட்ட இயக்கம், பலருடைய வாழ்க்கைகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் இந்தியாவின் விவசாயப் பெண்களைப் பொறுத்தவரை இந்த இயக்கத்தில் அவர்களுடைய பங்கேற்பும், வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதும் மிகப் பெரிய சாதனை. விவசாயிகளாகவும், உற்பத்தியாளர்களாகவும் சமதளத்தில் காலூன்றி நின்று அவர்கள் பங்களித்துள்ளனர். அந்த அம்சத்தைப் பொறுத்த வரை, இது வேறுபட்ட ஒரு விடுதலை. இந்த விடுதலை, ஜனநாயகப் பூர்வமான வழிமுறைகளின் மூலம் நடத்தப்பட்ட வர்க்கப் போராட்டத்தினால் சாதிக்கப்பட்ட ஒன்று. பெண்கள் அதிகார வலிமை பெறுவதைப் பற்றிய அர்த்தமற்ற, அலங்கார முழக்கங்களை வெறுமனே உச்சரித்துக் கொண்டிருப்பதன் மூலம் அடையப்பட்ட விடுதலை அல்ல இது!