என்னாது… மறுபடியும் முதல்லேருந்தா….

தொழிலாளர்களின் உரிமைகளை மதியுங்கள் என நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் கேட்கும்போது, பதிலாக கீழ்வெண்மணியில் 44 கூலித் தொழிலாளிகள் உயிரோடு எரிக்கப்பட்டனர். மாஞ்சோலைத் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீசாரின் தாக்குதலில் 17 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். பின்னி மில் போராட்டத்தில் ஒன்பது தொழிலாளர்கள் குண்டடிபட்டு செத்தனர். சென்னை நோக்கியா தொழிற்சாலையில் பணிப் பாதுகாப்பு கேட்டு 3000 தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது, மொத்தமாக 8000 தொழிலாளர்களின் குடும்பங்களைத் தவிக்கவிட்டு சென்னையைவிட்டு வெளியேறியது நோக்கியா ஆலை. இப்போது சாம்சங் ஊழியர்கள் தங்களின் தொழிற்சங்க உரிமைகளை அங்கீகரிக்கப் போராடியபோது, போராட்டத்தில் போலீசார் பலப்பிரயோகம் செய்கின்றனர். போராட்டப் பந்தலைப் பிரிக்கின்றனர். போராடும் ஊழியர்களைக் கைது செய்கின்றனர். ஆளும் வர்க்க அரசுகள் தொழிற்சங்கங்கள் அமைத்துக்கொண்டும் இயங்குகின்றன என்பதுதான் எல்லாவற்றிலும் உச்சக்கட்ட சோகம்.
பொதுவுடமைத் தலைவர் தோழர் சிங்காரவேலு தலைமையில் சென்னையில் மேதினக் கொண்டாட்டம் நடைபெற்று 100 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 1920 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்திய தொழிற்சங்கச் சட்டம், தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை தொழிலாளர்களுக்குத் தருகிறது. ஒரு தொழிற்சங்கத்தின் முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் அந்நிறுவனத்தில் பணிபுரிபவர்களாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இந்த சட்டத்தின்படி இல்லை. அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டிருக்கும் எந்தக் கட்சித்தலைவரும் கூட அத்தொழிற்சங்கத்தின் தலைவராகவோ, முடிவுகள் எடுக்கும் அதிகாரம் பெற்றவராகவோ இருக்கமுடியும். சட்டத்தின் விதிகள் தெளிவாக இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களின் கண்களை கார்ப்பொரேட்டுகளின் முதலீட்டு ஆசைகள் மறைக்கின்றன.
2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக தமிழகத்தை மாற்றவேண்டும் என்பதே ஆட்சியாளர்களின் ஒரே கனவாக இருக்கிறது. அதற்காக நடப்பில் உள்ள எந்த சட்டங்களும் அவர்களின் கண்களில் படுவதே இல்லை. தொழிற்சங்கம் அமைப்பது என்பது அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் முடிவு செய்யவேண்டிய பிரச்னை. அந்நிறுவனமும், தொழிலாளர்களும் பரஸ்பரம் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டிய பிரச்னை. இதில் அரசின் நிலைப்பாடு என்பது பிரச்னையே இல்லை. தொழிற்சங்கத்தின் பெயரில் சாம்சங் என்னும் சொல் வரக்கூடாது என்று நிறுவனம் அடம்பிடிக்க, நாட்டின் சட்டங்களை மதித்து சாம்சங் நடக்கவேண்டும் என்று அறிவுரை சொல்வதற்குப் பதில், சாம்சங் சார்பாக மாநில அரசே செயல்பட்டதுதான் மிகவும் மோசம்.
1991 ஆம் ஆண்டுக்குப் பிறகான உலகமயமாக்கல் சூழலில் சுதந்திர இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சிறிது சிறிதாக தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது. நாட்டின் கனிம வளங்கள் உள்ளிட்ட செல்வங்கள் இந்திய, அகில உலக கார்ப்பொரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இதை எதிர்த்துக் கேட்கும் தொழிற்சங்கங்களை நசுக்க புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன, அறிவுஜீவிகளையும், எழுத்தாளர்களையும், களப்பணியாளர்களையும் அர்பன் நக்சல்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் மாவோயிஸ்ட்கள் என முத்திரையிடப்பட்டு வேட்டையாடப்படுகிறார்கள். எல்லாமும் கார்ப்பொரேட்டுகள் நலமுடன் வியாபாரம் செய்வதற்காகவே.
சமீபத்திய பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு மற்றும் கொரோனா பேரிடருக்குப் பிறகு சில இந்திய செல்வந்தர்களின் சொத்து மதிப்பு பல ஆயிரம் மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்திய, உலகக் கார்ப்பொரேட்டுகளுக்கு கதவுகள் திறப்பதில் இப்போது மாநிலங்களுக்கிடையில் கடும் போட்டி நிலவுகிறது. தொழில்வளத்தில் நாட்டின் முதன்மையான மாநிலங்களாகப் புள்ளிவிபரங்கள் குறிப்பிடும் மஹாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு, ஆந்திரம் எல்லாம் அந்நிய முதலீடுகளை ஈர்க்க என்னவேண்டுமானாலும் செய்கின்றன. பல பத்தாண்டுகளுக்கு வரிச்சலுகைகளை அந்நிறுவனங்கள் அனுபவிக்கின்றன. மின்கட்டணம் முதல் தண்ணீர் கட்டணம் வரை அவர்களுக்கு சலுகை காட்டப்படுகிறது. இந்த மாநில முதல்வர்கள் அமெரிக்காவுக்கும், அரபு நாடுகளுக்கும் சென்று முதலீடுகளை ஈர்ப்பதற்கு போட்டி போடுகிறார்கள். விளைவாக பெரும் அந்நிய நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி முதலீட்டில் இங்கு ஆலைகளை நிர்மாணிக்கிறார்கள். ஆனால் கிடைக்கும் வேலை வாய்ப்பு அரிதிலும் அரிதாக இருக்கிறது. சில முதலீடுகளில் ஒரு கோடிக்கு ஒரு வேலை வாய்ப்பு கூட கிடைப்பதில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளில் பத்து லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை கொண்டு வந்திருப்பதாகவும், 31 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகி இருப்பதாகவும், மேலும் 8000 கோடி ரூபாய் முதலீடு வர இருப்பதாகவும் தமிழக அரசின் புள்ளி விபரம் குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டின் தனிநபர் வருவாய் 3.15 லட்சம். இது நாட்டின் தனி நபர் வருவாயை விட 1.71 மடங்கு அதிகம். வறுமைக்கோட்டிற்குக் கீழே 2.2 சதம் மக்கள் மட்டுமே இருக்கிறார்கள். எல்லாம் சரிதான். ஆனால் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டின் நிலை மிக மோசமாக இருக்கிறதே. படித்த பட்டதாரிகள் மத்தியில் வேலை இல்லா திண்டாட்டம் 16.3 சதமாக இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இது இந்தியாவின் 13.4 சதவிகிதத்தை விட அதிகம். இளைஞர் மத்தியிலான வேலை வாய்ப்பின்மை 17.5 சதம் எனவும் அந்த புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இது அகில இந்திய அளவான பத்து சதவிகிதத்தை விட மிக அதிகம். இங்கு கொண்டு வந்து கொட்டும் கோடிக்கும் அது தரும் வேலை வாய்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதில்லை.
முதலீடுகள் என்பது அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். அரிதாக வேலை வாய்ப்பைப் பெறும் தொழிலாளர்களும், அரசின் ஒத்துழைப்போடு சுரண்டப்படுகிறார்கள். நாட்டின் சட்டங்கள் உறுதி செய்யும் தொழிற்சங்க உரிமைக்காக அவர்கள் போராடவேண்டியிருக்கிறது. சென்னை மாகாணத்தின் முதல் வேலை நிறுத்தப் போராட்டம் பக்கிங்காம் கர்னாடிக் மில் என்று அழைக்கப்பட்ட பின்னி தொழிற்சாலையில்தான் நடத்தப்பட்டது. கோரிக்கை என்ன தெரியுமா? சொன்னால் நம் தோழர்கள் வாய்விட்டு சிரிக்கவும் கூடும். ஞாயிற்றுக் கிழமைகளில் பிற்பகலிலாவது மில்லுக்கு விடுமுறை அளிக்கவேண்டும் என்பதுதான். இது நடந்தது 1878 ஜூன் 26. இன்றைய நவீன காலத்தில் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டிலிருந்து பணி செய்தல் என்னும் நடைமுறையை நினைத்துப் பாருங்கள். 150 வருடங்கள் கடந்துபோன பின்னரும் இனி வரும் காலக்கட்டங்களில் இதுபோன்ற உரிமைகளுக்காகத்தான் இனி போராட வேண்டியிருக்குமோ?.
(சங்கக்குரல், டிசம்பர் 2024 இல் வெளிவந்தது)