உள்ளொன்று வைத்து புறமொன்று பேசா நிலை வேண்டும்…3

பகை என்பது மிகப் பொல்லாதது. முளையிலேயே அதைக் கிள்ளி எறிந்து அதை நட்பாக மாற்றிக் கொள்வது அவசியம். பக்கத்து வீட்டுப் பகை கூட நமக்கு எவ்வளவு சேதம் ஏற்படுத்தும் என்பது அதை அனுபவித்தவர்களுக்குப் புரியும். வேறு ஒரு இனத்தின் மீது, வேறு ஒரு மொழி பேசும் மக்களின் மீது, வேறு ஒரு மதத்தைக் கடைப்பிடிக்கும் மக்களின் மீது நாம் எக்காரணம் கொண்டும் கோபமோ, பகையோ கொள்ளக்கூடாது. ஒரு மொழிக்காரனாக, ஒரு மதக்காரணாக, ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்தவனாக நம்மை உருவாக்கிக் கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால் அதுவே வெறியாக மாறி விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அப்படிப் பகைகொள்ளத் தூண்டும் அரசியல் கட்சிகள் மீதும், கருத்தியல்கள் மீதும் காறி உமிழ்ந்தால் கூடத் தப்பில்லை. இனப் படுகொலைகளின் வேர்கள் ஏதோ ஒரு சிறிய வெறுப்புணர்வில்தான் காலூன்றி நிற்கிறது. காஸாவின் கல்லறைகளில் துயிலும் பிஞ்சு முகங்கள் நமக்கு இதைத்தான் உணர்த்துகின்றன. (15-12-2024)
******************************
உலகில் ஹிட்லர் என்னும் ஒரு கொடியவன் இருந்தான் என்று வரலாற்றின் பக்கங்களிலிருந்து தெரிந்து கொள்கிறோம். அவனுடைய நாஜிக் கருத்தியல் இவ்வளவுப் படுகொலைகளை நடத்திட இயலுமா என வியக்கிறோம். குழந்தைகளை, சிறுவர்களை, முதியவர்களை, பெண்களை அவன் வதைத்துக் கொன்றவிதம் நம்மை பித்துப் பிடித்த நிலைக்குச் செலுத்திவிடும்.ஆனால் அவனுடைய அந்தக் கருத்தியலும், அதைப் பின்பற்றிய அவனது கூட்டமும் செய்த படுகொலைகள் எண்ணிப்பார்க்க முடியாதவை. ஆனால் நம் கண்முன்னே, நாம் வாழும் காலத்திலேயே நாம் இப்படிப்பட்ட இன அழிப்புப் போரை பார்த்துக் கொண்டிருக்கிறோம். கைகட்டி, கண்களால் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பாலஸ்தீன இன அழிப்பை மேற்கொண்டிருக்கும் நேதன்யாகு மற்றும் அவனுடைய பரிவாரங்களை ஐ.நா அமைப்பும், மனித உரிமை அமைப்பும், சர்வதேச நீதி மன்றமும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதுவரை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் 75 விழுக்காடு பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும்தான். இப்படித்தான் அன்று ஹிட்லரை எதிர்த்து யாரும் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆனால் இன்று பால்ஸ்தீன இன அழிப்பைத் தடுத்து நிறுத்தும் அதிகாரத்தையும், பலத்தையும், கடமையையும் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பெற்றிருக்கும் போதிலும் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இன அழிப்பை வேடிக்கை பார்க்க மட்டுமே அவர்களால் முடிகிறது. இன அழிப்புக் குற்றவாளி – நேதன்யாகு மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் பைடனும்தான். தன் வரலாற்றுக் கடமையை மறந்துபோயிருக்கும் பைடன், குற்றவாளி என தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் தன் மகன் ஹன்டர் பைடனுக்கு மன்னிப்பை வழங்கியிருக்கிறார். ஆனால் ஜோ பைடனை என்றுமே உலகம் மன்னிக்காது. (13-12-2024)
புறக்கணிப்பு
புறக்கணிப்பு என்பது மிக மோசமானது. ஒருவரை அவர் பெறத் தகுதியானதைப் பெற விடாமல் செய்யும் அனைத்து முயற்சிகளையும் புறக்கணிப்பில் சேர்க்கலாம். மனு தர்மம் பிரிவினை செய்திருக்கும் உயர்சாதி அல்லது ஆதிக்கசாதிக்காரன் அந்தப்படிநிலையில் கீழ் இருக்கும் மனிதர்களை( ஆண்களையும், பெண்களையும்) – கீழ்சாதிக்காரர்கள் எனப்படுபவர்களை நடத்தும் விதம் ஒரு வித புறக்கணிப்பு நிலை எனலாம். ஒரு கட்சியில் ஒருவரின் தகுதியை மதிப்பிடாமல், வேறு வரையறைகளின் கீழ் தகுதியற்ற ஒருவருக்கு பதவிகளையும், பொறுப்புகளையும் கொடுப்பது என்பதும் ஒருவித புறக்கணிப்பு நிலைதான். சமூகத்திலும், பணியாற்றும் இடங்களிலும் புறக்கணிப்பு என்பது அபரிதமாக வளர்ந்திருக்கிறது. புறக்கணிப்பை எப்படி எதிர்கொள்வது? புறக்கணிப்பை சகித்துக் கொண்டு அப்படியே தொடர்வதா? அல்லது அதை எதிர்த்துக் கிளர்ச்சி செய்வதா? இவ்விருவழிகளிலும் முயற்சி செய்து புறக்கணிப்பை வெற்றி கண்டோரும் உண்டு. தோல்வி அடைந்தோரும் உண்டு. புறக்கணிக்கப்பட்டவரின் மனிநிலை மிக முக்கியம். அவர் தனக்கான ஆதரவை எப்படி திரட்டிக்கொள்கிறார் என்பது மிக முக்கியம். தன்னிடம் எங்கோ ஒளிந்துகொண்டிருக்கும் தன்முனைப்பை அவர் அறவே ஒழித்துக்கட்ட வேண்டும். எவரையும், யாரும் வேண்டுமென்றே புறக்கணிக்கவேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் இருக்க முடியாது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறோம் என உணரும் பட்சத்தில் அமைதியாக வெளியேறிவிடுவதில் தவறே இல்லை. (12-12-2024)