வாழ்வைச் சூறையாடும் இன்னொரு சூதாட்டம்

மனித இனம் தோன்றியதிலிருந்து சூதாடும் குணமும் மனிதனோடு ஒட்டிப் பிறந்தது போலாகிவிட்டது. சூதாட்டம் என்று சொன்னாலே நம் உடனடி நினைவுக்கு வருவது மகாபாரதக் கதைகள்தான். தருமர் கௌரவர்களிடம் சூதாடி தன் நாடு, தம்பிகள் மட்டுமல்ல தன் மனைவியையும் கூட இழந்ததை மகாபாரதம் இதிகாசம் சொல்லும். சொறி பிடித்தவன் கையும், தராசு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது என்ற பழமொழி உண்டு. சூதாடுபவன் கையும் அப்படித்தான். காலம் காலமாக சூதாட்டம் அப்படியேதான் இருக்கிறது. சூதாட்டத்தின் வடிவங்கள் மட்டும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. பகடை உருட்டுதல், சக்கரம் சுழற்றுதல், கருப்பு, சிவப்பு வண்ணங்கள் இப்படி எண்ணற்றவை. கோலி விளையாட்டில் கூட பைசா விளையாடியதை நான் சிறுவனாக இருந்தபோது பார்த்திருக்கிறேன். சீட்டு விளையாட்டு இன்னமும் நடந்து கொண்டிருக்கும் ஒருவித சூதாட்டம்தான். கிரிக்கெட்டில் யார் வெற்றி பெறுவார்கள் என்று நடக்கும் சூதாட்டமும், உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி யாருக்கு என்று அகில உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் நடக்கும் சூதாட்டமும் வெகு பிரசித்தம். நம் உயிர் போவதற்கு ஐந்து நிமிடங்கள் இருந்தால்கூட போதும். அந்த நேரத்தில் கூட ஆன்லைன் ரம்மி விளையாடச் சொல்லி வரும் விளம்பரங்களை நாம் பார்த்திருக்கலாம். சூதாட்டம் அப்படிப்பட்ட ஒரு கிளர்ச்சியை ஊட்டும். மேற்கூறிய வடிவங்கள் மட்டுமே சூதாட்டம் என்று யாரும் எண்ணிவிடவேண்டாம்.
சமீபத்தில் பங்குச் சந்தையை நிர்வகிக்கும் ஆணையமான செபி அமைப்பு ஒரு புள்ளிவிபரத்தைக் கொடுத்தது. அதன்படி, 2021 முதல் 2024 வரை பங்குச் சந்தையின் பியூச்சர்ஸ் அன்ட் ஆப்சன்ஸ் ( Futures and Options ) பிரிவின் கீழ் வர்த்தகம் செய்து, பல லட்சக்கணக்கான மக்கள் ஏறத்தாழ 181000 கோடி ரூபாயை இழந்திருக்கிறார்கள். இன்று நாட்டின் நவீன சூதாட்ட வடிவமாக பங்குவர்த்தகத்தின் எஃப் & ஓ பிரிவு திகழ்கிறது. 1990 களுக்குப் பின்னரான தனியார்மய, தாராளமயமாக்கல் பின்னணியில் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் பங்குச்சந்தை வர்த்தகம் பல நூறு மடங்கு அதிகரித்திருக்கிறது. 1986 இல் சென்செக்ஸ் என்னும் பங்கு வர்த்தகம் 100 புள்ளிகள் என்னும் கணக்கில் தொடங்கப்பட்டது. இன்று அது 80000 என்ற அளவில் பெருகியிருக்கிறது. அதாவது 1986 ஆம் ஆண்டில் 100 ரூபாயை நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தீர்கள் என்றால் இன்று அதன் மதிப்பு 80000 ரூபாய். ஆனால் பங்குச் சந்தை லாபம் சாமானிய மனிதனுக்கு எப்போதும் கிடைத்து விடுவதில்லை. சாமானிய மனிதன் நீண்ட நாட்களுக்கு முதலீடு செய்யும் வாய்ப்பே இல்லை. பங்குச் சந்தையின் மிகப்பெரும் கவர்ச்சியே அதன் ஏற்ற இறக்கங்கள்தான். உலகின் அனைத்து முக்கியமான அரசியல், பொருளாதார நிகழ்வுகளிலும் நம்முடைய பங்குச் சந்தையும் கடும் ஏற்றமோ அல்லது இறக்கமோ கண்டிருக்கிறது. இந்த ஏற்ற இறக்கங்களில்தான் சூறாவளியில் சிக்கிய துரும்புகளைப் போல சாதாரணப் பொதுமக்கள் அடித்துச் செல்லப்படுகிறார்கள். தங்களின் ஒட்டுமொத்த சேமிப்பை இழந்துபோகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.
அப்படியானால் பங்குச் சந்தைகள் என்பவை ஆபத்தானவையா? ஒருகாலத்தில் வங்கிகளில் சேமிப்புகளுக்குத் தரப்படும் வட்டி 15 க்கும் மேல். அதற்கும் மேலே வட்டி வேண்டும் என்று ஆசைப்பட்ட மக்கள் ஐம்பது சத வட்டி தருகிறேன். இரண்டு ஆண்டுகளில் அசலை இரட்டையாக்கித் தருவேன் என்றெல்லாம் சொல்லியதை நம்பி, முதலீடு செய்து தங்கள் சேமிப்பை இழந்ததை கடந்த தலைமுறை நன்கு அறியும். ஆனால் இப்போதோ வங்கிகளில் வட்டி விகிதம் ஆறு அல்லது ஏழு சதவிகிதம் மட்டுமே. பணவீக்கம் அதையும் தாண்டிச் செல்லும்போது தங்கள் சேமிப்பு வருடாவருடம் கரைந்து போவதை மக்கள் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். அரசின் கடும் சட்டங்களினால் இப்போது யாரும் பணத்தை இரண்டு மடங்காக மாற்றித் தருகிறேன் என்று சொல்லி கடைவிரிப்பதில்லை. நமது நாட்டின் சேமிப்பு விகிதம் கடந்த ஆண்டுகளில் இருபது சதவிகிதத்திற்கும் மேல். வங்கிகளில் போடும் பணத்திற்கு வட்டி அதிகம் கிடைப்பதில்லை. கடந்த பல ஆண்டுகளாக மென்பொருள் துறை கடும் வளர்ச்சியை சந்தித்து வருவது நாம் அறிந்ததே. பெரும்பாலும் இளைஞர்கள் மட்டுமே மென்பொருள் துறையில் சாதித்து வருவதும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மேலை நாடுகளில் நல்ல பொருளீட்டி வருவதும் நாம் அறிந்ததே. அப்படியானால் இவர்களின் சேமிப்பு வங்கிகளுக்குச் செல்லவில்லை எனில் வேறு எங்குதான் செல்கிறது?
இன்றைய இளம்தலைமுறையினர் தங்களுடைய பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றனர். பரஸ்பர நிதி நிறுவனங்களில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதன் மூலம் குறைந்தது பன்னிரெண்டு சதவிகிதம் வட்டியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். வங்கிகளில் தரும் சேமிப்பு வட்டி விகிதத்தை விடவாவது அதிகம் கிடைக்கவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை. பல நேரங்களில் கிடைக்கவும் செய்கிறது. ஆனால் தங்களின் பணம் விரைவில் பெருகவேண்டும் என்று கனா காணும் இளைஞர்களால் பிரச்னை ஆரம்பமாகிறது. மென்பொருள் துறையில் நுழைந்தவுடன் திருமணம், வீடு, கார் என செலவு பிடிக்கும் பெரும் செலவீனங்களைச் செய்வதன் மூலம் மாதத் தவணைகளைச் செலுத்துவதிலேயே தங்கள் சம்பளத்தை பெரும்பாலான இளைஞர்கள் இழக்கின்றனர். விளைவு. பணத்திற்கான தேவை இன்னும் அவர்களுக்கு அதிகரிக்கிறது. அதனால்தான் விரைந்து பணமீட்ட முயற்சிக்கிறார்கள். தவறான வழிகாட்டிகளால் பங்குச்சந்தையின் சூதாட்ட வடிவமான பியூச்சர்ஸ் & ஆப்சன்ஸ் தளத்தில் குதித்து கரைந்து போகிறார்கள். சூதாடி, சூதாடித் தோற்கிறார்கள். இதில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரும் தலா ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாயை இழந்திருப்பதாக செபி வெளியிட்ட புள்ளிவிபரம் கூறுகிறது.
பங்குச் சந்தையில் பரஸ்பர நிதி நிறுவனத்தின் வழியாகவோ அல்லது கடந்த பத்தாண்டுகளில் நல்ல லாபம் தந்திருக்கும் பங்குகளில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதின் வாயிலாகவோ தங்களின் சேமிப்பை கூடுதலாக உயர்த்திக் கொள்ள நிச்சயம் வாய்ப்பு இருக்கவே செய்கிறது. ஆனால் பேராசையினால் உந்தப்படும் பல லட்சம் இளைஞர்கள் எஃப் & ஓ பிரிவில் வணிகம் செய்து தங்களின் சேமிப்பை இழப்பதோடு தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தும் போகிறார்கள். பங்குச் சந்தையின் எஃப் & ஓ பிரிவு பெரு நிறுவனங்களுக்கும், கோடிக்கணக்கில் பங்குகளை வைத்திருக்கும் நபர்களுக்கும் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களிலிருந்து பாதுகாப்பை வழங்கிடும் ஒரு காப்பீடு போன்றது. இது சாதாரண சேமிப்பை வைத்திருக்கும் பல லட்சம் பொது மக்களுக்கானதல்ல. நவீன சூதாட்ட வடிவமாகத் திகழும் பங்குச் சந்தையின் எஃப் & ஓ பிரிவை இதுபோன்ற சூதாட்ட வடிவங்களுக்கு பயன்படுத்த வகை செய்யும் பிரிவுகளை அரசு தடை செய்யவேண்டும்.
இன்று உலகப் பொருளாதாரம் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அவைகள் தங்கள், தங்கள் நாடுகளில் தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய உலக அரசுகள் போட்டி போடுகின்றன. லாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டிருக்கும் பெரு நிறுவனங்களும், அந்நிய முதலீட்டாளர்களும் பெரும் நிதிகொண்டு உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் விளையாடுகிறார்கள். பெரும் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் எஃப் & ஓ துறையில் நாமும் நுழைந்து விளையாட முற்படுவோமானால் நம் கையும் சூடுபடும்.
ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கியின் சூதாடி நாவலை வாசித்திருக்கிறீர்களா? தன் வாழ்வில் பல்லாயிரக்கணக்கான ரூபிளை அக்காலத்திலேயே சூதாடித் தோற்றவர்தான் தஸ்தயேவ்ஸ்கி. ஒரு சூதாடியின் மனநிலையை அந்நாவலில் மிக அருமையாக சித்தரித்திருப்பார் அவர். சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பவர் ஆடாமல், அசையாமல் அந்த ஆட்டத்திலேயே இருப்பாராம். பகலென்றும், இரவென்றும் பாராமல் தொடர்ந்து விளையாடுவாராம். அவரின் உடல் ஒடுக்கப்படும். உள்ளமும் முறிந்துவிடும். தொடக்கத்தில் வெற்றி கிடைத்தாலும், பின்னர் அதை இழப்பார். இழந்ததை மீண்டும் அடையவேண்டும் என்ற வெறித்தனமே எல்லா சூதாடிகளுக்குள்ளும் குடிகொள்ளும். அப்படித்தான் தர்மர் தன் சொத்துகளை மீட்க தன் தம்பிகளை வைத்து சூதாடுவார். இழப்பார். தன் தம்பிகளை மீட்க தன் மனைவியை வைப்பார். சூதாடி இழப்பார். இறுதியில் போரும் அழிவும்தான். நம் சேமிப்பையும், வாழ்வையும் இழக்காமலிருக்க பங்குச் சந்தை சூதாட்டத்திலிருந்து (எஃப் & ஓ) ஒதுங்கியே இருப்போம்.
***********************************
(22.01.2025 அன்று இந்து தமிழ் திசையில் வெளிவந்த நடுப்பக்கக் கட்டுரையின் முழுவடிவம்)
கட்டுரையை தமிழ் இந்துவில் வாசிக்க…