கொரோனா எனும் தனிமைச் சிறை..!
இரா.மோகன்ராஜன்
(உலகம் முழுவதும் கொரோனாத் தொற்று வேகமாகப் பரவிக் கொண்டிந்த ஏப்ரல் திங்களில் நடைபெற்ற செய்திகளை கோர்வையாகத் தரும் கட்டுரை இது)
கிளிஜோஸ்யன் கிருஷ்ணமூர்த்தி
ஐம்பது ரூபாய் அபராதம் செலுத்தினான்,
“கிளியின் கூண்டு ரொம்பச் சிறுசு
இறக்கையைச் சரியா விரிக்க வராது
காற்றோட்டம் சரியாய் இல்லாததாலே
மூச்சுத் திணறி சாகக்கூடும்”
கூண்டும் போயி..
கிளியும் போயி..
பிளாட்பாரத்தில்
கிருஷ்ணமூர்த்தி
ஒட்டியவயிற்றோடு
குப்புறக்கிடக்கிறான்.
– இன்குலாப்.
அந்தப் பெண் ஒரு உப்பு வியாபாரி. தெருத் தெருவாக தான் தலையில் சுமந்திருக்கும் ஒரு கூடை உப்பை கூவிக் கூவி விற்றாக வேண்டும். “உப்பூஊஊ ஓய்ய்ய்..!” ஒரு முறைக்குப் பல முறைக் கூவினால்தான் கதவுகள் திறக்கும். திறக்கும் கதவுகள் எல்லாம் உப்பைப் பெற்றுக் கொண்டு செல்லும் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. அவரது வியாபாரத்திற்கு குரல் மிகவும் முக்கியமான ஊடகம். இந்தத் தெருவில் எழுப்பும் ஒலி அடுத்தத் தெருவில் கேட்க வேண்டும். அடுத்தத் தெருவில் இருப்பவர்கள் உப்புவாங்கத் தயாராக இருக்கிறார்களோ இல்லையோ..தான் நிற்கும் வாடிக்கையான வீட்டுக் கதவேனும் திறந்தாக வேண்டும். ஆனால் இப்போது அப்படி உரக்கச் சத்தமிடத் தடையாக முகத்தை மூடியிருந்த கொரோனாத் தடுப்பு முககவசம். அதைப்போட்டுக் கொண்டு கத்தினால் தனக்கேக்கூட கேட்பதாககத் தெரியவில்லை. கழட்டக்கூடாது என்று வீட்டில் தனது மகள் சொல்லியது நினைவுக்கு வருகிறது. வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிப் போல மவுனமாகத் தெருவை கடக்க வேண்டியிருக்கிறது.
மீனோ, பூவோ அதன் வாசனையைக் கண்டாவது மக்கள் வெளியே வருவார்கள். உப்பு க்கு எந்த வாசமிருக்கிறது. விற்பவரின் குரல்தான் வாசம். அதையும் தடுத்துவிட்டது முககவசம். ஒரு திங்கள் ஊரடங்கு. கடையடைப்பு, மனித குலம் கேள்விபட்டிராத வகையில் நடமாட்டம் தடைப்பட்டு வீட்டில் அடைபட்டிருக்கிறது. கொரோனா எனும் கொடும் கிருமி யாதொருவரையும் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்திருக்கிறது. ஒரு நாள், இரண்டு நாள் தெருவிற்கு வரவில்லை என்றால் பசியும், வறுமையுமே தாமாகவே வெளியில் பிடித்துத் தள்ளிவிடும். அப்படித்தான் காவல்துறையின் கெடுபிடிகளைத் தாண்டி அந்தப் பெண் உப்பு விற்க வந்திருக்க வேண்டும்.
அந்த முக கவசம் கிடைக்கும் வரை தனது புடவை முந்தானையை முகத்தில் முடிக்கொண்டு வந்தார் அந்தப் பெண். அதுவும் யாரோ ஒரு மாடிவீட்டுக்காரர் பரிதாபப்பட்டு உபரியாக இருந்த ஒன்றை கொடுத்திருக்கிறார். இல்லையென்றால் தெருவில் இறங்குவது என்பதே மரணத்திற்கு சமமானதாக இருந்திருக்கும். அப்படித்தான் மருத்துவர்கள் சொல்கிறார்கள். அரசு சொல்கிறது. ஆனால் வயிறு அப்படி எதுவும் சொல்வதில்லை. பசித்த வயிறைப் போல அரசும் புரிந்து கொள்ள மறுக்கிறது. அது கொடுக்கும் ஆயிரம் உரூபாய் போதுமென்றால் அந்தப் பெண் உப்பு விற்க கரிக்கும் கண்ணீருடன் தெருவில் இறங்க வேண்டியிருக்காது. ஊரடங்கு பசித்த வயிறை அடக்கிவிடுவதில்லை.
பெரிய மால்களில் அயோடின் கலந்த உப்பு வாங்கியவர்கள் கையைப் பிசைந்தபடி மரணத்தைக் கடந்து வரும் அந்த பெண்ணை எதிர்பார்த்திரு;கிறார்கள். ஒரு கூடை உப்பின் விலையை அவரது உயிர் சுமந்து வருகிறது. அவர் மட்டுமல்ல அன்றாடம் காய்ச்சிகள் எல்லோரும் அப்படித்தான்.
விருதுநகர் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் தீக்குச்சுகள் அடுக்கும் குடும்பம் ஒன்று இந்த ஊடரங்கு நாளில் படும் துயரத்தை தொலைக்காட்சியில் காட்டினார்கள். நடுவரணசு, மாநில அரசுகள் செய்யும் எந்த உதவியும் போய் சேராத வீடுகளில் ஒன்று. மாடுகளுக்கு ஒதுக்கிவைக்கும் அழுகிய காய்கறிகள், குருணை அரிசியோடு அரைவயிற்றுடன் நாட்களைக் கடத்துவதாக கண்ணீருடன் கூறுகிறாள் தாயும் மகளும். அழுகின காய்கறிகளைச் சாப்பிடவே முடியல என்று கதறும் அந்தச் சிறு பெண்ணின் கண்ணீர் கொரோனாவைப் பார்க்கிலும் கொடுமையானதாக இருக்கிறது. அரசு அந்தக் குடும்பத்தைத் தேடிப்பிடித்து உதவியதாக முதல்வர் சொல்கிறார். நல்லது. காட்சிக்கு வராதா குடும்பங்களை என்ன செய்யப்போகிறார்கள்?.
பிரதமர் ஏற்றச் சொன்ன அகல்விளக்கின் வெளிச்சம் கூட படராத குடிசைகளுக்கு இவர்களிடம் என்ன பதில் இருக்கிறது.
முதல்வரின் ஊரான எடப்பாடியில் ஒரு தறிக்கூடத் தொழிலாளி சொல்கிறார் சாக்கடையில் முளைத்திருக்கும் கீரைகளைப் பறித்துவந்து சமைத்துச் சாப்பிடுகிறோம். என்று. சங்கப் பாடல் ஒன்றில் புலவர் ஒருவரின் குரலும் இப்படித்தான் ஒளித்தது. காலம் மாறவில்லை. வறுமையும் மாறவில்லை. அதே வறுமை. அதே கீரைகள். அதே சாக்கடைகள்.
தனித்திருங்கள். விழித்திருங்கள் என்கிறது அரசு. எல்லாம் சரிதான். பசியோடு தனித்திருப்பவர்கள் விழித்திருக்கத்தான் வேண்டும் இல்லை மயங்கிச் சாகவேண்டும். கொரோனா சாவுகளை விடப் பட்டினியிலானச் சாவுகள் கூடுதலாக இருக்கக்கூடும். கொரோனா சாவுகளைப் போன்றே அவை மறைக்கப்பட்ட இலக்கங்களாகவே எஞ்சயிருக்கும்.
காவிரி டெல்டாவின் மேல் பகுதியான திருச்சிக் காவிரிக் கரைகளைத் தொட்டுச் செல்லும் பாலங்களில் திருச்சி நகரக் கூலித் தொழிலாளிகளும், கரையோர கிராம மக்களும் உணவுக்கு வழியின்றி பாலத்தில் வரிசையாக உட்கார்ந்து கிடக்கிறார்கள். அவர்களுக்கு சில தன்னார்வ அமைப்புக்களும், உதவி செய்யும் நபர்கள் சிலரும் சேர்ந்து உணவளிப்பதையும் அதை பசித்த வயிற்றின் கரங்கள் முந்திக் கொண்டு வாங்குவதை அவர்களது தன்மானத்தாலும் தடுக்க வியலாதக் காட்சியைக் காணும் போது மனம் பதை பதைக்கிறது. பாரதியின் விதியே விதியே தமிழ்ச் சாதியை என்ன செய்ய நினைத்தாய் என்பதை கொரோனா..கொரோனா தமிழ்ச் சாதியையும் என்ன செய்ய நினைத்தாய் என்று வெதும்புகிறது மனது.
கொரோனா காலத்தின் ஊரடங்கு, உலகை, ஊரை, தெருவை, வீட்டை என சகலத்தையும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஒரு சுனாமியைப் போல மனிதப் பேரலைகளில் சுழன்றுவருவதைப் பார்த்தால் ஒரு பக்கம் பதட்டமாக இருந்தாலும் மறுபக்கம் அதன் உபவிளைவுகள் தொற்றைவிட கடுமையாக இருக்கப் போகிறது என்பது மெய்யான மெய்யாகும்.
கடந்தக் காலங்களில் உலகை பல தொற்று நோய்கள் அழித்து எழுதியிருக்கின்றன. தமிழகமும் அதற்கு விலக்கல்ல. மனித ஆற்றலில் இயங்கும் இந்தியா போன்ற துணைக் கண்டங்கள் இன்றைக்கு முற்றிலும் முடங்கியிருப்பது அதன் சமூகப் பொருளாதார, அரசியல் அரங்கில் மிகப்பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். ஓரிரவில் மட்டும் உணவில்லாமல் உறங்கச் செல்லும் 3 கோடி இந்தியக் குழந்தைகளின் இரவும், பசியும் நீளப்போகிறது. அதன் சகிக்க முடியாத இரவுகளை இருளில் கரைத்துக் கொண்டு இந்தியா வாழப்பழகப்போகிறதா என்ற கேள்வியைத் தவிக்க முடியவில்லை.
ஆறு இலட்சம் அமெரிக்கர்களைத் தொற்றி ஐம்பதினாயிரம் பேரைக் கொன்று, நியூயார்க் நகரத்தின் கட்டங்களை கல்லறைகளாக மாற்றியிருக்கும் கொரோனா வின் தீராப்பசிக்கு அமெரிக்காவினாலேயே ஈடுகொடுக்க முடியவில்லை. அமெரிக்க மக்கள் தமது நகரங்களின் தெருச் சந்திகளில் பல பத்தாயிரக்கணக்கில் கூடி உணவுக்காக மிக நீண்ட வரிசைகளில் காத்திருக்கிறார்கள். இந்த வரிசை நான்கு கிலோமீட்டர் வரையிலும் நீண்டு செல்வதாக தகவல்கள் சொல்கின்றன. உலகின் வல்லாதிக்கப் பணக்கார நாட்டின் மிக பரிதாபகரமான நிலை இன்றைக்கு இதுதான்.
1930 களில் உலகப் பொருளாதார மந்த நிலை அமெரிக்கர்களை ஒரு முறை இப்படி வீதியில் உணவு வரிசையில் நிறுத்தி வைத்திருதற்கான காலத்திற்குப் பிறகு மீண்டும் வரலாறு திரும்பியிருக்கிறது. வரலாற்றிலிருந்து கற்காத போது அதே வரலாறு உருவாகும் என்பது வரலாற்றின் நீதியாகும்.
இதுமட்டுமல்ல தொற்று பாதித்த மக்கள் தனியார் வசம்மட்டுமே இருக்கும் மருத்துவத்தை, மருத்துவமனைகளை நோக்கி வரிசையில் காத்திருக்கிறார்கள். அதுவும் பணக்கார்கள் மட்டுமே அதற்கான செலவுத் தொகையைச் செலுத்தக் கூடியவர்களாக மருத்துவம் செலவுமிக்கதாக இருக்கிறது. கொரோனா சிகிச்சையை அமெரிக்காவின் வசிக்க வீடுகளற்ற நடைபாதைவாசிகள், நடுத்தர மக்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இந்தியாவில் இன்னும் முழுமையாக மருத்துவத்துறை தனியார் வசம் போய்விடவில்லை என்றாலும் கூட. அரசு மருத்துவமனைகள் இன்றைக்கும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதே இந்த கொரோனா காலத்தின் சற்றே ஆறுதல் அளிக்கும் ஒன்றாகும்.
கடந்த ஒன்றரைத் திங்கள்களாக ஊரடங்கில் இருக்கும் அமெரிக்கா, அதன் பொருளாதார நலன்களை விட்டுக்கொடுக்க விரும்பாததால், அதன் பெரு முதலாளிகளை விட்டுக்கொடுக்க விரும்பாததால் ஏற்பட்டத் துயரமே அமெரிக்காவின் மக்களை கொரோனாவிற்கு பலி கொடுக்க நேர்ந்துள்ளது. சீனாவை குற்றம் சாட்டிக் கொண்டே டிரம்ப் தமது நாட்டின் வணிக எல்லைகளையும், வணிக நிறுவனங்களையும் கதவடைப்பதைத் தவிர்த்து வந்தார். அதன் விளைவுகளே தற்போது 2001 செப்தம்பரில் நிகழ்ந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலில் பலியான அமெரிக்கர்களைவிட பல ஆயிரக்கணக்கில் இன்றைக்கு பலியாகிக் கொண்டுள்ளனர்.
மேலும் மாகாண ஆளுநர்களை செயற்படவிடாமல் தாமே முடிவெடுப்பேன் என்று ஆளுநர்களுடன் அதிகாரப்போட்டியிலும் இறங்கினார் ட்ரம்ப் எனும் வணிக முதலாளி. எப்போது கதவடைப்பது என்ற அதிகாரம் தனக்கு மட்டுமே உள்ளது என்றார் அவர். ஆளுநர்களோ கள நிலைமை உணர்ந்து செயற்படுவதற்கு அவர் தடை ஏற்படுத்தினார். சூப்பர் மால்களை மூடுவதற்கும் பெரிய நிறுவனங்களின் எந்திரங்களை நிறுத்தவதற்கும் ட்ரம்ப் தயங்கினார். மாகாண ஆளுநர்கள் அதிபராக அமர்ந்திருக்கும் வணிகரை எதிர்கொள்ள திணறினர். ட்ரம்ப் ஒரு மன்னரைப்போல தன்னை நினைத்துக் கொள்கிறார். ஒரு மன்னரைப் போல தமது அதிகாரத்தை நிலை நிறுத்தப்பார்க்கிறார். அமெரிக்கா மன்னர்களின் நாடு அல்ல என்று சூடாகப் பதிலளிக்கிறார்கள்.
இந்த அதிகாரப் போட்டியும், இலாப வெறியும் அமெரிக்க மக்களைச் சீற்றம் கொள்ள வைத்துள்ளது. இதற்கு மேலும் ஊரடங்கை நீட்டித்தால் போராட்டம் வெடிக்கும் என்று அவர்கள் பேசத் தொடங்கியுள்ளார்கள். கலிபோர்னியா போன்ற இடங்களில் சாலைகளில் திரண்ட மக்கள் ஊரடங்கிற்கு எதிராக முழக்கமிட்டுவருகிறார்கள்.
கடந்த ஆண்டு படைத்துறை நிதி ஒதுக்கீட்டில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் சீனாவும், மூன்றாம் இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன. இந்தச் செய்தியுடன் இந்தக் கொரோனா காலத்தை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வி எழுகிறது. பொருளாதார வல்லரசுகளான அமெரிக்கா, சீனா அந்நாடுகளின் பொருளாதார வீழ்சியை எதிர் கொள்வதற்கும் இந்தியா போன்ற வளர் நாடுகள் எதிர்கொள்வதற்கும் நிரம்ப வேறுபாடுகள் உண்டு. இந்த நிலையில் படைத்துறைக்கு சீனா, அமெரிக்கா நிதி ஒதுக்குவதற்கும் இந்தியா நிதி ஒதுக்குவதற்குமான வேறுபாடுகள் மலைக்கும், மடுவுக்குமானதாகும். இன்னும் சொல்லப்போனால் படைத்துறைக்கு நிதி ஒதுக்குவதில் மூன்றாம் இடத்தில் இருப்பதற்கான எந்தப் பொருளாதார வளர்ச்சியும், தகுதியும் இந்தியாவிற்கு கிடையாது. அப்படி இருக்கும்போது கொரோனா ஊரடங்கினால் ஏற்படப்போகும் வீழ்சி இந்த மூன்றாம் தகுதி நிலையிலிருந்தே இந்தியாவை படுபாதாளத்திற்கு கொண்டு போய்விடக்கூடும்.
ஏற்கனவே பொருளாதரா வீழ்ச்சியில் இருக்கும் இந்தியா கொரோனா தாக்குதலில் எந்த ஆயதமுமின்றி சரணடையப் போகிறது. அது சாதாரணச் சரணடைதல் அல்ல. பலகோடி மக்களை எதுவித யுத்தமுமின்றி பலி கொடுப்பதால் ஏற்படப்போகும் சரணாகதியாகும். அது கொரோனா தொற்றால் மட்டும் அல்ல பசியால் நேர்வதாகவே இருக்கும்.
நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் அதிகாரவர்க்கத்தினர் இவர்கள் இந்த ஊரடங்கு நாட்களை கைகளைக் கழுவி ஊற்றுவதில் பொழுது போக்கலாம் ஆனால் அன்றாடத் தேவைகளுக்கே வெளியில் வந்தால்தான் எதுவும் செய்யமுடியும் என்ற நிலையில் இருக்கும் விளிம்பு நிலை மக்களுக்கு இந்த அரசு எதுவும் செய்யவில்லை. வெறும் ஆயிரம் உரூபாயும், கிலோ அரிசியும் கொடுக்கிறது. அதுவும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும். மேலும் சாதாரணமாகவே சாப்பிடக்கூட தகுதியற்ற அந்த அரிசியை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. நான்கு முறை அலசி வெயிலில் காயவைத்து பூச்சிப், புழக்கனை நீக்கினாலும் அதன் வாடையிலிருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதல்ல. எனினும் மக்கள் சமூக விலக்கத்திலும் அல்லது அதைக் கடைபிடிக்காமலும் கூட நின்று வாங்கிச் செல்லவே செய்கிறார்கள்.
அரசு என்ன சொல்கிறது. ஊடகங்கள் என்ன சொல்கின்றனவென்றால், பாருங்கள் ஊரடங்கைத் தளர்த்தியதும் மக்கள் இறைச்சி வாங்கவும், காய்கறி வாங்கவும் சமூக இடைவெளியைக் கூடப் பின்பற்றாமல் அடித்துப்பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள் என்கிறது. அப்படியென்றால் என்ன? மக்களிடம் பணப்புழக்கம் இருக்கிறது. தேவைக்கு மீறிய பொருட்களை வாங்கிக் குவிக்கும் அளவிற்கு சாதாரணமக்களிடம் பணம் இருக்கிறது. விளிம்பு நிலை மக்களுக்கு இறைச்சி என்பது ஒரு ஆடம்பரப்பொருள். எளிதில் வாங்க முடியாத பொருள். ஆனால் இப்போது எல்லாதரப்பு மக்களும் கறிக் கடைகளில் போய் நிற்கிறார்களே அப்படியென்றால் மக்களிடம் பணப்புழக்கம் இருக்கிறதாகத்தானே பொருள். அரசும், ஊடகங்களும் அதைத்தான் சொல்ல வருகின்றன. அதைக் காட்சிப் படுத்துவதன் வழி ஊடகங்களைப் பார்ப்பவர்களையும் அதைத்தான் எண்ணவைக்க முயற்சிக்கின்றன. குறிப்பிட்ட நேரத்திற்குள் பொருளை வாங்கியாக வேண்டியிருப்பதால் ஒருவித பரபரப்பும், அவசரமும், கூட்டமும் தவிர்க்க இயலாத ஒன்று. ஆனால் சிறிய அளவில் மக்கள் கூடுவதைக் கூட கொரோனா தொற்றை அலட்சியப்படுத்தி மக்கள் சாப்பாட்டிற்கு அதாவது கறி வாங்கி சாப்பிடுவதற்கு அலைவதைப் போல ஒரு தோற்றத்தைத் தர முயற்சிக்கிறார்கள்.
செத்தால் நல்ல சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டுச் சாகலாம் என்று அவர்கள் விரக்தி நிலைக்குச் சென்றுவிட்டதைப் போலச் சித்தரிக்கும் அரசியல் கொரோனாவைவிட ஆபாசமானது. ஆபத்தானது.
ஏற்கனவே வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வெளியே வர மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தில் ஒருவர் முகமூடி அணிந்து ஒரு முறை மட்டுமே வெளியே வந்து அரசு குறிப்பிடும் விதிகளுக்கும், நிபந்தனைகளுக்கும் ஏற்ப சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். மக்கள் நியாயவிலைக் கடைக்குப் போவார்களா, மளிகைப் பொருட்கள் வாங்கப் போவார்களா, ஏடிஎம்களில் நிற்பார்களா, அல்லது பால், மருந்து போன்ற அவசியமான பொருட்களுக்காக வரிசையில் காத்திருப்பார்களா எதற்கு முதன்மை அளிப்பவர்களாக இருப்பார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் இவர்கள் இந்த அவசியமானப் பொருட்களையெல்லாம் விட்டுவிட்டு கறிக்கடையில் இறைச்சிக் கடையில் அடித்துப் பிடித்துக் கொண்டு நிற்பதாக பரப்பப்படும் செய்தியின் அரசியல் மோசமானதாகும்.
பால்கனியில் நின்று கொண்டு கைத்தட்டுபவர்களும், அகல் விளக்கேற்றுபவர்களும் மருத்துவர்களுக்கு நன்றி சொல்கிறார்களோ தெரியாது விளிம்புநிலை மக்கள் மீது தமது வெறுப்பை உமிழாமல் இருந்தால் போதுமானது. எது ஆபாசம் என்று இந்த கொரோனா காலத்தனிமை அவர்களுக்கு சிந்திப்பதற்கான வாய்ப்பை வழங்கட்டும்..
கொரோனா பரவிக்கொண்டிருந்த மார்ச்சில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அழைத்து வந்து படைக்களக் கருவிகள் தொடர்பாக ஒப்பந்தமிட்டது ஒரு பக்கமிருக்க ஒரு இலட்சம் குசராத்திகளை ஒரே இடத்தில் திரட்டி இந்திய அதிகாரவர்க்கமும், அதன் பிரதமரும் செய்தது ஆபசமில்லையா.? எதுவித முன்னறிவிப்புமின்றி நான்கு மணிநேர அவகாசத்திற்குள் ஊரடங்கும், பொது போக்குவரத்து, சந்தை போன்றவற்றை உடனடியாக முடக்கியதும், அதைத் தொடர்ந்து தில்லியில் இலட்சக்கணக்காக் கூலித் தொழிலாளர்களை தொடர்புடைய நிறுவனங்கள் வெளியேத் தள்ளி கதவைச் சாத்தியது ஆபாசமென்றால், அந்த தொழிலாளர்கள் தமது குடும்பங்களுடன் நான்கு மணிநேரத்திற்குள்ளாக ஏதிலிகளாகக்கப்பட்டதுடன் மூட்டை முடிச்சுகளுடன் அண்டை மாநிலங்களிலிருக்கும் தமது வீடுகளை நோக்கி அல்லது உறவுகளை நோக்கி கொளுத்தும் வெயிலில், செருப்புக் கூட இல்லாமல் வெற்றுக் கால்களுடன் குறைந்தளவாக 500 கி.மீ யை நடந்தே கடந்ததும், பலர் செத்து விழுந்ததும் ஆபாசம் இல்லையா. அதைவிட, அவ்வாறு இலட்சக் கணக்கில் சமூக இடைவெளியைக் கூட பின்பற்ற இயலாமல், எதுவித முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுமின்றி சென்றவர்களை ஆடு, மாடுகளைப் போல நிறுத்தி வைத்து அவர்கள் மீது கிருமிநாசினியைத் தெளித்தது ஆபாசத்திற்கெல்லாம் ஆபாசம் மட்டுமல்ல மனித இயல்பற்ற அதிகாரவர்க்கம் பற்றி சொல்ல என்ன இருக்கிறது.?
நேற்றுவரை தில்லி இயங்கத் தேவைப்பட்டவர்கள் இன்றைக்கு தேவையற்ற உதிரிபாகங்களாகிவிட்டார்கள். தீண்டத்தகாதவர்கள் ஆகிவிட்டார்கள். கொரோனா அடையாளம் காட்டியிருப்பது பலகீனமான உடல் கொண்டவர்களை மட்டுமல்ல ஆபாசமான அதிகாரமனம் படைத்தவர்களையும்தான்.
கொரோனா தடுப்பின் முன்படைவீரர்களாக நிறுத்தப்பட்டிருக்கும் மருத்துவர்கள் தொற்று ஏற்பட்டு இறக்கும் போது அவர்களை அடக்கம் செய்யவிடாமல் தடுப்பதில் அரசின் அறிவுத்துறைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? பொதுமக்களுக்கு விளக்கமான கொரோனா விழிப்புணர்வு என்பது கைகழுவுவதும், முகமூடி அணிவது மட்டும்தானா? பேரிடர் காலத்தில் தொற்று உடல்களையும், மரணங்களையும் எப்படிக் கையாள வேண்டும் என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டாமா. நிலத்திற்கு கீழாக தொற்றில் இறந்தோரைப் புதைப்பதும், எரியூட்டுவதும் காலம் காலமான செயல்தான். இந்த இரண்டின் வழியாகவும் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அறவே கிடையாதென்பதை அரசு தாமதமாக மக்களிடம் கொண்டு சென்றது ஆபாசமாகும்.
தொற்றில் மருத்துவர்கள் பாதிக்கப்படக் காரணம் மிக வெளிப்படையானதாகும். தகுந்த முக கவசங்கள், உடைகள், கருவிகள் தராமல் தரமற்றவற்றை அவர்களுக்கு அளித்துவிட்டு மருத்துவர்களின் கவனக்குறைவென்று சொல்வது சகிக்கவியலாததாகும்.
சுடுகாட்டிலிருந்து, சவப்பெட்டிவரை ஊழல் செய்யும் அதிகாரவர்க்கம், உயிர் ஊசலாடும் காலத்திலும் ஊழல் செய்யவும், கல்லறைப்பெட்டியை, பணப்பெட்டியாக மாற்றுவதும் வியப்பதற்குரியதல்ல என்றாலும், அது ஆபாசத்தின் உச்சமல்லவா.
தொற்று கண்டறிதலில் துல்லியமாகவும், விரைவாகவும் முடிவுகளைத் தரும் என்று சொல்லப்படுகிற ரேபிட் கிட் கருவிகளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் ஊழல் நடந்திருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதுடன் அது குறித்து கண்டித்துக் கொண்டுமுள்ளது. கிட்டத்தட்ட 18ஆயிரம் கோடி உரூபாய்க்கு அந்தக் கருவிகள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரேபிட் கிட் கருவியை உற்பத்தி செய்யும் நிறுவனம் 250 உரூபாய்கு விற்பனை செய்ய அதனை வாங்கி விற்கும் சென்னையைச் சேர்ந்தாகச் சொல்லப்படும் நிறுவனங்கள் 335 உரூபாய் கூடுதலாக நடுவணரசின் சுகாதாரத் துறைக்கு விற்பனை செய்வதாகவும் சுகாதாரத்துறை 600 என்ற விலையில் மாநிலங்களுக்குத் தருகிறது. சென்னை நிறுவனம் என்றால் அதைத் தமிழக அரசே கொள்முதல் செய்யும் போது கொஞ்சம் குறைந்த விலையில் வாங்கியிருக்க முடியும், மேலும் நடுவணரசின் சுகாதாரத்துறையே சீன நிறுவனத்துடன் பேசி இந்தக் கருவிகளை வாங்கியிருக்க முடியும் இதில் இடைத்தரகர்களை நுழைத்து அவர்களை கொள்ளையடிக்க அனுமதிப்பது என்பது கொரோனா யுகத்தின் மிகப்பெரிய மக்கள் துரோகமன்றி வேறல்ல.
ரேபிட்கிட் கருவியானது பல இடங்களில் தவறான முடிவுகளைக் காட்டுவதாகவும், எனவே அதனைத் தற்போது பயன்படுத்த வேண்டாம் என்றும் நடுவணரசின் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது. கருவியையும் வாங்கி அதில் ஊழலும் செய்துவிட்டு அந்தக் கருவி தற்போது வேலை செய்யவில்லை என்று சொன்னால், அச்சத்திலும், அய்யத்திலுமிருக்கும் மக்களை மேலும் இந்தச் செய்திகள் குழப்பத்தில் ஆழ்த்துவதுடன் அவர்களது மனநிலையில் மிகப்பெரிய கவலையையும், சொல்லொணாத் துயரத்தையும் தருவதாக உள்ளது.
இதற்கிடையே கொரோனா காலம் குறித்துக் கருத்து தெரிவிக்கும் முதல்வர், மக்கள் பொறுப்பில்லாமலும், பயமில்லாமலும் நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டுகிறார். அண்டை மாநிலமான கேரளா தமது மக்களுக்கு வீடுகளுக்கே சென்று மளிகைப் பொருட்களை வழங்குகிறது. இங்கு போய் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அரசு சொல்கிறது. கொரோனா தொற்றுவதற்குள் வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போய்விடும் அவசரம் மக்களின் உளவியலாக மாறியிருக்கும் நாளில் அவர்களால் அப்படித்தான் இருக்க முடியும். அதற்கானத் தீர்வு அரசிடம் தான் இருக்கிறது. வீட்டிற்கு வரும் பொருட்களை மக்கள் வேண்டாம் என்று சொல்லவோ, நாங்கள் பொழுது போக்கிற்காக கடைத்தெருவிற்கு வந்தேத்தீருவோம் என்று யாதொருவரும் சொல்வது கிடையாது. இதை அரசு கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும். மக்கள் நல அரசுகள் என்று சொல்லிக் கொள்ளும் அரசுகள், தமது குறைகளைச் சரி செய்து கொண்டு பிறகு மக்களை சொல்வதுதான் சரியானதாக இருக்க முடியும்.
ஒரு பக்கம் நகரக் கூலிகள், மறுபக்கம் கிராமத்திலிருக்கும் ஏழை விவசாயக் கூலிகள் இவர்களது அன்றாடப் பிழைப்பு முற்றிலும் சிதைந்து போய்விட்டது. காய் கனிகளை கொள்முதல் செய்யவோ அல்லது உழவர்களே நேடியாக கொண்டுவந்து விற்கவோ இன்றைக்கு வழயில்லை. அம்மா உணவங்கள் செயல்படுகின்றன. அது வரவேற்க தகுந்தாக இருந்தாலும் ஊரகப்பகுதிகளுக்கு அவற்றை விரிவுபடுத்தினால் மட்டுமே அதன் முழு இலக்கை அடைய முடியும். பள்ளிக்கூடங்களின் சத்தணவுக்கூடங்களைத் திறந்து அவற்றை அம்மா உணவுகங்களாக தற்காலிகமாக மாற்ற அரசு கட்டளையிடலாம். நமது சமூகம் ஏற்றத்தாழ்வான சாதியச் சமூகம் இங்கு எல்லோரும் சமநிலையில் இல்லை. இருக்கவும் முடியாது எனவே ஊரடங்கு காலம் என்பது எல்லோருக்கும் பொதுவான வாழ்வைத் தரவில்லை விளிம்புநிலையினருக்கு இது தனிமைச் சிறை என்பதை ஆளும்வர்க்கம் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
நீங்கள்தாம் கொரோனா எதிர்ப்பின் படைவீரர்கள் என்று பிரதமர் சொல்கிறார். அந்தப் படைவீரர்கள் உண்ண உணவின்றி,எதிர்ப்புச் சக்தியின்றி களத்திலேயே விழ வேண்டும் என்பதற்காக அப்படிச் சொல்கிறாரோ தெரியவில்லை. இயல்பாகவே நமது உணவு முறை மற்றும் உடல் நிலை காரணமாக எந்தத் தொற்றும் தொற்றிவிட்டு ஓடிவிடும் என்று சில மேல்சாதி, மேல்வர்க்கத்தினர் ஊடகக் குரல் எழுப்புகின்றனர். இன்றைக்கு கிராமப்புறங்களில் மக்கள் போதியச் சத்தில்லாமல் இரத்தச்சோகையிலும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையிலும் இருப்பதை அவர்கள் பார்க்க மறுக்கிறார்கள். கிராமங்களில் கொரோனாத் தொற்றுப் பரவுமானால் அதன் விளைவுகள் மிகக்கடுமையானதாக இருக்கக்கூடும்.
அங்கன்வாடி, சத்துணவுத்திட்டம் போன்றவை மட்டுமே கொஞ்சம் அவர்களைத் தூக்கி நிறுத்துவதாக உள்ளது. அதுவே போதுமானதல்ல. கொரோனா காலத்தில் மக்களின் ஊட்டசத்தை அதிகரிப்பதும், அவர்களுக்கு உடல் வழியிலான நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதும் கொரோனா ஒழிப்பின் பகுதிகளாகும் என்பதை அரசு தரப்பினர் உணர்ந்து அதற்கேற்றார் போன்ற வழிமுறைகளை வகுத்தல் நலம்.
கோயில்களுக்குச் செய்வதில் பகுதியேனும் மருத்துவமனைக்கு செய்யுங்கள், அதுவும் கோவில்தான் என்று மருத்துவர்கள் கடவுளாக கருதப்படும் நாளில் ஒரு பொறுப்புள்ள குடிமகள் பேசினால், அதன் தீவிரத்தை மறுத்து, புறம் பேசுவது கொரோனாவிற்கு கோமியத்தையும், சாணக்குளியலையும் செய்வதற்கு ஒப்பானதாகும். வுழிபாட்டுத்தலங்கள் எல்லாம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பூசாரிகள் ஓடி ஒளிந்து கொண்டுள்ள நேரத்தில் மக்கள் பயனுரச் செய்தல் மட்டுமே தற்போதையத் தேவையாகும்.
கொரோனா கேந்திரம் என்றும், தொற்றுப் பயங்கரவாதிகள் என்று திட்டமிட்டுப்பரப்பட்ட நோயாளிகள்தாம் எந்த மதம் என்று பாராது இன்றைக்கு தமது குருதி பிளாஸ்மாவை வழங்கிக் கொண்டுள்ளனர். மனித குலத்திற்கெதிரானப் போரில் மனிதர்கள் மட்டும்தான் தற்போதையத் தேவை.
விளிம்பு நிலை மக்களை வீட்டினுள் அடைத்து வைத்துவிட்டு திடீர் திடீரென ஊரடங்கை அறிவிப்பது, தளர்த்துவது, பிறகு விளிம்புநிலை மக்கள்தாம் கட்டுப்பாடில்லாமல் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டுவது என்று கொரோனா பாதிப்பிலிருந்து திசைத் திருப்பும் வேலையை மிகக் கச்சிதமாகச் செய்து கொண்டுள்ளது அதிகாரவர்க்கம். ஒரு பக்கம் பணக்காரர்களால் பரவுவதாக முதலமைச்சர் சொல்லிக் கொண்டே ஏதுமில்லாத ஏழைகளை வீட்டுக்குள் முடக்கி, அவர்கள் வாழ்வாதாரத்தைப் பறிப்பதைப் பற்றி பேச வேண்டும்.
பள்ளிகளில், கல்லூரிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களால் நிர்வகிக்கப்படும் ஆசிரியர்களுக்கான ஏப்ரல் மாத ஊதியத்தை வழங்க மறுத்துக் கொண்டுள்ளன அரசு, மற்றும் தனியார் நிர்வாகங்கள். அது போல மளிகை மற்றும் ஸ்ரேசனரிக் கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் வீட்டில் முடங்கியுள்ளதால் அவர்களுக்கான அன்றான செலவுத் தொகை, மாத சம்பளம் அவர்களது முதலாளிகளால் நிறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு நிறுத்தக் கூடாது என்று சொல்லும் அதிகாரவர்க்கம் அந்த தொழிலாளிகளுக்கு என்ன மாற்று வைத்திருக்கிறது என்பதையாவது சொல்லியாக வேண்டும்.
அது போல கூலித் தொழிலை நம்பி கந்துவட்டிக்கு வாங்கிய குடும்பங்களின் கதை கொரோனாவுக்குள் புதைத்துவிட்டன. ஒரு கி.மீ க்குள் மட்டுமே நடமாட்டம் இருக்க வேண்டும் என்று அரசு சொன்னாலும் கந்துவட்டிக்காரர்களின் அல்லது அவர்களது பினாமிகளின் வாகனங்கள் கடன்வாங்கியவர் வீட்டிற்கு வரத்தான் செய்கின்றன. கொரோனா கதைகள், வேலை முடக்கம் பற்றியெல்லாம் கந்துவட்டிக்காரர்களிடம் இரக்கத்தை தந்துவிடுவதில்லை. கொரோனா காலத்தில் அவர்களது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அதிகாரவர்க்கமும் முயற்சிப்பதில்லை என்பதை புரிந்துகொள்ள முடியும். கந்துவட்டி என்ற ஒன்றே கிடையாது என்று சொல்பவர்கள் கொரோனா பற்றிய மெய்களைச் சொன்னாலும் கந்துவட்டிக் காரர்கள் பற்றி சொல்லிவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. வீட்டு வாடகையைக் கூட வாங்கக்கூடாது என்று வீட்டு உரிமையாளரிடம் சொல்வதுடன் அரசின் கடமை முடிந்ததுவிடுகிறது போலும்.
ஒரு பக்கம் கோடிகளில் உரூபாய்களை கொரோனா நிதிக்கு ஒதுக்குவதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் பெரு முதலாளிகளில் 50 பேரின், உரூபா 68,000 கோடிகளைக் கடன்களைத் தள்ளுபடி செய்து நடுவணரசின் ரிசர்வ்வங்கி அறிவித்துள்ளது. மறுபக்கம் சிறுகுறு நிறுவனங்கள் மூடப்பட்டு 11கோடி பேர் தெருவில் அல்ல வீட்டில் முடக்கப்பட்டுள்ளனர். தள்ளுபடி செய்யப்பட்டக் கடன் தொகையைப் பார்த்தால் அதைக் கொண்டு ஒவ்வொரு இந்தியனுக்கும் தலா 5000 கொடுத்து தற்காலிகமாக அவனது பசியைப் போக்க முடியும். விளிம்புநிலை, உழைக்கும் மக்களின் பொறுமையும், சகிப்புத் தன்மையாலுமே இன்றைக்குக் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது குறித்துப் பெருமைப்படும் அதிகார வர்க்கம் உணர வேண்டும்.
வீட்டுக்குள் முடக்கப்பட்டிருக்கும் விளிம்பு நிலை மற்றும் உழைக்கும் மக்கள், வீட்டில் முடங்கியுள்ள நாளில் தமது வேலைகளை ஆண்,பெண் என்று பிரித்துப்பார்க்காமல் செய்துகொண்டுள்ள அதே நேரத்தில் குடும்ப வன்முறை பெருகியுள்ளதாக ஐ.நா உள்ளிட்ட அமைப்புகளும், நாடுகளும் எச்சரித்துக் கொண்டுள்ளன. நடுத்தர மற்றம் உயர் அதிகார வர்க்கத்தினர் வீட்டினுள் முடங்கும் போது வேலைப் பிரிவினை மட்டுமல்லாது ஆண், பெண் ஏற்றதாழ்வு முன்னெப்போதையும் விட ஆபாசமாக வெளிப்பட்டுக் கொண்டுள்ளது.
முகமூடியுடன் வாழப் பழகுங்கள் என்று பிரதமர் சொல்லிவிட்டார். நமக்கு முகமூடி அணிவது ஒன்றும் புதிதல்ல. பலப்பல முகமூடிகள் நமக்குண்டு. ஆனால் வெளிப்படையான முகமூடியை இனி நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள், வாழ்வின் பகுதியாக்கிக் கொள்ளுங்கள், தொற்றைத் தவிர்க்கவியலாது என்பதே அதிலுள்ள செய்தி. அவர் குறிப்பிடாத செய்தி ஒன்றும் அதில் இருக்கவே செய்கிறது. முகமூடியுடன் மட்டுமல்ல பசியுடனும் வாழப் பழகுங்கள் என்பதே அது. ஆக கொரோனா என்பது விளிம்பு நிலை மக்களுக்கான நிரந்தரத் தனிமைச் சிறையாகவே இருக்கப் போகிறது.