இரும்புத் தோழமை அலெக்சாண்டிரா கொலண்டையின் அரசியல் பயணம்
அலெக்சாண்டிரா கொலண்டை சோசலிச புரட்சிகரப் பெண்போராளி. 1872 இல் ஒரு ரஷ்ய ஜெனரலுக்கு மகளாகப் பிறந்த கொலண்டையின் தாய் பின்லாந்தைச் சேர்ந்தவர். கொலண்டை தன் பால்யகாலத்தில் வசதியாக வாழ்ந்தார் என்பதைவிட விரும்பியதை அடையக்கூடிய வசதிகளுடன் இருந்தார். பெற்றோர்கள் அதிக பிற்போக்குத்தனம் இல்லை என்றாலும் மரபில் அதிகம் கவனம் செலுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள். விரும்பத்தகாத போக்கினால் மகளின் வாழ்க்கை மாறிவிடுமோ என்கிற அச்சத்தால் வீட்டிலேயே கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது. அவருக்கு ஏற்பாடு செய்த ஆசிரியர்களில் ஒருவர் மேரி ஸ்டிரகோவா. தடை செய்யப்பட்ட புரட்சிகர இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர். குடும்ப நண்பர் விக்டர் ஆஸ்ட்ரோகார்சி என்பவரும் கொலண்டைக்கு மற்றுமொரு ஆசிரியர். கொலோண்டைக்கு இலக்கியத்திறமை இருக்கிறது. ஒரு எழுத்தாளராக வருவார் என்ற நம்பிக்கை ஆஸ்ட்டோகார்சிக்கு இருந்தது.
கொலண்டையின் சிறுவயதில் பக்கத்து வீட்டில் வசிக்கக்கூடிய தொழிலாளிகளின் குழந்தைகள்தான் அவரது விளையாட்டுத் தோழிகளாக இருந்திருக்கின்றனர். எல்லோரும் மனிதர்கள்தானே தனக்கு கிடைத்த அடிப்படைத் தேவைகள் அவர்களுக்கு ஏன் கிடைக்கவில்லை? என்கிற அதிர்ச்சி அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்த வயதில் இருந்தே வர்க்க வேறுபாடு குறித்த சிந்தனையால் ஒட்டுமொத்த சமூக அமைப்பின் மேல் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. தன்னைச்சுற்றி நடக்கக்கூடிய அனைத்தையும் விமர்சிக்க தொடங்கியிருக்கிறார். தன் சுயசரிதை புத்தகத்தில் இப்படியாக எழுதுகிறார்.
“ ஒரு சிறுமி இரண்டு பிக் டெயில்கள், நீல நிறக் கண்கள், ஐந்து வயதுப் பெண். ஆனால், அவளுடைய முகத்தை உற்றுநோக்கினால் விடாமுயற்சியையும் விருப்பத்தையும் நீங்கள் கவனிக்கிறீர்கள். அந்தப் பெண்ணின் பெயர் ஷூரா டோமோன்டோவிச். இது நான்தான்”. என்கிறார்.
கொலண்டை நுழைவுத் தேர்வு எழுதி தன் 16 வயதில் பல்கலைக்கழகத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார். முறையான பள்ளிப்படிப்பு இல்லை. முற்றிலும் புதியதான சூழல், மற்றவர்களுடன் எளிதாகப் பழகமுடியாத நிலை. தன் வேலைகளைத் தானே செய்து கொள்ளும் திறன் இன்றித் தவித்திருக்கிறார். அதே காலகட்டத்தில்தான் தன்னைச் சுற்றி நடக்ககூடிய அரசியல் சூழல்களை புரிந்துகொள்ளக்கூடிய இளம் பெண்ணாகக் கொலண்டாய் மாறுகிறார். அவருடைய கல்லூரிக் காலங்கள் பெரும் திறப்பை அவருக்குள் ஏற்படுத்துகிறது.
பழமையான ரஷ்யச் சூழல் சற்று மாறிக்கொண்டிருந்த நேரம் 1893 – 96 களில் பிளக்னேவ் பெரும் மார்க்சியராக அறியப்பட்டிருந்தார். இலக்கிய மற்றும் அரசியல் வட்டாரங்களில் லெனின் அறிமுகமாகிக்கொண்டிருந்தார். மார்க்சியம் வளர ஆரம்பித்த காலகட்டம். கொலண்டாய் எதார்த்தத்திலிருந்து பொருள்முதல்வாத அணுகுமுறைக்கு மாறுகிறார்.
அதே நேரம், குடும்பத்தில் நிலவி வந்த மரபியல் அணுகுமுறைக்கு எதிராகவும் கலகம் செய்தார். பணத்திற்காக செய்து வைக்கப்படும் திருமணங்களை வெறுத்தார். நான் நேசிக்கும் மனிதரையே திருமணம் செய்து கொள்வேன் என்கிற முடிவு எடுக்கிறார்.1893 இல் தனது 21 -ஆம் வயதில் மாமா மகனான விளாடிமிரை திருமணம் புரிந்து கொள்கிறார். விளாடிமிர் பொறியாளர் என்றாலும், வசதியற்றவர். திருமணம் செய்யும் அளவிற்கு பணமில்லாதவராக இருந்தார். பெற்றோர்களின் விருப்பத்தை எதிர்த்து காதல்தான் அவசியம் என புரிய வைப்பதற்காக கொலண்டை விளாடிமிரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
1895 ஆம் ஆண்டு 12000 பேர் பணிபுரியும் கிரென்கோல்ம் நெசவுத் தொழிற்சாலையின் மேற்பணிக்கு கொலோண்டை நியமிக்கப்படுகிறார். 12 முதல் 18 மணிநேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம். அதிகமான பெண் பாட்டாளிகளைக் கொண்ட ஆலை.அவரது அரசியல் பார்வையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது அந்தச் சூழல்தான். தொழிற்சாலைக்குள்ளேயே சிறை வாழ்க்கை வாழ்ந்த பாட்டாளிகள். அங்குள்ள ஓய்வு அறையிலேயே உறங்கிக்கொள்கிறார்கள்.
ஒருமுறை கொலண்டாய் அந்த தொழிற்சாலையை சுற்றி பார்க்கும்போது, இளம்பெண்ணின் குழந்தை இறந்து கிடந்திருக்கிறது. எதுவும் நடக்காததுபோல் மற்ற பெண் தொழிலாளிகள் வழக்கம்போல இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அது அவர் மனதில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களுக்காகப் பாடுபடவேண்டும் என்கிற எண்ணம் தோன்றுகிறது. மார்க்சிய இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொள்கிறார். பெண் தொழிலாளர்களின் நலனுக்காகப் பாடுபடத் துவங்குகிறார். கொலண்டாயின் சமூக அரசியல் செயல்பாடுகளை அவர் கணவர் எதிர்க்கிறார். கருத்து வேறுபாடுகளால் 1896 இல் தன் கணவரை விட்டுப் பிரிகிறார்.
அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஹூன்ரிச் ஹெர்க்னரிடம் அரசியல் பொருளாதாரம் கற்பதற்காக சூரிச் செல்கிறார். பாட்டாளி வர்க்க இயக்கத்தின் புரட்சிகர நடவடிக்கைகளுக்காக கொலண்டை தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பிளக்னேவ், ரோசா லக்சம்பர்க், கார்ல்கௌட்ஸ்கி போன்றவர்கள் எழுதியவற்றை வாசித்து தன்னை தயார்படுத்திக் கொண்டார்.
தொழிலாளர்கள் வரலாறு குறித்து நிபுணத்துவம் பெறுவதற்காக லண்டன் செல்கிறார். சிட்னி வெப் மற்றும் பெட்ரிச் வெப் போன்றோர்களை சந்திக்கிறார். அவர்களது ஃபேபியன் சீர்திருத்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர்களை ஒதுக்குகிறார். மேற்படிப்பு முடித்து 1899 ஆம் ஆண்டு செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் திரும்பிய கொலண்டை அங்குள்ள தடை செய்யப்பட்ட ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்கிறார். அதன் கொள்கை பரப்பாளராகவும் எழுத்தாளராகவும் பணிபுரிகிறார். தாய் பின்லாந்து என்பதால் பின்லாந்து குறித்த நேரடி அனுபவம் பெற்றிருந்தார். ஜார் அரசின் பிற்போக்குத்தனமான கொள்கையினால் பின்லாந்தின் சுதந்திரம் அச்சத்திற்கு உள்ளாயிருந்த காலகட்டம். கொலண்டை அதன் தேசிய விடுதலைக்காக உறுதியான ஆதரவு தெரிவித்தார்.
பின்லாந்து தொழிற்சாலைகளை வைத்து பார்க்கும்போது பாட்டாளிகளின் பணிபுரியும் சூழல், வாழ்க்கைத் தரம் என்பதை அறிய முழுமையான அரசியல் பொருளாதார ஆய்வை மேற்கொண்டார். அந்த ஆய்வு புத்தகம் 1903 ஆம் ஆண்டு வெளியானது. கொலண்டை தன் கணவரை அதிகம் நேசித்தார். ஆனால், அந்தக் காதல் அவரின் தியாகத்தை எதிர்பார்த்தது. அவருக்குள் அது மிகப்பெரிய கலகத்தை ஏற்படுத்தியது. தான் நேசித்த அந்த மனிதரை விட்டு விலகவில்லை என்றால் தன் சுயம் அழிந்துபோகும் எனும் அபாயத்தை உணர்ந்தார். காதல் என்ற சிறைக்குள் சிக்கிக்கொண்டால் அவரது முழுசக்தியையும் உறிஞ்சிக்கொண்டு சமூகத்திற்கு பயனற்ற ஒரு சக்கையாகத்தான் இருப்போம் என்கிற உணர்வு அவருக்குத் தோன்றியது.
அலெக்சாண்டிராவை பொருத்தவரை தான் முதலில் ஒரு மனிதர், பிறகு பெண், கடைசியாகத்தான் விளாடிமிரின் மனைவி, ஒரு மகனுக்குத் தாய் என்கிற தெளிவு இருந்தததால்தான் அரசியல் களப்பணியாற்ற முடிந்தது. தொடர்ச்சியாக மகளிரை ஒன்று திரட்டும் போராட்டத்தில் இறங்கினார். ஆனால், அதை ஒழுங்குபடுத்துவதற்கு மார்க்சிய வழியிலான செயல்திட்டம் அப்போது சரியாக இல்லை. 1900 ஆம் ஆண்டு குரூப்ஸ்கயா அவர்கள் வெளியிட்ட “உழைக்கும் மகளிர்” என்ற 24 பக்க பிரசுரம் மட்டும்தான் ஆதாரமாக இருந்தது. உழைக்கும் மகளிர் பற்றி ரஷ்ய ஜனநாயகக் கட்சியிடம் இருந்த ஒரே ஆவணம் அதுதான்.
ஐரோப்பிய தொழிற்சங்கங்களைப் பற்றி கொலண்டை அறிந்துகொள்கிறார். கிளாரா ஜெட்கின், கம்யூனிஸ்ட் அறிக்கை, தடை செய்யப்பட்ட இயக்கம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார். 1905 இல் இரத்த ஞாயிறு என்று சொல்லக்கூடிய ரஷ்யப் புரட்சி தினத்திற்குப் பிறகு கொலண்டை மிகத் தீவிரமான போராட்ட முறைகளுக்கு திட்டம் வகித்தார். அதன் ஊடாகத்தான் பெண்களின் பிரச்சனைகளை எப்படிக் கையாளுவது என்கிற படிப்பினையை அவர் கற்றுக்கொண்டார். பெண்கள் இயக்கத்திற்கு உந்து சக்தியாக இருந்தது 1905 – 07 ஆண்டுகளில் நடந்த புரட்சிதான். அப்போது, மத்தியதர வர்க்கத்துப் பெண்கள் முதலாளியக் கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு விவாகரத்து, ஓட்டுரிமை, சொத்தில் பெண்களுக்கு சமபங்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார்கள். இவர்களுடைய போராட்டங்கள் உழைக்கும் மகளிரையும் ஈர்த்தன. மாற்றத்தைக் கொண்டுவரவும் வாழக்கை தரத்தை மேம்படுத்தவும் தனியார் தொண்டு நிறுவனங்கள், உழைக்கும் மகளிரை குறிவைத்தன. இந்த நிலையில்தான் மார்க்சிய தத்துவத்திற்கு எதிராகப் பெண்ணியவாதிகள் எழுவதை கொலண்டாய் கண்டார். சோசலிசம் பெண்களது விடுதலையை உறுதிசெய்யும் என்றும், உழைக்கும் மகளிரின் தேவை என்பது ஆண் பாட்டாளிகளின் தேவைகளைப் போல்தான் என்பதை மேம்போக்காகச் சொன்னால் அவர்களுக்குப் புரியாது. ஆண் பாட்டாளிகளுடன் தோளோடு தோள் நின்று போராடி சமூகத்தை மாற்றுவது என்பதுதான் பெண்களின் விடுதலையை உறுதி செய்யும் என்பது உண்மைதான். ஆனால், பெண்கள் பாலினப் பாகுபாடு வர்க்கப்பாகுபாடு என்கிற இரட்டை ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தார்.
ஆண்கள் வெறும் வர்க்க ஒடுக்குமுறைக்கு மட்டும்தான் ஆளாகிறார்கள். அதே நேரத்தில் பாலின பாகுபாட்டின் மூலம் பெண்களை ஒடுக்குவதை, வர்க்க ஒடுக்குமுறையின் மூலம் பாதிக்கப்பட்ட ஆண்களும் செயல்படுத்துகிறார்கள். ஒரே வேலையாக இருந்தாலும் ஆண்களைவிட பெண்களுக்கு குறைவான சம்பளம், திறமையற்ற பணிகளில் பணியமர்த்துவது, கர்ப்பம், பிரசவம் தொடர்பான பிரச்சனைகள், குழந்தைகளை வளர்த்தல், அன்றாட குடும்ப வேலைகள், பணிபுரியும் இடங்களில் பாலியல் தொந்தரவுகள், பழி தூற்றுதல், குடும்ப வன்முறை போன்றவைகளுக்கு ஆளாகிறார்கள்.
அன்றைய பெண்ணியவாத இயக்கங்கள் பெண்களின் பாலின ஒடுக்கு முறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வர்க்க ஒடுக்குமுறை தொடர்வதையே விரும்பின. பெண்பாட்டாளிகள் வர்க்க ஒடுக்கு முறைக்கான இயக்கங்களில் சேராமல் தடுத்து, வர்க்கமற்ற சமூகத்தை அமைப்பதற்கான முயற்சியை சீர்குலைத்து விடுகின்றன. இரட்டை ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடுவதற்கு பெண் பாட்டாளிகளை தயார்செய்ய வேண்டும். அப்படிச் செய்வதானால் பெண்பாட்டாளிகளின் தனிப்பட்ட உரிமைக்கான கோரிக்கைகளை முன்னெடுப்பதோடு ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கும் கூடுதல் பலமாக அமையும் எனக் கொலண்டை கருதினார்.
பாலியல் ஒடுக்குமுறையும் ஒருவகையில் வர்க்க ஒடுக்குமுறைதான். பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான ஒடுக்குமுறையின் உள் அர்த்தம் என்பது, சம்பளம் இல்லாமல் அல்லது குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் பாட்டாளி வர்க்கத்தை உருவாக்குவதுதான். அரசியல் பணி பெண்களுக்கு உரியதல்ல என்ற கருத்து சமூகத்தில் நிலவி வருகிறது. பெண்களுக்கும் தங்கள் திறன் குறித்த சுயநம்பிக்கை இருப்பதில்லை. அதேசமயம், வீட்டு வேலைகள், குழந்தைகள் வளர்ப்பினால் அவதியுற்று சோர்வுற்று பெண்கள் அரசியல் ரீதியாக பணிபுரிய பலமும் நேரமும் இல்லாமல் போய்விடுகிறது என்பதான பெண்களின் பிரச்சனைகளை கணக்கில் கொண்டு அதன் அடிப்படையில் ‘உழைக்கும் மகளிர்’ கட்சிக்குள் அவர்களைக் கொண்டுவர மார்க்சியர்கள் பாடுபடவேண்டும் என்றார்.
ஜெர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சியில் பெண்களுக்கான தனி ‘ பீரோ’ அமைக்கப்பட்டதுபோல் பெண்களின் பிரச்சனைகளை கட்சியின் செயல்திட்டத்தில் முக்கியக் கொள்கையாக எடுத்து வைக்கப் போராடினார். பெண்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்தால் இயக்கம் பிளவுபடும் எனப் பல தோழர்கள் கருதினர். கொலண்டையும் அவரது தோழர்களும் முதலாளித்துவ பெண்ணியவாதிகள் நடத்துகின்ற கூட்டங்களுக்குச் சென்று பல்வேறு விவாதங்களை வைத்தனர்.
1905 –இல் பெண்கள் சமத்துவத்திற்கான சங்கம் என்ற பெண்ணியவாதிகள் கூட்டத்திற்கு கொலண்டை சென்றார். வர்க்க பாகுபாடுகள் நிறைந்த சமூகத்தில் பெண்களின் சமத்துவத்தை எப்படி உருவாக்க முடியும் என்ற விவாதத்தை கிளப்புகிறார். அங்கிருந்த முதலாளித்துவ பெண்ணியவாதிகள் கொலண்டையின் கழுத்தை நெறித்து கொன்றுவிடப் போவதாக மிரட்டுகின்றனர்.
அந்த நேரத்தில் ஜாரின் டூமாவுக்கு எதிராக ஆயுதங்கொண்ட எழுச்சி நடத்தவேண்டும் என்று கொலண்டை எழுதிய துண்டுப்பிரசுரம் பெரிய சர்ச்சையை எழுப்பியது.
பின்லாந்துக்கு ஆதாரவாக மக்களிடையே கோரிக்கை வைத்ததால் அவரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்குப்பிறகு விடுவிக்கப்பட்டு தீவிர அரசியலில் ஈடுபட்டார். யுத்த எதிர்ப்பு பிரச்சாரத்திலும் ஈடுபட்டதால் பெண்விடுதலைப் போராட்டத்தில் அவருடைய பங்கு சற்று பின்தங்கிருந்தது.
1917 இல் ரஷ்ய மக்களின் பேரெழுச்சியால் ஜாரின் சர்வாதிகார ஆட்சி வீழ்ந்தது. அப்போது கொலண்டை நார்வேயில் இருந்தார். புரட்சிக்கு ஆதரவாகவும் புரட்சிக்கு எதிராகவும் நின்ற மக்களைக் காண ரஷ்யா திரும்பினார். பாட்டாளிகளின் பிரதிநிதியான சோவியத்துக்கே அனைத்து அதிகாரமும் வழங்கவேண்டும் என்கிற போராட்டத்திற்காக மக்களைத் திரட்டும் பணியில் ஈடுபடவேண்டியிருந்தது. அதில் கொலண்டை உறுதியாகவும் இருந்தார். ரஷ்யா யுத்தத்தில் வீழவேண்டும் என ஜெர்மானிய பேரரசனால் பணம்கொடுத்து அனுப்பப்பட்டவர் கொலண்டை என வதந்தி பரப்பப்பட்டது. பைத்தியக்காரப் பெண் போல்ஸ்விக் என முதலாளித்துவ பத்திரிகைகள் அவருக்கு முத்திரை குத்தின. அவரை அத்தனை மரியாதையுடன் நடத்திய டொரினியே நகரம் கொலண்டையை தரக்குறைவாக நடத்தியது. தற்காலிக அரசு அவரை கைது செய்தது.
அன்றைய போர்க்கால நெருக்கடியில் பொருட்களின் விலைவாசி ஏற்றத்தை வறுமைக்கோட்டில் வாடும் பெண்களால் சமாளிக்க முடியவில்லை. பொருளாதாரப் பின்னடைவின் கோரப்பிடியில் இருந்த பெண்களுக்கு தன்னியல்பாகவே கலகம் செய்யக்கூடிய மனோபாவம் இருந்தது.
பெண்களும் சேர்ந்து கட்சியில் உழைத்தால்தான் சாதிக்கமுடியுமென்பதை கட்சி உணர்ந்தது. 1917 இல் உழைக்கும் மகளிர் என்ற வாரப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. போருக்கு எதிராகவும் , விலையேற்றத்திற்கு எதிராகவும் தன்னெழுச்சியாகத் திகழவேண்டும் என கொலண்டை கேட்டுக்கொண்டார். அவர் ஏற்பாடு செய்த கூட்டங்களுக்கு பெண்கள் திரளாகக் கலந்து கொண்டனர். அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளுக்கும் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் கட்சிப்பணிக்காகச் சுழன்று பணியாற்றினார். அங்கிருக்கும் இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், தத்துவவாதிகள், பேராசிரியர்கள், அறிஞர்கள் மத்தியில் உரையாற்றினார். சோசலிசக் கருத்துக்கு எதிரானவர்களின் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் கொலண்டை.
நாளாக நாளாக போல்ஸ்விக்குகளின் ஆதரவு பெருகத்தொடங்கியது. 1917 ஆம் ஆண்டில் இருந்து செயலாற்றிய சோவியத் நிர்வாகத்தில் இருந்த ஒரே பெண் உறுப்பினர் கொலண்டைதான். அந்த அமைப்புதான் பாட்டாளிகளுக்கு அரசியல் வழிகாட்டும் ஒரே அமைப்பாகத் திகழந்தது. சலவைத்தொழிலானது நகராட்சியின் கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பெண் சலவையாளர்களின் வேலைநிறுத்தம் நடந்தது. போராட்டம் வெற்றிகரமாக நடைபெற கொலண்டை தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்தார். அக்டோபர் புரட்சி கனிந்து வந்தது. தற்காலிகக் குடியரசு தூக்கி ஏறியப்பட்டது. சோவியத் குடியரசு உருவானது. 1917 இல் லெனின் உருவாக்கிய “ஏப்ரல் ஆய்வுரை” யை முதலில் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டவர் கொலண்டைதான்.
பெண்கள் மற்றும் பாட்டாளிகளின் இயக்கத்தை ஒழுங்குபட கட்டமைப்பதற்கான அடிப்படை வேலைகளை கொலண்டை முன்னெடுத்தார். உழைக்கும் மகளிரின் முதல் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அக்டோபர் புரட்சியின்போது கொலண்டை கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினராக இருந்தார். அன்றைய அரசியல் சூழலில் கொலண்டையும் ஆயுதம் தாங்கிய புரட்சியை ஆதரித்து வாக்களித்தார். நிரந்தரமான கட்சிக்கூட்டங்கள், தூக்கமில்லாத இரவுகள். கொலண்டை சமூகநலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அந்த அமைச்சரவையில் இருந்த ஒரே பெண்மணி அலெக்சாண்டிரா கொலண்டை.
உலகிலேயே ஒரு பெரும் குடியரசின் அமைச்சர் பொறுப்பேற்ற முதல் பெண்மணி கொலண்டை. முதலில் சமூகநலத்துறை என்பது வீடு இழந்தவர்களுக்கும் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் உதவக்கூடிய சமூகப்பணி மையமாக இருந்தது. எந்தப் பிரச்சனை என்றாலும் மக்கள் இந்த அமைச்சரகத்தை முற்றுகையிட்டார்கள். ஏற்கெனவே பணிபுரிந்தவர்கள் சோவியத் அரசுக்கு எதிராகவே பணிசெய்தனர். சமூகநலத்துறையை நிர்வகிக்க போதுமான நிதி உதவியும் இல்லை. கொலண்டை இரவு பகலாகப் பணியாற்றி சரியான சட்டங்கள் இயற்றி ஆணைகளைப் பிறப்பித்தார். பொறுப்பான ஊழியர்களை பணிக்கு அமர்த்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தார். பெண்களின் மேம்பாட்டிற்கான சட்டங்கள் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. பெண்களுக்கும் சமமான சட்டப்பூர்வமான சிவில் உரிமைகள் – ஆண்களுக்கு நிகரான சம்பளம் என்கிற அடிப்படையில் சமவேலைக்கு சம ஊதியம் – பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பொருத்தமான பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்டன. 1917 இல் திருமணச்சட்டம் – தேவாலயங்களை நாடாமல் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்துகொண்டு முறையாகத் திருமணம் செய்யலாம் என்பதோடு மணமுறிவு எளிதாக்கப்பட்டது. பெண்கள் தங்கள் விருப்பப்படி கணவன் பெயரையோ தந்தை பெயரையோ உபபெயராக வைத்துக்கொள்ளலாம். திருமண உறவின் மூலம் பிறக்காத குழந்தையை முறையற்ற குழந்தை என்று சொல்வது தடைசெய்யப்பட்டது. பெண்களின் பிரசவபிரச்சனை மற்றும் உழைக்கும் பெண்களின் பாதுகாப்பு பிரச்சனைகளை கவனத்தில் கொண்டார்.
மென்ஸ்விக்குகளின் வேண்டுகோளின்படி தயாரித்து வைக்கப்பட்டிருந்த 600 பக்கம் கொண்ட பிரசவ இன்சூரன்ஸ் ஆய்வை பயன்படுத்தி சோவியத் சமூகக் கொள்கையை கொலண்டை உருவாக்கினார். பெண் ஊழியருக்கு 16 வார சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுப்பை அரசு உறுதி செய்தது. பிரசவ மற்றும் குழந்தை பராமரிப்பு சேவையை தேசியமயமாக்கி அரசு கவனித்துக்கொள்ளும் என்றார். இதன் எதிர்விளைவாக பெண்கள் புதுமைப்படுத்தபடுகிறார்கள் என்கிற அவதூறு கட்டவிழ்த்து விடப்பட்டது.
அலெக்சாண்டர் நெவ்ஸ்கி என்ற துறவு மடத்தை ஊனமுற்றவர்களின் உறைவிடமாக மாற்றினார். தேவாலய அமைப்புகள் கொலண்டைக்கு எதிராக எதிர்ப்பு பிரச்சாரங்கள் செய்தன. கொலண்டைக்கு எதிராக எண்ணற்ற அச்சுறுத்தல் கடிதங்கள் வந்தன. அவர் எந்த பாதுகாப்பையும் கேட்கவில்லை. ஆயுதம் இல்லாமல் தனியாகவே எங்கும் பயணித்தார்.
பிறகு கொலண்டைக்கும் கட்சிக்கும் கருத்து வேறுபாடு வந்தது. அரசின் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாமல், தன் அமைச்சரவைப் பதவியை இராஜினாமா செய்தார். போல்ஸ்விக் கட்சியின் முன்னோக்கியப்பார்வை அதனுள் இருந்த ஆணாதிக்க பழமை இவை இரண்டிற்குமிடையே நாங்கள் வேலை செய்தோம் என்கிறார். கட்சி குழப்பங்களால் அவருடைய ஆற்றல்மிகுந்த செயல்பாடுகள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்று கூட இப்போது சிந்திக்க வைக்கின்றன.
புதிய பெண்மணி மற்றும் புதிய அறவியல் கருத்துக்கள், தனிமனித ஒழுக்கம் குறித்து அதிகம் பேசினார். அதே சமயம் , சமாதானத்திற்கு வரவே முடியாதபடி புரட்சியும் போராட்டமும் வெடித்தது. எங்கும் இரத்த ஆறு ஓடியது. நடப்பது எதையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமைக்கு மன உளைச்சலுக்கு கொலண்டை ஆளாகினார்.
சட்டப்பூர்வமாக பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டாலும் இன்னும் முதலாளித்துவ கட்டுக்குள்ளேயே இருந்தனர். குடும்பத்தில் இருந்தும் எந்த அதிகாரத்தையும் பெறாமல் இருந்தனர். நவம்பர் 1918 ஆம் ஆண்டில் முதல் பாட்டாளி மற்றும் விவசாயப் பெண்களின் காங்கிரஸ் கூட்டப்பட்டது. 1147 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பெண் விடுதலைக்கான முறையான பணி தொடங்கப்பட்டது. வீட்டு வேலைகளிலேயே தன் வாழ்க்கையைக் கழிக்கும் பெண்களை வெளியில் கொண்டுவந்து அவர்களுக்கான பொதுவான சமையல் கூடம், குழந்தை பாதுகாப்பு மையம், காப்பகம் என்று வீட்டு நிர்வாக அமைப்பில் இருந்தும் பள்ளி முறைகளிலும் பெரும் மாறுதல்களைக் கொண்டுவந்தார்.
சமூக அடிமைத்தளைகளில் இருந்து விடுவித்து பெண்களை சமூகப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என கொலண்டை நினைத்தார். 1919 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டபோரின் போது உக்ரேனிய அரசின் விழிப்புணர்வு மற்றும் பிரச்சார அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது, கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த 400 பெண் தோழர்களை கீவ் பகுதியின் ஆபத்தான பிரதேசத்தில் இருந்து சிறப்பு இரயில் மூலம் வெளியேற உதவினார். உக்ரைனிலும் உழைக்கும் மகளிர் இயக்கத்தை கட்டமைக்க உதவினார்.
நாட்டுப்பற்று என்பதுதான் பிரிவினைக்கான போருக்கான முக்கியக் காரணம். போரால் ஆதாயம் பெறப்போகிறவர்கள் ஏகாதிபத்திய முதலாளி அரசே என்கிற போர் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் கொலண்டை தீவிரமாக ஈடுபட்டதால் நாடுவிட்டு நாடு துரத்தப்பட்டார். தன் மகனோடு ஸ்காண்டிநேவியாவில் சிலகாலம் பதுங்கியிருந்தார். பலநேரம் அவருடைய மகனை அவர் நண்பர்கள்தான் கவனித்துக்கொண்டார்கள்.
நடுநிலைமை நாடான ஸ்வீடன் சென்றார். பிறகு டென்மார்க். தேசவிரோதியாக குங்ஸ்ஹாம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். போர் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக கைது செய்யப்பட்ட முதல் பெண்மணி அலெக்சாண்டிரா கொலண்டை.
சமத்துவம் இல்லாத சமூக அமைப்பில் பெண்கள் விடுதலை சாத்தியமில்லை என்பதில் கொலண்டை உறுதியாக இருந்தார். வியட்னாமில் பெண்கள் கட்டாயப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்கள். அந்தக் கொடுமையில் இருந்து அவர்களை மீட்டு தொழில் தொடங்குவதற்கும் உழைக்கும் மகளிராகவும் மாற்றும் பணியை கொலண்டை மேற்கொண்டார். அந்தநேரத்தில் அவருக்கு கடுமையான நோய் தாக்குதல் ஏற்பட்டது. அதிலிருந்து குணமாகி மாஸ்கோ செல்கிறார். மீண்டும் பெண்கள் மத்தியில் பணியாற்ற அழைக்கப்பட்டார். பெண்களுக்கான செய்தித் தாள்கள், கருத்தரங்கங்கள், மாநாடுகள் நடத்தப்படுகின்றன. கிழக்குப் பகுதியில் உள்ள முஸ்லீம் பெண்களிடமும் பெண் விடுதலைக்கான பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன. அப்போதும் அங்குள்ள ஆண்களால் தாக்கப்படுகிறார்கள். எட்டாவது சோவியத் மாநாட்டின் போது கொலண்டை ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதாவது, பெண்களின் சமஉரிமைக்காக அவர்களை அரசு மற்றும் சமூகப்பணிகளில் அதிகமாக ஈடுபடுத்த வேண்டும் என்றார். பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் அது நிறைவேற்றப்பட்டது. அவருக்கு கிடைத்த வெற்றி . உலக கம்யூனிஸ்ட் பெண்களின் இரண்டு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன .கொலண்டை முன்பைவிட அதிகம் பேசியும் எழுதியும் வந்தார். அவரது பணி லெனினின் முழு ஆதரவையும் பெற்றிருந்தது. 1919 இல் “ஜெனோடெல்” என்கிற உழைக்கும் மக்களுக்கான செய்தித்தாள் ஒன்றை ஆரம்பித்தார்.
புதிய அறவியல் கருத்துக்களை புத்தகமாக வெளியிட்டபோது, அவரது அறவியல் மற்றும் பாலியல் கருத்துக்களை கட்சியில் இருந்த ஆண் பெண் போல்ஸ்விக்குகள் பலர் எதிர்த்தனர். சோவியத் நிறுவனங்களில் இருக்கும் அதிகார மனோபாவத்தை விரட்டி அடிப்பதற்கு முன்னர், கட்சி தனது அதிகார மனோபாவத்தை விரட்ட வேண்டும். தொழிற்சங்கங்களுக்கு அதிக அரசியல் சுதந்திரம் தரப்படவேண்டும். அதற்காகக் கட்சியின் திட்டம், உறுப்பினர்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, 1921 இல் அலெக்சாண்டிரா கொலண்டை- அலெக்சாண்டிரா ஸ்கைப்னிகோவுடன் சேர்ந்து ‘பாட்டாளிகளின் எதிர்ப்பணி’ என்கிற ஒன்றை கட்சிக்குள் உருவாக்கினார்கள். அதில், ஸ்கைப்னிகோவ் தொழிலாளர் நல அமைச்சராக இருந்தார். லெனினுக்கு இணையான அரசியல் அதிகார பலத்தை, திறமையை கொலண்டை பெற்றிருந்தார். அதில், 1922 இல் கட்சியின் பத்தாவது மாநாடு நடக்கிறது. கட்சிக்குள் பல அணிகள் இருந்தால், கட்சிக்கு எதிரான நாசவேலைகளுக்கு இடமளிக்கும் என லெனின் வலியுறுத்துகிறார். பாட்டாளிகளின் எதிர்ப்பணி கலைக்கப்பட்டது.
நார்வேயில் சோவியத் தூதராக கொலண்டை நியமிக்கப்பட்டார். அவர்தான் உலகத்தில் முதன்முதலாக நியமிக்கப்பட்ட பெண் தூதர். பெண் தூதராக அதுவும் அலெக்சாண்டிரா கொலண்டை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ரஷ்யாவின் வெள்ளை அணியினர் வழக்கம்போல் அவதூறுகளைப் பரப்பினர். ஆனாலும், தடைகளைத் தகர்த்து மார்க்சிய அடிப்படையில் பாட்டாளிகளின் வளர்ச்சிக்காகக் கொலண்டை முன்னேறிக்கொண்டே இருந்தார். வர்த்தக உடன்படிக்கையில் கொலண்டை கையெழுத்திட்டார். சோவியத்திற்கும் நார்வேக்கும் இடையே மீண்டும் வணிகத்தொடர்பு அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.
கொலண்டையின் பணி மிக முக்கியமானதாகும் கூடுதல் கடினமானதாகவும் மாறுகிறது. 1925 முதல் 1927 வரை மெக்சிகோவிற்கும் 1927 முதல் 1930 வரை மீண்டும் நார்வேக்கும் 1930 முதல் 1945 வரை ஸ்வீடனுக்கும் அவர் தூதுவராக இருந்து பணியாற்றுகிறார். 1945 இல் பணி ஓய்வு பெற்று மாஸ்கோ திரும்புகிறார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் சர்க்கர நாற்காலியில் தனித்தே வாழ்ந்திருக்கிறார். 1952 இல் ஏற்பட்ட மாரடைப்பினால் மரணமடைந்தார்.
அவருக்காக பரிந்துரைக்கப்பட்ட அமைதிக்கான நோபல்பரிசு இறுதியில் மறுக்கப்பட்டது. பல்வேறு அங்கீகாரங்களை அடையாளங்களை புறந்தள்ளி இயக்கத்திற்காக அவர் தொடர்ச்சியாக மகிழ்ச்சியாக உழைத்தார். பாட்டாளி வர்க்கத்தின் வெளிச்சத்திற்காகவும் பெண்கள் அரசியல் தெரிந்து கொள்ளவேண்டும். பொருளாதார தற்சார்புடைய உழைக்கும் மகளிராக கட்சியாக மாற்றவேண்டும் என நினைத்ததோடு நிறைவேற்றியும் காட்டினார். அதுகுறித்த பல்வேறு புத்தகங்களை எழுதினார். இவருக்கு வழிகாட்டியான மூத்த பெண் புரட்சியாளர் ரோஸா லுக்சம்பர்க்கின் படுகொலை என்பது அடுத்தடுத்த பெண்போராளிகளை அச்சுறுத்துவதாக இருந்தாலும் துளியும் பயமின்றி துணிச்சலோடு செயலாற்றியவர் கொலண்டை.
இளம்வயதில் இடதுசாரியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் கொள்கையில் மாறாமல் இறுதிவரை அதே உறுதி நிலைப்பாட்டில் இருந்தார். இராஜதந்திரி, உமிழும் புரட்சியாளர், இராணுவமே அஞ்சி நடுங்கும் இரும்பு மனுஷி என அழைக்கப்பட்டவர். சர்வதேசியவாதியாக, அரசியல் அகதியாக, சோசலிஸ்ட்டாக, புரட்சிகர கம்யூனிஸ்ட்டாக முழங்கியப் பெண் போராளி அலெக்சாண்டிரா கொலண்டை. அவருடைய கொள்கை நிலைப்பாடு என்பது சமூகம் மாறிக்கொண்டே இருக்கும் அதை இளம்தலைமுறைகள் சரியான வழியில் தீர்மானிப்பார்கள் என்பதுதான்.